Thursday, October 6, 2011

நோயர் விருப்பம்.


(அக்டோபர் மாத 'புதிய ஆசிரியன்' இதழில் வந்தது)

வெகுகாலத்துக்கு முன் நடந்த சம்பவம் ஒன்று .ஒரு வயதான அம்மையார் மருத்துவரிடம் முட்டு வலி என்று சென்றார் ஒருவர். மருத்துவர் ஸ்டெத்தஸ்கோப்பை எடுத்தார். அப்போது அந்த நோயாளி கூறினார் “ நானும் எத்தனையோ டாக்டர்களிடம் காட்டிவிட்டேன் . யாருமே இந்தக் குழாயை முட்டில் வைத்துப் பார்க்கவே இல்லையே ராசா”. . உஷாரான அந்த மருத்துவர் ஸ்டெத்தஸ்கோப்பை முட்டில் வைத்துப் பார்த்தார். பாட்டிக்குப் பரம திருப்தி.அதில் வேடிக்கை என்னவென்றால் முட்டில் வைத்து விட்டுப் பழக்க தோஷத்தில் “ மூச்சை நல்லா இழுத்து விடுங்க “ என்றதுதான்.

ஒரு துணி எடுக்கச் செல்லும் போது நம் மனதில் ஒரு எதிர்பார்ப்பு இருப்பது போல் மருத்துவரிடம் செல்லும் போதும் நோயுற்றவர்களுக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். இன்ன வியாதிதான் நமக்கு, அதற்கு இதுதான் காரணம் , இதுதான் வைத்தியம் என்று ஒரு எதிர்ப்பார்ப்போடுதான் வருவார்கள். திறமையை விட இந்த நோயர் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதே ஒரு மருத்துவரைப் புகழ்பெற்றவராக்குகிறது.

எல்லா நோய்களுக்கும் ஊசி போட்டால் தான் சரியாகும் என்பது பெரும்பாலான நோயர் விருப்பமாக உள்ளது.அதிலும் சிலர் வலதுகை வலி என்று போனேன் இடதுகையில் ஊசி போட்டுவிட்டார்கள் என்று நுகர்வோர் நிதிமன்றம் வரை போவதுண்டு. நெல்லை டவுணில் ஒரு புகழ் பெற்ற மருத்துவர் இருந்தார். அவரது கிளினிக் திஹார் ஜெயில் போல் நிரம்பி வழியும் .காரணம் அவரது தனித்தன்மையே.  நாம் எந்தப் பகுதியில் வலி என்கிறோமோ அந்தப் பகுதியிலேயே ஊசி போடுவார். சற்றும் மிகைப்படுத்தலற்ற உண்மை இது. இது தெரியாமல் வரிசையில் காத்திருந்த ஒருவர் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் தலைதெறிக்க வெளியே ஓடிவிட்டார். வேறு ஒன்றுமில்லை அவர் மூலவியாதிக்காகச் சிகிச்சை வந்திருந்தார்.

இப்பொழுதெல்லாம் குழந்தை பெறுவது கூட இயற்கையாக அன்றி நாள் நட்சத்திரம் பார்த்துப் பெரியவர்களின் விருப்பப்படி தான் நடைபெறுகிறது. “ரோகிணி நட்சத்திரம் வேண்டாம். மாமாவுக்கு ஆகாது. அதனால இன்னும் இரண்டு நாள் கழித்துச் சிசேரியன் வைத்துக் கொள்ளலாமா டாக்டர்?” என்று கேட்பது சாதாரணமாகி விட்டது. எதிர்காலத்தில் மகப்பேறு மருத்துவமனைகளில் ட்யூட்டி டாக்டர் போல் ட்யூட்டி ஜோதிடர்களும் இருக்கலாம்.

நோயுற்றவரின் எதிர்பார்ப்பும், உடன் இருப்பவரின் விருப்பமும் வேறு வேறாக இருக்கும். மேலைநாட்டில் பத்து வருடங்களாக மூக்கடைப்பால் அவதிப்பட்டிருந்த ஒரு பெண் மூக்கடைப்பு சரியானதும் கணவர் மீது துர்நாற்றம் அடிக்கிறது என்று விவாகரத்து செய்துவிட்டார்.சில சமயம் நோய் குணமாகக் கூடாது என்று நோயாளியே நினைக்கலாம். திங்கட்கிழமை காலை வயிற்றுவலியால் பாதிக்கப்படும் குழந்தை போல். காது கேளாமையால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவரிடம் கூறினார் “தயவு செய்து எனக்குச் சரி செய்துவிடாதீர்கள் .என் மனைவியின் பேச்சைக் கேட்க முடியாது” .

எதற்காகச் சிகிச்சைக்கு வருகிறார் என்பதைத் தெளிவு படுத்திக் கொள்வது அவசியம். குடிப்பழக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவர் என்னிடம் வந்தார். “ குடிச்சுக் குடிச்சுக் கையெல்லாம் ரொம்ப நடுங்குது டாக்டர்.எப்படியாவது நீங்கதான் இதை நிறுத்தணும்” என்றார். “கவலைப் படாதீர்கள் ! உங்கள் குடிப்பழக்கத்தை நான் நிறுத்திவிடுகிறேன்” என்றேன். திடுக்கிட்ட அவர் “ அதெல்லாம் வேண்டாம் டாக்டர். இந்த கை நடுக்கத்தை மட்டும் நிறுத்துங்க! சரக்கெல்லாம் கொட்டி நிறைய வீணாகுது “ என்றாரே பார்க்கலாம்.
   
ஒரே வியாதியால் இருவர் பாதிக்கப்படலாம்.ஆனால் இருவரும் ஒன்றல்ல.நேயர் விருப்பம் போல் நோயர் விருப்பமும் தனித்தன்மையுடையதே.      

      

2 comments:

  1. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்

    ReplyDelete
  2. டாக்டர்,
    சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. உங்கள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போகிறேன். இது போல் குறைந்தது நூறு பதிவாவது எழுத வேண்டும் என்று தண்டனையும் வாங்கித் தரப் போகிறேன்.

    ReplyDelete