Sunday, July 31, 2011

விசிட்டாத்வைதம்

ஆகஸ்ட் மாத 'புதிய ஆசிரியன்' இதழில் வந்தது


                  ‘விசிட்’டாத்வைதம்
(ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்திற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது)

நோயுற்றிருப்பவரை மிகவும் அச்சுறுத்துவது நோயின் தீவிரமோ, மருத்துவமனை பில்லோ கூட அல்ல. அது நோயாளிகளைப் பார்க்க வருபர்கள் சிலரது செயல்பாடுகள்தான். மருத்துவ வட்டாரங்களையும் மிரள வைக்கும் ‘விசிட்டர்’ என்ற சொல்

நோயாளிகளைப் பார்ப்பது என்பதை ஒரு திருவிழா மாதிரி உற்சாகமாகக் கிளம்புவார்கள் சிலர். “ஆஸ்பத்திரிக்குப் போய் மாமாவைப் பாத்துட்டு அப்படியே சரவணபவன்ல போய் சாப்டுட்டு வீட்டுக்குப் போலாம்” என்று திட்டமிட்டுப் படையெடுக்கும் ஒரு கும்பல்.. வசிட்டர் வாயல் கூட பிரம்ம ரிஷிப் பட்டம் வாங்கி விடலாம். ஆனால்  விசிட்டராக வருபவர் வாயால் நல்ல தகவல் கிடைப்பது அபூர்வம்.

“நம்ம பரமசிவம் பையன் இப்படித்தான் சாதாரண ஜுரம்னு ட்ரீட்மெண்ட் எடுத்திட்டிருந்திருந்தான். கடைசில பாத்தா முத்தின டி.பி யாம்.” என்று திகிலூட்டுவதுடன் “இந்த ஆஸ்பத்திரியா ? நம்ம ராமசாமி வீட்டை விக்க வைச்சதே இந்த டாக்டர்தான்” என்று ஜப்தி செய்ய வந்திருக்கும் அமீனா அளவுக்கு மிரட்டுவதும் உண்டு .

நோயாளியைப் பார்பதற்கென்றே உரிய சடங்கு சாங்கியமான கட்டிதட்டிப் போன ஹார்லிக்ஸ், வாடிய ஆரஞ்சு (இவற்றை நோயாளியே பின்னர் வெளியில் விற்றுவிடுவார்)  போன்றவற்றைக் கொடுத்து  நோயாளியைப் பார்த்துவிட்டுச் சும்மாச் செல்பவர்கள் சிலரே. சிலருக்குத் தன் மருத்துவ அறிவை நிருபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும்.

மருத்துவருக்கே சரியாகப் புரியாத எக்ஸ்ரே, ஸ்கேன் போன்றவற்றை ஸ்டைலாகப் பிடித்து “என்ன சித்தப்பா! இங்க இவ்வளவு வெள்ளையா இருக்கு? “ என்று கருத்துக் கூறுவர் . அல்லது “ அக்கா! அரிசியை நல்லாக் களைஞ்சிருந்தா மச்சானுக்கு கிட்னில கல் வந்திருக்காதுல்ல! “ என்று இன்று ஒரு தகவல் கொடுப்பர்.

பிறகு பைநிறைய தாங்கள் கொண்டு வந்திருக்கும் அறிவுரைகளைப் பொழிந்து தள்ளும் படலம் ஆரம்பம். இன்னும் ‘மூணு வருஷத்துக்கு எந்த வேலையும் செய்யக் கூடாது !’ என்று வீட்டில் உலைவைப்பதற்கே உலைவைப்பார். அல்லது தினம் ‘அரைக்கிலோ பாகற்காய் சாப்பிட்டு கிழக்கிலோ வடக்கிலோ ஒரு கிலோமீட்டர் நடந்தால் நல்லது!” என்று என்றோ ஒரு நாள் முடி வெட்டிக் கொள்ள சலூனில் காத்திருந்த போது செய்தித்தாளில் படித்த செய்தியைப் பகிர்ந்து கொள்வார்.
விபத்தாக இருந்தால் கட்டாயம் ‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு’ என்ற பழமொழியை முன்மொழியாமல் போக மாட்டார்கள்.

