Thursday, April 28, 2011

த்ரிஷாவும் திருக்குறிப்பு நாயனாரும்

 தமிழ் இலக்கிய வட்டாரத்தில் 'வாசிப்பு இன்பம்' என்ற சொல் அடிக்கடி புழங்கும்.எந்த சூழ்நிலையிலும் வாசிக்கத் தக்க ,ஆரம்பத்திலிருந்து இறுதி வரை வாசிப்பைச் சுவாரஸ்யம் ஆக்கும் படைப்புக்களை உருவாக்குவது அருங்கலை.கச்சேரிகளைக் குறிப்பிடும் போது 'களைகட்டி விட்டது என்று கூறுவோம்.அது போல் எப்போதும் சோடை போகாத எழுத்துக்கள் சிலருக்குத்தான் வாய்க்கும். ஆங்கிலத்தில் வுட் ஹௌஸ், ஜெஃப்ரி ஆர்ச்சர் போன்றவர்கள் எழுத்து அவ்வகையானது. தமிழில் கல்கிக்குப் பின் அந்த இடத்தை வெகுகாலம் ஆக்கிரமித்தவர் சுஜாதா என்று தயங்காமல் கூறலாம்.எந்த விஷயத்தையும் அவரது அபார நடைமூலம் சுவாரஸ்யமாகச் சொல்லிவிடுவார்.ஒரு முறை ஜெட் லாக் பற்றிக் குறிப்பிடும் சுஜாதா 'நாளை கிளம்பி நேற்று வந்து சேர்ந்தோம்' என்று குறிப்பிடுகிறார்.அவரது எழுத்துக்கள் கனமானவை அல்ல மேலோட்டமானவை என்ற விமர்சனங்கள் இருக்கின்றன.இருப்பினும் அந்த எழுத்துக்களை வாசிப்பு இன்பத்திற்காக இன்றும் வாசிக்கலாம்.

