Wednesday, April 27, 2011

வரையாது சுரக்கும் வள்ளியோய்

             நம் மக்களைப் பதினைந்து மாடிக் கட்டிடத்தின் மேலிருந்து குதிக்கச் சொல்லிங்கள்.தயங்காமல் குதிப்பார்கள்.ஆனால் அடுத்தவரைப் புகழச் சொல்லுங்கள் .மிகவும் தயங்குவார்கள்.ஆனால் ஒரு நல்ல ரசிகன் பாராட்டுவதற்குத் தயங்கவே மாட்டான்.
       அப்படிகொரு நல்ல ரசிகர் எஸ் வி வி என்று அன்புடன் அழைக்கப் படும் எஸ் வி வேணுகோபாலன். சுப்பையா, சேகர், சஹஸ்ரநாமம்.ரங்காராவ் என்ற பெயர்களைக் கொண்டவர்கள் பிரபலமடைந்த அதே எஸ் வி என்ற முதலெழுத்துக்கள்.
       நான் எழுதிய கட்டுரை ஒன்று ஹிந்து நாளிதழில் வந்தது.அதைப் படிக்குமாறு நண்பர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தேன்.அது புதுவருடத்தின் இரண்டாம் நாள்.பல நண்பர்கள் நான் அனுப்பியுள்ள குறுஞ்செய்தியைப் பார்க்காமலேயே 'WISH YOU THE SAME' என்று பதில் அனுப்பியிருந்தனர் .அந்த நேரத்தில் தானே வலிய வந்து என் கட்டுரையைப் படித்து ஹிந்து நாளிதழுக்குப் பாராட்டிக் கடிதம் தீட்டியதுடன் என்னையும் தொடர்பு கொண்டார். அன்று துவங்கிய நட்பு பல் வேறு தளங்களில் தொடர்கின்றது.
     எஸ் வி வி முழுநேர ரசிகர். மனிதர். இந்தியன் வங்கியில் பணி புரிகிறார். தொழிற்சங்க வாதி.இலக்கிய ரசனை மிகுந்தவர். மத்திய வர்க்கத்தின் முன்னுதாரண குடும்பத் தலைவர். எழுத்தாளர்.இவை எல்லாவற்றையும் விட மற்றவர்களைப் பாராட்டுவதில் விசும்பின் கருவி வானம் போல வரையாது சுரக்கும் வள்ளலாய் விளங்குவார்.
        இலக்கிய உலகில் அடுத்தவர்களை வஞ்சகமின்றிப் பாராட்டுவது அரிது. தி.க.சி இன்றும் இலக்கியப் படைப்புக்களைப் பாராட்டிக் கடிதங்கள் போடுகிறார்.அது போல் எஸ் வி வியும் பிறரது படைப்புக்களைப் பாராட்டுவதில் முதல் நபராய் இருப்பார்.
       உமது தமிழோடு விளையாடவே யாம் இங்கு வந்தோம் என்பது போல் தமிழின் வார்த்தைகளோடு விளையாடுவதில் நிபுணர் அவர். சோர்வுற்ற போது அவருடன் அடிக்கடி விளையாடும் வார்த்தை விளையாட்டு அஞ்சால் அலுப்பு மருந்து என அஞ்சாமல் சொல்லலாம்.
அவர் ஏற்கனவே நிறைய எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதை அறியாமல் நான் அவரிடம் நீங்களும் எழுதலாமே என்று  அவருக்கு எழுதினேன்.அவரும் முயற்சி செய்கிறேன் என்று பதிலளித்திருந்தார்.
      பல நண்பர்களை அறிமுகப்படுத்தும் பாலமாகவும் இருக்கிறார்.ஹிந்து கேஷவ், புதிய ஆசிரியன் ராஜு எனப் பலரது அறிமுகமும் எனக்குக் கிடைத்தது இவர் மூலமே.
தீக்கதிர்,செம்மலர் புதிய ஆசிரியன் என்று பல்வேறு இதழ்களில் இவரது படைப்புகளைக் காணலாம்.
ஹிந்து வாசகர் கடிதம் பகுதியில் திருவனந்த புரம் முகுந்த் ராஜன் ,சென்னை காசிம் சேட் இவர்களுடன் அடிக்கடி எஸ் வி வேணூகோபாலன் பெயரும் இடம் பெறும். N.ராம் அவர்கள் படிப்பதற்கு முன்னாலேயே இணையத்தில் ஹிந்துவைப் படித்து நம் பதிவு வந்திருந்தால் பாராட்டுவார்.
ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கையில் மும்முரமாய் இருப்பார்.மறுநாள் சாகித்ய அகாதமி கூட்டத்தில் இருப்பார்.
குறைந்த பட்ச தேவைகளுடன் வாழ்கிறார். வங்கியில் இருந்தாலும் ATM, Internet Banking போன்ற நவீன நுகர்வு சமாச்சாரங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கிறார். (அந்த வங்கிக் கேஷியர் பணத்தைக் கையால கூட தொடமாட்டார் என்ற நகைச்சுவை ஞாபகத்திற்கு வருகிறது)
        அவரது நட்புக் கிடைத்தது ஒரு ந்ல்லூழ்.அவரைப் பற்றி நான் எழுதிய ஒரு வெண்பா      
                கதைகள் கடிதங்கள் கட்டுரைகள் தாமென்(று)