நோயாளியிடம் தனக்கிருக்கும் அக்கறையை வெளிப்படுத்த “எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர். குணமாக்கிருங்க !” என்று மருத்துவர்களை உசுப்பேற்றுவதும் இவர்களே. பில்வரும் போதோ அந்தத் தொகுதிப் பக்கமே காணப்படமாட்டார்.

பல வருடங்களாக முகத்திலேயே முழிக்காமல்  இருப்பவர் ‘ஒரே ஒரு நிமிஷம் பார்த்திட்டுப் போறேன்’ என்று அவசரப் பிரிவில் சண்டையிடுவது மற்றும் இவ்வளவு நாள் ஒரு வாய் தண்ணீர் கூடக் கொடுக்காதவர் “ டாக்டர் ! இவர் ஆப்பிள் ஜூஸ் சாப்பிடலாம் தானே? “ என்று கேட்பது போன்றவை சில விசிட்டர்களின் விசேஷ குணங்கள்.

இவர்களைக் கலைக்கக் கண்ணீர்புகையை விட வலிய குண்டு ஒன்றை எங்கள் பேராசிரியர்கள் சிலர் பயன் படுத்துவதுண்டு. “சார்! நீங்க எந்த ப்ளட் க்ரூப்? நோயாளிக்கு ரெண்டு பாட்டில் இரத்தம் தேவைப் படுகிறது. கொஞ்சம் கூட வாங்க” என்றால் உடனே “காலையில் ஷேவ் பண்ணும் போது நிறைய ரத்தம் போயிடுச்சு….” என்று இழுத்த படியே காணாமல் போய்விடுவார்கள்.

“கேட்டிலும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளக்குமோர் கோல்”—குறள்

நல்ல நண்பரை அளக்கும் கருவியாக இருப்பதால் கெடுதியிலும் ஒரு நன்மை உண்டு. நோயுறுதலும் அவ்வாறே.
*************************************************************************************************

Tuesday, July 19, 2011

ஆபோகி - .இன்றைக்கும் என்றைக்கும் ஆனந்தமே!

நந்தனார் சரித்திரம் இயற்றிப் புகழ் பெற்றவர் கோபால கிருஷ்ண பாரதி. இவரது ஐயே மெத்தக் கடினம், மாடு வழி மறைக்குதே, சற்றே விலகி இரும் பிள்ளாய் போன்ற கீர்த்தனைகள் மிகப் பிரசித்தி பெற்றவை. உபரி தகவல்: நந்தனார் என்ற திரைப்படத்துக்குத் தான் இந்தியத் திரையுலகில் முதன் முறையாக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினார் கே.பி சுந்தராம்பாள். அப்படிப் பட்ட கோபாலகிருஷ்ணபாரதி சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிகளின் இல்லத்திற்குச் சென்றிருந்தார்.அங்கு ஆபோகி ராகத்தில் ஒரு கீர்த்தனையைப் பாடிக் கொண்டிருந்தனர் தியாகய்யரின் சிஷ்யர்கள்.  நீங்கள் இந்த ராகத்தில் ஏதாவது பாடியிருக்கிறீர்களா என்று தியாகய்யர் கோபாலகிருஷ்ண பாரதியைக் கேட்டார். அதுவரை அந்த ராகத்தில் பாடல் புனைந்திராத பாரதி உடனே அங்கேயே ஆபோகி ராகத்தில் ஒரு பாடல் புனைந்தார். 'சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா? " என்ற அந்தப் பாடல் இன்றுவரை மங்காப் புகழ் கொண்டது.