அது போல் வாசிப்பை ஒரு இனிய அனுபவமாக்குபவை அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள்.எந்த ஒரு சொல்லும் அலுப்பூட்டாமல் இருக்கும் எழுத்து அவருடையது.அவர் பெயரை நான் கவனிக்க ஆரம்பித்தது 2004 வாக்கில் உயிர்மை, தீராநதி போன்ற இதழ்களில் வெளிவந்த அங்கதம் நிறைந்த கட்டுரைகளை வாசித்த பின்புதான்.
ஆனால் நான் அவரது பெயரைக் கவனிக்காமல் இருந்திருக்கிறேன் என்று இன்று தெரிந்து என்னையே நொந்து கொண்டேன்.இன்று வெளிவந்த ஆனந்த விகடனின் 'பொக்கிஷம்' பகுதியில் அவர் 1999 இல் எழுதிய 'எல்லோர்க்கும் பெய்யட்டும் மழை' என்ற கட்டுரை மீண்டும் வந்துள்ளது.அதில் நடிகை த்ரிஷா மிஸ் சென்னையாகத் தேர்வு செய்யப்படக் காரணமாக இருந்த கேள்வியான 'மனிதனுக்குத் தேவையான முக்கிய குணம் என்ன? என்பதற்கு அவர் 'நேர்மை' என்று பதிலளித்த செய்தியிலிருந்து தொடங்குகிறது கட்டுரை.
எல்லோருக்கும் தெரிந்த காக்காய் வடைக் கதையின் நீதி (moral) யையே கேள்விக்குரித்தாக்குகிறார் அ.மு.  ஒரு அமெரிக்கச் சிறுமி 'வாயிலே உணவை வைத்துக் கொண்டு பேசக் கூடாது என்பதே இக்கதையின் நீதி' என்று கூறும் இடம் நல்ல நகைச்சுவை. ஏமாற்றினால் பிழைக்கலாம் என்ற நீதியைப் போதிக்கிறது அக்கதை என்கிறார்.
அதே போல் விறகுவெட்டி கோடாரியைத் தொலைத்த கதையும் நேர்மையாக இருந்தால் செல்வம் சேர்க்கலாம் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.ஆனால் நேர்மைக்கும் செல்வம் சேர்ப்பதற்கும் ஒருவிதத் தொடர்பும் இல்லை என்கிறார் .வேறு எதற்காகவும் இல்லாமல் நேர்மையாக இருப்பது ஒரு அறம் .அதற்காக நேர்மையாக இருக்க வேண்டும் என்பது அ.மு வின் கருத்து.அறம் என்று ஒரு பிரமாதமான சிறுகதை ஒன்றை ஜெயமோகன் எழுதியிருப்பது நினைவு இங்கு கூரத்தக்கது.
அதன்பின் திருக்குறிப்பு நாயனார் கதை இக்கட்டுரையில் வருகிறது.அடியார்களின் துணிகளைச் சலவை செய்துதரும் பணியில் ஒரு நாள் மழை பெய்து துணியை உணர்த்த முடியாமல் போய்விடுகிறது. அது அவர் பிழை அன்று என்றாலும் மனசாட்சி உறுத்தத் தன் தலையைக் கல்லில் முட்டிக் கொண்டது அவரது நேர்மையைக் காட்டுகிறது.
 பின்னர் அ.மு. விற்கு ஆப்பிரிக்காவில் ஏற்படும் அனுபவத்தைக் கூறுகிறார்.தன்னுடைய இரு குழந்தைகள் இறந்ததும் அவர்களுக்காகக் கொடுக்கப்படும் குழந்தைப் படி இனி வேண்டாம் என்று கூறும் ஒரு படிப்பறிவில்லாத தொழிலாளியின் நேர்மை நெகிழ வைக்கிறது.நம் ஊரிலும் சுனாமியால் இறந்ததாகக் கருதப்பட்ட தன் மகன் உயிருடன் வந்த பின் அவர் இறந்து விட்டதாக எண்ணி வழங்கப் பட்ட நஷ்ட ஈட்டை அரசாங்கத்திடமே திருப்பிக் கொடுத்த தந்தையின் கதை செய்திகளில் வெளிவந்தது.
த்ரிஷா, காக்காய் வடை கதை, திருக்குறிப்பு நாயனார் என்று பலவிதமான சம்பவங்களைத் தொகுத்து சுவாரஸ்யமாகத் தந்திருக்கும் அ.முத்துலிங்கத்தின் எழுத்து அன்று போல் இன்றும் வசீகரமாகவே உள்ளன.
அவரது கதைகள் தன்மை(first person) யிலேயே பெரிதும் எழுதப்படுகின்றன. அதுவே கட்டுரைக்கும் புனைகதைக்கும் உள்ள இடைவெளியை வெகுவாகக் குறைகின்றன.கட்டுரைகள் புனைகதை போல் சுவாரஸ்யமாகவும் கதைகள் வரலாற்று, புவியியல்  தகவல்களோடு கட்டுரை போல் செறிவாகவும் தோன்றும் எழுத்துக்கள் அவருடையது.அவரது ஒரு  நூலின் தலைப்பே 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்' தான்.
உலக உருண்டையில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்த அனுபவமும், உலக இலக்கியத்தின் ஆழ்ந்த வாசிப்பும் இவரது எழுத்தில் காணலாம். உலக எழுத்தாளர்களை இவர் பேட்டி கண்டு எழுதிய நூலான 'வியத்தலும் இலமே' நம்மை வியக்க வைக்கும்.
திருநெல்வேலி பகுதியில் 'தன்மையாகப் ' பேசுகிறான் என்றால் இனிமையாகப் பேசுகிறான் என்று பொருள்.அ.மு.தன்மையாக எழுதுகிறார்.
குறிப்பு: என்ன செய்வது !அ.மு வின் பெயரை விட த்ரிஷாவின் பெயரைத் தலைப்பில் வைப்பதுதான் கவர்ச்சிகரமாக இருக்கிறது!த்ரிஷாவின் படத்தைக் கூடப் போட்டிருக்கலாம்.ஆனால் நமக்கும் நேர்மை என்று ஒன்றிருக்கிறதல்லவா?

5 comments:

  1. சுவாரசியமாகவும், இயல்பாகவும் பேசும் மொழிநடை உங்களுக்கு வாய்த்திருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே.

    கூகிள் ரீடரில் உங்கள் வலைப்பகத்தை இணைத்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. நல்ல பதிவு.
    நான் ஆரம்ப காலத்திலிருந்து திரு சுஜாதாவின் எழுத்துக்களை படித்து வருகிறேன்.
    நான் அவருக்கு அனுப்பிய 'தமிழக நாடார் வரலாறு' என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து தான் 'ரத்தம் ஒரே நிறம்" என்ற தொடர்கதையில் குமுதத்தில் எழுதினர்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  3. நன்றாக இருந்தது. தன்மையா? தண்மையா?

    ReplyDelete
  4. திரிசாவின் பதிலில் உள்ள நேர்மை
    உங்களிடத்திலும் உள்ளது
    அருமை

    ReplyDelete
  5. நீரோட்டம் போன்ற உங்களது எழுத்து நடை என் மனம் கவர்ந்தது. தெளிவான விமரிசனம் . கட்டுரையை முழுதும் படித்தது போல் தோன்றியது . நல்ல வாசிப்பனுபவம். மிக்க நன்றி !

    ReplyDelete