Tuesday, April 2, 2013

அழைக்காதே! பிழைக்காதே!


ஏப்ரல் மாத புதிய ஆசிரியன் இதழில் வந்த கட்டுரை

நண்பர் ஒருவர் ஒரு ஞாயிறு மாலை தன் குடும்பத்துடன் திரைப்படத்திற்குச் செல்லலாம் என்று நினைத்தார். போகும் வழியில் அவரது வண்டி பஞ்சராகி விட்டது. வண்டியைப் பழுது பார்க்கப் போதிய பணமில்லாததால் ஏ.டி.எம்மில் வங்கி அட்டையை நுழைத்தார். அது சிக்கிக் கொண்டு வெளியே வரமறுத்து விட்டது. உடன் என்னைச் செல்போனில் தொடர்பு கொண்டார். அதுவரை கோபப்படாமல் இருந்தவர் என்னுடைய தொலைபேசியை அழைக்கும் போது கேட்ட பாடலைக் கேட்டுவிட்டு கோபத்தின் எல்லைக்கே சென்று “என்ன பாட்டு வைச்சிருக்கீங்க? கொஞ்சம் கூடப் சமய சந்தர்ப்பம் இல்லாமல்” என்று என்னைச் சத்தம் போட்டார். வேறு ஒன்றுமில்லை என்னை அழைத்தால் நீங்கள் கேட்கும் பாடல் ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’.

இது போல் பலருக்கும் அனுபவம் நிகழ்ந்திருக்கும். வெளியூரில் மதியமும் அல்லாமல் மாலையும் ஆகாத ஒரு விடலையான பொழுது சாப்பிட எதுவுமே இல்லாமல் என்ன செய்வது என்று நண்பனை அழைத்தால் அவனது தொலைபேசியில் ‘கல்யாண சமயல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்’ என்று கண்டசாலா சப்புக் கொட்டிக் கொண்டிருப்பார்.

இரவு நேர ரயில்பயணத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்திய காலத்து அந்தமான் சிறைக் கைதிகள் போல் எலி, கரப்பான் பெருச்சாளி போன்ற விஷ ஜந்துக்களுக்கு மத்தியில் ஒருவழியாகத் தூங்கத் துவங்கும் போது உச்சஸ்தாயியில் ஒருவருடைய செல்போன் ‘தூங்காதே தம்பி தூங்காதே!’ என்று பாடும்.

பவர் கட்’ ஆகி மின்விசிறி ஓடாமல் நள்ளிரவில் கொசுக்கடியில் மின்வாரியத்தைச் சேர்ந்த நண்பரைத் தொலைபேசியில் அழைத்தால் ‘மின்சாரம் என் மீது பாய்கின்றதே’ என்று பாடல் கேட்டு நமக்கு ரத்தம் கொதிக்கும்.

இப்படித்தான் ஒரு பெரியவர் என்னிடம் இளைஞர்கள் எப்படியெல்லாம் கெட்டுப் போகிறார்கள் என்று வருத்தப்பட்டு உரையாற்றிக் கொண்டிருந்தார்.தொலைக்காட்சி திரைப்படங்கள் பாடல்கள் எல்லாம் எப்படிக் கலாச்சாரத் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரது செல்போன் ‘வாடா மாப்பிளை! வாழைக்கா தோப்பிலே வாலிபால் ஆடலாமா?’ என்று பாடியது. அவசரமாக தொலைபேசி அழைப்பைத் துண்டித்தபடி “ஹி ஹி! பேரன் எதோ செஞ்சு வைச்சிருக்கான். மாத்த முடியலை’ என்றார்

மருத்துவத்துறையிலும் இதுபோல் நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் அகாலமான அனுபவங்கள் நேரிடும். நோயாளி எப்படி இருக்கிறார் என்று உறவினர்கள் கேட்கும் போதே ‘போனால் போகட்டும் போடா!”என்று யாரோ ஒருவருடைய தொலைபேசி பாடத் துவங்கும்.

அதே போல் ஒரு மருத்துவரை அழைக்கும் போதெல்லாம் ஒரு பாடல் கேட்கும்.நல்ல பாடல்தான் ஆனால் நோயாளிகள் சற்று எரிச்சலடைந்து ‘டாக்டர்! ஃபீஸ் வேண்டுமென்றாலும் ஐம்பது ரூபாய் கூடத் தந்துவிடுகிறோம்.தயவு செய்து பாட்டை மாற்றுங்கள்!” என்று சொல்ல அரம்பித்துவிட்டார்கள். வேறு ஒன்றுமில்லை அந்தப் பாடல்- ‘நலந்தானா?’.

பொதுவாக நம் மக்கள் சகுனம், நேரம் போன்றவற்றை அதிகம் நம்புவார்கள். அதிலும் நோய்வாய்ப் பட்டிருந்தால் நோயாளிகளும் கூட இருப்பவர்களும் நல்ல நேரம் ராகு காலம் போன்றவற்றில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். அவர்கள் மருத்துவர்கள், மருத்துவம் சம்பந்தப் பட்ட நபர்களை அழைக்கும் போது ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா! ஆறடி நிலமே சொந்தமடா!’ ‘வாழ்வே மாயம்’ ‘வீடு வரை உறவு’ போன்ற பாடல்கள் ஒலிக்கும் போது நொந்தே போய்விடுவார்கள்.

ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் இருந்தார். திடீரென்று அவருக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. என்ன காரணமென்று அவருக்குத் தெரியவில்லை. அவரை அழைக்கும் போதுதான் தெரிந்தது. அப்போது ஒலித்த பாடல் ‘ உசிரே போகுது! உசிரே போகுது!!’.

1 comment:

  1. அருமையான பதிவு. நன்றி சார்.
    நலமாக இருக்கிறீர்களா, வாழ்த்துகள்.

    ReplyDelete