ஆபோகி மிகவும் எளிமையான இனிமையான ராகம். ஸ ரி க ம த ஸ் ஸ் த ம க ரி ஸ என்ற ஸ்வர வரிசையைப் பெற்று வருகிறது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியிலுள்ள லக்ஷ்மி வராஹப் பெருமாள் மீது முத்துஸ்வாமி தீக்ஷிதர் பாடிய ஸ்ரீ லக்ஷ்மி வராஹம் என்ற பாடல் ஆபோகி ராகத்தில் அமைந்துள்ளது. பாபநாசம் சிவன் பாடிய "நெக்குருகி உன்னைப் பணியாக் கல்நெஞ்சன்' என்ற பாடல் கல்நெஞ்சையும் உருக்கும். அருணா சாயிராமின் கணீர்க் குரலில் ஆபோகியின் அழகைக் காணலாம்


திரை இசையில் அவ்வப்போது ஆபோகி தலைதூக்கும் .
'மாலை இட்ட மங்கை' என்ற படத்தில் ஆபோகி ராகத்தில் அற்புதமான பாடலை டி.ஆர். மகாலிங்கம் பாடியிருப்பார்.எப்போதும் உச்சஸ்தாயில் பாடும் அவர் மிக மென்மையாகப் பாடியிருக்கும் இப்பாடல் ஆபோகியின் இனிமையைப் பறைசாற்றுகிறது. இந்தப் படத்தில் உள்ள 'செந்தமிழ் தேன் மொழியாள் ' அளவுக்குப் புகழடையவில்லை இப்பாடல். உடன் பாடியவர் A.P. கோமளா. இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. வருடம் 1958.

பாடலைக் கேட்க
பாடலைக் கேட்கக் க்ளிக் செய்யுங்கள்

1964 ஆம் ஆண்டு வந்த கலைக்கோவில் என்ற படத்தைப் பலர் மறந்திருக்கலாம். ஆனால் ஆபோகி ராகத்தில் அமைந்த 'தங்க ரதம் வந்தது' என்ற பாடல் பாலமுரளிக்ருஷ்ணாவின் குரலில் அமரத்துவம் பெற்றது.மெல்லிசை மன்னர்கள் இசையில் கவியரசரின் வரிகளில் 'மாங்கனி கன்னத்தில் தேனூற சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீனாட' போன்ற வரிகளுடன் அமைந்தது அப்பாடல்.

  



இசை ஞானியிடம் நல்ல மெட்டுக்களை வாங்குவது ஒரு கலை.அதில் ஒரு சில இயக்குனர்களே தேறுவார்கள். ஸ்ரீதர், பாலு மகேந்திரா, மணிரத்னம்,ஃபாசில், மகேந்திரன் என்று சிலரது படங்களுக்கு இளையராஜா விசேஷமான இசையைக் கொடுப்பார். அந்த வரிசையில் ஆர்.சுந்தர்ராஜனும் ஒருவர். இன்று நகைச்சுவை நடிகராக உருமாற்றம் ஆகியுள்ள அவர் ஒரு காலத்தில் மிகவும் வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்த போது இளையராஜாவுடன் இணைந்து இசையை மையமாக வைத்துப் பல படங்களைத் தந்திருக்கிறார். மிக எளிமையான கிராமத்துக் கதை, கவுண்டமணி செந்திலின் பெட்ரோமாக்ஸ் லைட் காமெடி போன்றவற்றுடன் இனிய பாடல்கள்க்காகவும் நினைவில் நிற்கும் படம் 'வைதேகி காத்திருந்தாள்'.அந்தப் படத்தில் ஆபோகி ராகத்தில் அமைந்துள்ள ஒரு அற்புதப் பாடல் 'இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே' . ஜெயச்சந்திரன் என்றவுடன் நினைவுக்கு வரும் இப்பாடலின் ஆரம்ப ஆலாபனையும் இடையில் வாணிஜெயராம் பாடும் ஸ்வரக் கோர்வைகளும் 'தகிட தகிட' என்னும் துள்ளல் நடையில் வரும் தபேலாவும் வீணையும் இணைந்து என்றென்றைக்கும் ஆனந்தம் அளிக்கும் அனுபவத்தைக் கொடுக்கிறது.





அதே சுந்தர்ராஜன், அதே இளையராஜா அதே ஆபோகி. இந்த முறை 'அம்மன் கோவில் கிழக்காலே.'  'காலை நேரப் பூங்குயில் கவிதை பாடி' என்ற பாடல். வயலின் ,குழல் ஷெனாய் என்று எந்த வாத்தியத்தில் வாசித்தாலும் ஆபோகி ராகத்தின் அடையாளத்தையும் இனிமையையும் மாற்றாமல் தந்திருப்பார்.





