Sunday, April 10, 2011

சுத்த தன்யாசி - மென்மையான சோகம்


இன்று காலை ரசனை மிகுந்த நண்பர் வேணுகோபால் அவர்களிடம் பேசும் போது தியாகம் படத்தில் வரும் வசந்தகாலக் கோலங்கள் என்ற பாட்டு தனக்கு மிகவும் பிடிக்குமென்றார். காலை முழுதும் ஜானகியின் மிகச்சிறந்த அந்தப் பாடலே என் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.பின்பு புல்லாங்குழலிலும் அதை வாசித்துக் கொண்டே இருந்தேன் சுத்த தன்யாசி ராகம் அப்படியே ஆளை மயக்கக் கூடியது. ஒரு பாடலிலிருந்து இன்னொன்று என்று வரிசையாக சுத்த தன்யாசியாய் வந்து போனது.

       சுத்த தன்யாசி எளிமையான ராகம். ஸ க ம ப நி ஸ் ஸ் நி ப ம க ஸ . அவ்வளவுதான்.ஆனால் எத்தனை அருமையான பாடல்கள். கர்னாடக சங்கீதத்தில் சுத்த தன்யாசி என்றதும் என் நினைவிற்கு வருவது எம் எஸ் அம்மா பாடிய அன்னாமாச்சாரியார் கீர்த்தனை ‘பாவமுலோனா” தான்.சினிமாவில் கல்யாண வீட்டைக் காட்டும் போது நாதஸ்வரத்தில் இந்தப் பாட்டைத் தான் வாசிப்பார்கள்.அடுத்தமுறை கவனியுங்கள். 


                        அதே மாதிரி ஜி என் பி யின் ஹிமகிரிதனயே. அற்புதமான பாடல்.ஏனோ கர்னாடக சங்கீதத்தை விட மெல்லிசையிலும் திரை இசையிலும் இந்த ராகம் பிரபலமானது.(மத்யமாவதி போல்).கொஞ்சம் மேற்கத்திய சாயலும் இருப்பதாலும் இருக்கலாம்.
   

     சுத்த தன்யாசி என்றால் ‘பலே பாண்டியாவில்’ வரும் ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ தான் நினைவுக்கு வரும்.சுத்தமான சுத்த தன்யாசி.டி எம் எஸ் அமர்க்களம் செய்திருப்பார்.கடைசியில் காமெடி பண்ணியிருந்தாலும் அற்புதமான ஸ்வரக் கோர்வைகளுடன் விளங்கும் பாட்டு.மெல்லிசை மன்னர் மெல்லிசை விருந்தாய்ப்  பண்ணியிருக்கும் (ராமமூர்த்தியுடன்) இன்னொரு சுத்த.தன்யாசி பாடல் ‘தொட்டல் பூ மலரும்’ (படகோட்டி).அற்புதமான இசை இணைப்புக்கள் (interlude).ஆனால் பி.சுசிலாவின் குரலும் இசையும் சேர்ந்து மயக்கும் ஒரு அதி அற்புதப் பாடலை எம் எஸ் வி கர்ணன் படத்தில் தந்திருப்பார்.கண்கள் எங்கே என்ற அந்தப் பாடலைக் கேட்பதற்கே பூர்வ ஜன்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும்
              

    இசை ஞானி சும்மா விடுவாரா?. முப்பதுக்கும் மேல் சுத்த தன்யாசிப் பாடல்கள்.பல கலப்பினப் பாடல்கள். மேலே சொன்ன வசந்த காலக் கோலங்கள் ஒரு க்ளாசிக்.பெரும் பாலும் இனம் புரியாத சோகத்தை வெளிப்படுத்தப் பயன் படுத்தி இருக்கிறார். சத்ரியனில் வரும் ‘மாலையில் யாரோ ‘ மறக்க முடியுமா? ஸ்வர்ணலதா நம்மிடையே இல்லை .எனினும் அப்பாடல் அமரத்துவம் பெற்ற பாடல்.இந்தப் பாடலின் துவக்கத்தைக் கேளுங்கள்.வானிலிருந்து ஆயிரமாயிரம் பன்னீர் புஷ்பங்களை நம் மேல் சொரிவது போல் இருக்கும்.
        

       அதே போல் இளமைக் காலங்களில் வரும் ‘ராகவனே ரமணா’ வும் ஒரு அக்மார்க் சுத்த தன்யாசி.ஸ்ரீ ராமச் சந்திரா என்று பி சுசிலா எடுக்கும் இடமும்,ஆரம்பத்தில் வரும் ஆலாபனை மற்றும் ஸ்வரக் கோர்வைகளும் அற்புதமாய் இருக்கும்.