                எதையும் எழுதிடுவார் இங்கே-- சிதையாது
                பேணுவார்  மாறாப் பிரியமுடன் நம்நட்பை      
                வேணுகோ பாலன் விழைந்து. 
அவரது மின்னஞ்சல் sv.venu@gmail.com
    

3 comments:

  1. avar enakku nanbaranathum ippadiththan. en oru kathaikkaga paaraatuk kaditham ezhuthiyathil thodagiyathu engal natpu.

    ReplyDelete
  2. அன்பிற்குரிய நண்பருக்கு

    உண்மையிலேயே அவரை எனக்குத் தெரியாது. அவரது முழுமையான அடையாளத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு நீங்கள் அறிமுகப் படுத்தியிருக்கும் நபர் பற்றி (நல்ல வேளையாக உங்களது தொடர் குறுஞ்செய்தி பார்த்தபிறகும் அவர் தமது படத்தை உங்களுக்கு அனுப்பாமல் விட்டது நல்லதாகப் போயிற்று.. ) நான் அறிந்தவை:

    சுறுசுறுப்பாகக் காட்டிக் கொள்ளும் சாதுரியம் பழக்கிக் கொண்ட சோம்பேறி.

    எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை விட வாசிக்க வேண்டும் என்ற கர்வம் மிகுந்த காட்டேரி (ஓசை நயத்திற்காக..)

    எப்போதோ படித்ததையும் கேட்டதையும் ஏதோ நிறைய அறிந்தவர் மாதிரி அடுத்தவரிடம் ஒப்பித்துக் காட்டியே பேர் வாங்கும் போலி அறிவு ஜீவி.

    ஆனால் வற்றாத அன்பால் எல்லோரையும் வென்றுவிட முடியாதா, யாரது கோபத்தையும் சம்பாதிக்காமல் வாழ்நாள் கழிந்துவிடாதா என்று ஏங்கும் (வெகுளி என்று சொல்ல முடியாது ) பிறவி.

    தாம் இன்புறுவது பிறர் இன்புறக் கண்டு காமுறத் துடிக்கும் பாமரன். (அடேங்கப்பா, இங்கும் ஓசை நயம்..)

    மற்றபடி, நீங்கள் மேற்படியான ஒரு சாதாரணத் தோழரை இத்தனை உள்ளார்த்தமாக நேசிப்பது அவரது கண்களை ஈரமாக்கியதாக அறிந்தேன். கூச்ச சுபாவத்தோடு சிறுவயதிலிருந்தே வளர்ந்த பிரகிருதி அவர் என்று சொன்னால் கேட்பவர்கள் சிரிக்கத்தான் செய்கின்றனர். கூட்டத்திலே நின்று கொண்டிருந்தாலும், குடும்பத்திலே பேசிக் கொண்டிருந்தாலும், இப்போதும் பெரிய தனிமை கொண்டாடி அந்த ஆள் என்பதை மட்டும் எச்சரிக்கையாகச் சொல்லி வைக்கிறேன்.

    உங்களது வெண்பாவிற்கு அந்த நுனிப்புல் மே(ய்)தாவி எதிர் வெண்பா எழுதிக் கொண்டிருந்ததை எட்டிப் பார்த்ததில் அது இப்படி இருந்ததைக் கண்டேன்:

    அன்பால் 'அளக்கும்' அறிவார்ந்த நண்பரவர்
    என்பால் உணர்ந்தாரோ இத்தனையும் - தன்பால்
    வதியும் குணங்களென வண்ணமாய்க் கொண்டாடிப்
    பதிவும் புனைந்தாரே பார்.

    எஸ் வி வி

    ReplyDelete
  3. டாக்டர்,
    உங்கள் எள்ளல் நடை ஆங்கிலத்தில் உள்ளது போலவே தமிழிலும் அற்புதமாக இருக்கிறது.வேணுவை பற்றிய உங்கள் மதிப்பீடு 200 சதவீதம் உண்மை.படைப்பாளியை உச்சி முகர்வதும் அவசியம் தானே? 200 மீட்டர் தொலைவில் இருக்கும் உங்களை பற்றி நான் அறிந்ததை விட அவர் அதிகமாகவே அறிந்து இருப்பார்.அது தான் வேணு.உங்கள் ஹிந்து பேப்பர் open page articles அனைத்தையும் என்னை படிக்க சொல்லி n .ராம் படிக்குமுன் எனக்கும் தெரிவிப்பார்.அருமையான அந்த வாசிப்பாளருக்கு கட்டுரை மூலம் மகுடம் சூட்டியுள்ளீர்கள்.
    நாறும்பூ

    ReplyDelete