இளையராஜாவின் பாணியின் ஒரு அம்சம் என்னவென்றால் ஒரு பாடலில் அவர் தேர்வு செய்யும் ராகத்தின் இலக்கணத்தைப் பெரும்பாலும் மீறமாட்டார். எம் எஸ்வி , ஏ ஆர் ரகுமான் போன்றவர்கள் இலக்கணத்தைப் பற்றிக் கவலைப் படாமல் சில விதிமீறல்களை அனுமதிப்பார்கள். அது ஒரு வகை அழகு. அதனாலேயே ராஜாவின்  பாடல்கள்  ராகங்களை அறிவதற்கான ராஜபாட்டையாக இருக்கிறது. கீர்த்தனைகள் கற்றுக் கொள்வதற்கு முன் இது போன்ற பாடல்கள் மூலமாகத்தான் என் போன்றவர்களுக்கெல்லாம் ஏதோ இசையைப் பற்றிப் பேசும் அளவுக்காவது விவரம் தெரிய வருகிறது.

வெகுகாலத்திற்கு ஆபோகி ஏனோ திரை இசையில் தென்படவே இல்லை. ராகங்களை அடிப்படையாகக் கொண்டு இசையமைக்கும் காலம் மலையேறி விட்டாலும் அபூர்வமாகச் சில சமயம் நல்ல கர்நாடக ராகங்களில் பாடல்களைத் தரும் வித்யாசாகரின் இசையில் ஒரு ஆச்சரிய ஆபோகி - 'கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் '. கோபாலகிருஷ்ண பாரதி முதல் நயன்தாரா காலம் வரை ஆபோகியின் இளமை மாறவில்லை.


















Thursday, July 7, 2011

பேசுவது கிலியா?

(அச்சுப்பிழை அல்ல கிலி தான்)


புதிய ஆசிரியன் ஜூலை இதழில் வந்த கட்டுரை.


     ‘நீரா’ ரும் கடலுடுத்த தமிழகத்தின் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல ,மருத்துவர்களுக்கும் தொலைபேசி உரையாடல் சில சமயம் கிலியை உண்டாக்கும்.
       திடீரென்று ஒரு அழைப்பு வரும் “ சார்! அந்த நீலக்கலர் மாத்திரையை எப்ப சாப்பிடணும்? காலையிலா? மாலையிலா?” என்று. அல்லது “ சார்! மூணு வருஷத்துக்கு முன்னே வந்தேன்ல! இப்பவும் அதே மாதிரி தொந்தரவு இருக்கு.அதே மாத்திரையைச் சாப்பிடட்டுமா?” என்று ஒருவர் சிவ பெருமான் மாதிரி ஆதியும் அந்தமும் தெரியாமல் புதிர் போடுவார்.
        ஒருமுறை ஒருவர் தொலைபேசியில் அழைத்துத் தன் மகன் இருமுவதைத் தொலைபேசியில் கேளுங்கள் என்று மகன் வாயருகில் ஃபோனை வைத்துக் கேட்கச் செய்தார். நல்ல வேளை அவனுக்கு வாய்வுத் தொந்தரவு இல்லை! 
   பொதுவாக மருத்துவச் செலவுகள் பர்ஸைப் பதம் பார்ப்பது போல் மருத்துவச் சொற்கள்  நம் பற்களைப் பதம் பார்க்கும். என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல முறை தொலைபேசியில் ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்டையோ,ஆய்வகப் பரிசோதனை முடிவையோ வாசிப்பார்கள்.அப்போது ஒவ்வொரு சொல்லையும் பதம் பிரித்து அவர்கள் வாசித்து முடிப்பதற்குள் என் தலைமுடி ஒரு  இஞ்ச் கூடுதலாக வளர்ந்திருக்கும். ஒரு முறை ஒருவர் ஒரு நவீன மருத்துவ மனையில் எடுத்த ஒரு மாஸ்டர் ஹெல்த் செக்கப்பின் முப்பத்தி இரண்டு பக்கங்களையும் தொலைபேசியில் படித்தார். “போன வருடம் எடுத்ததையும் படிக்கிறேன் .கம்பேர் பண்றீங்களா? “ என்றார்.நல்ல வேலை என் தொலைபேசி அதற்குள் உயரிழந்து விட்டது. இப்பொழுதெல்லாம் அந்த முடிவுகளை மின்னஞ்சல் செய்யச் சொல்லித் தப்பித்து விட முடிகிறது.
     அதே போல் தொலை பேசி உரையாடல் மருத்துவ அறிவை மட்டுமின்றி ஆங்கில அறிவையும் சோதிப்பதாக அமையக்கூடும்.என்னுடைய ஆங்கில மொழிப்புலமையை என் மனைவி அவ்வளவாகச் சிலாகிக்காவிட்டாலும் நான் சற்று உயர்வாக எண்ணிக் கொண்டிருந்தேன்.அந்த நினைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக மண் விழத் தொடங்கியது தொலைபேசி உரையாடல்களால்தான்.
     நாம் அன்றாடம் தொலைபேசியில் யாருக்காவது நம் பெயர்,விலாசம்,வளர்ப்பு மிருகம் பற்றிய விவரங்கள் என்று ஏதாவது தகவல் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.ஒரு முறை ஒரு வங்கியிலிருந்து பேசிய தேன்மொழியாள் ஒருவள் நான் சொன்ன எல்லாச் சொற்களுக்கும் “ஸ்பெல்லிங்க் என்ன?” என்று கேட்டுக் கொண்டே இருந்தாள்.என்னுடைய படிப்பு என்ன என்று கேட்டாள்(நல்ல வேளை மதிப்பெண்களைக் கேட்கவில்லை).நான் M.D என்றதும் அதற்கும் ஸ்பெல்லிங்க் கேட்டாள்.ஒரு வேளை MD என்பதை  empty என்று நினைத்துவிட்டாள் போலும்.