    சிறு பொன்மணி அசையும் (கல்லுக்குள் ஈரம்) சுத்த தன்யாசியில் ஒரு வித்தியாசமான முயற்சி.இன்று தம்தம்தன தாளம் வரும் பாடலைப் போல் அதுவும் திரைப்படங்களில் காதலைக் கிண்டல் செய்யும் போது (உ-ம் காமெடியன் ஒரு பெண்ணைப் பார்த்து மயங்கும் போது) பின்னணியில் ஒலிக்கிறது.  
     ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த’ அலைகள் ஓய்வதில்லைப் பாடலும் சுத்த தன்யாசிதான்.ஸ்வரங்களுடன் இணைந்த குரலும்,வரிகளும் சற்றி சிரமமான தாளக்கட்டும் மறக்கமுடியாதவை.
ஆயிரம் மலர்களே மலருங்கள் என்று ஜென்சியின் தேன் தடவிய உச்சறிப்பில் (வல்லின ற -வேண்டுமென்றே போட்டது) ஒரு சுத்த தன்யாசி மெல்லிய சோகம் இழையோடியபடி வரும்.
    உன்னால் முடியும் தம்பியில் ஒரு நல்ல காட்சி. புஞ்சை உண்டு நஞ்சை உண்டு என்று கமல் பாடியிருப்பதைக் கேட்டு “சுத்த தன்யாசியா இது அசுத்த தன்யாசி என்று கோவித்துவிட்டுப் பின் மனோரமாவிடம் கமலைப் புகழ்வார்.
      இதே ராகத்தை அவ்வப்போது வேகமான பாடல்களுக்கும் சுத்த தன்யாசியைப் பயன்படுத்தியிருப்பார் .பாடாமல் பார்த்த நெஞ்சம்( பூந்தோட்டக் காவல் காரன்),பாடும் நேரம் (சூர சம்ஹாரம்) ,ஒ மானே மானே (வெள்ளை ரோஜா),ஏ உன்னைத் தானே (காதல் பரிசு).பெரும்பாலும் கேலி,போட்டிப் பாடல்களுக்குப் பயன்படுத்தி இருக்கிறார் இந்த ராகத்தை.(பூ மாலை -தங்க மகன்).
     பிற்காலத்தில் செம்பூவே பூவே (சிறைச்சாலை),ஆனந்தக் குயிலின் பாட்டு (காதலுக்கு மரியாதை ) போன்ற மெல்லிசைப் பாடல்களை இந்த ராகத்தில் தந்திருக்கிறார்.ராசையா படத்தில் வரும் 'காதல் வானிலே' என்ற பாடல் வித்தியாசமான தொடக்கத்துடன் அமைந்திருக்கும்.
       தேவாவும் தன் பங்குக்கு நினைத்தேன் வந்தாய் படத்தில் மல்லிகையே மல்லிகையே என்று ஒரு நல்ல சுத்த தன்யாசியைத் தந்திருப்பார்.
       இணையத்தில் தேடினால் இன்னும் நிறையக் கிடைக்கும்.ஆனால் தேடாமலே நினைவில் நின்ற பாடல்களே சிறந்தவைஎனவே அவற்றை மட்டும் பேசியிருக்கிறேன்.சுத்த தன்யாசி-- மாலை நேர மயக்கம்!!

4 comments:

  1. அன்பிற்குரிய நண்பருக்கு

    அடேங்கப்பா...ஒரு சின்ன உரையாடல். இசையின் லயிப்பில் எனது பகிர்வு. அதில் கலந்து மிதந்த உங்கள் துடிப்பு. அடுத்த சில நிமிடங்களில் உங்களை உங்களது இசை ரசனைக்குள் பறிகொடுத்து அதில் பிரவகித்த நதியை வலைப்பூ குடுவைக்குள் அடைத்து யாரும் அள்ளிப் பருக இத்தனை ஏற்பாடா....
    ராமானுஜமா, ரசனைக் களஞ்சியமா...

    வாழ்த்துக்கள்....
    பாடல் ஒவ்வொன்றையும் ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
    வசந்த காலக் கோலங்களை நீங்கள் குழலில் வாசித்தது எனக்காக என்பது என்னுள் ஏற்படுத்தும் பெருமிதத் தோழமையை விளக்க வார்த்தைகள் இல்லை...

    குழலினிது யாழினிது என்பதம் தோழர்
    அழகுள்ளம் அறியா தவர்..

    எஸ் வி வி

    ReplyDelete
  2. I wish to write in Tamil, but I do not want to mar its beauty. All the songs you have mentioned here are all time hits and always linger in any music loving soul.These songs have popularised the raga சுத்த தன்யாசி among even those people who are not affluent with ragaas and its chayals.A well written article which will now always come to mind, when ever we hear these songs. Have a Vendukol- why cannot you try the raga Sahana..it is an al time மயக்கம் for me. thank you

    ReplyDelete
  3. i have more than 15gb all melody songs from sivaji,mgr[msv & others] period to now raja, rahman, yuvan, harris,vidyasagar,[rajini,mostly kamal] gv prakash, james vasanthan and more melodies. next time when i meet u, i want to give a copy of my melody collection[in a pendrive] plz. accept.

    ReplyDelete
  4. காதல் பரிசு படத்தில் வரும் ஏய் உன்னைத்தானே வேகமான மெட்டில் அமைந்த சுத்த தன்யாசி!

    ReplyDelete