       நோயாளி மருத்துவர் இருவருக்கும்
மிகவும் பயங்கரமான அனுபவம் தொலைபேசியில் மருந்துகளைச் சொல்வது.நாம் ஆஸ்பிரின் என்று சொல்லிவிட்டுத் தொலை
பேசியை வைத்துவிட முடியாது.உடனே “ஏ ஃபார்?” என்ற கேள்வி வரும்.”எஸ் ஃபார் ?” என்ற துணைக்கேள்வி வரும்.
நானும் ஆங்கில அகராதியை உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் ரேஞ்சுக்கு யோசிப்பேன். எனினும் வார்த்தைகள் வராமல் தடுமாறும்.ஆங்கில எழுத்துக்களில் குறைந்தபட்சம் இருபத்தைந்து எழுத்துக்களாவது எனக்குத் தொந்தரவு கொடுக்கும். (தொலைபேசியில் மருந்துகளைக் கூறுவதில் இன்னொரு சங்கடம் –அதற்கு ஃபீஸ் வாங்க முடியாது)

   ஒருமுறை இப்படித்தான் ஒருவர் தொலைபேசியில் மருந்து கேட்டார். அப்போது என் என்ற ஆங்கில எழுத்துவரும் ஒரு மருந்தைச் சொன்னே. ‘என்’ ஃபார் என்பதற்கு எந்த வார்த்தையும் நினைவுக்கு வரவில்லை. திடீரென்று என் ஃபார் நயன் தாரா என்றேன். மறுமுனையில் இருந்தவர் ஒரு ஆச்சாரமான முதியவர்.என்ன நினைத்தார் என்று தெரியவில்லை.அதன்பின் என்னிடம் வரவே இல்லை.ஒருவேளை நாராயணா என்று சொல்லியிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாரோ என்னவோ? . இல்லை அவர் த்ரிஷாவின் ரசிகராகக் கூட இருக்கலாம்.


(ஹிந்து வில் மார்ச் 27 வந்த என் ஆங்கிலக் கட்டுரையைச் சின்னாபின்னமாக்கித் தந்திருக்கிறேன்)