Tuesday, February 14, 2012

அம்பானி போல் பாயும் அம்பா நீ?

Bank workers Unity நவம்பர் இதழில் வந்த என் கட்டுரை. சோம்பல் காரணமாகக் காலதாமதம் (நாமெல்லாம் எங்க அம்பானி ஆவது?)


அம்பானி போல் பாயும்  அம்பா நீ?

ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் சிற்றுண்டி வகையறாக்களுக்கு அடுத்தபடியாக விற்றுத் தீர்வது ஜோதிடப் புத்தகங்களும் சுய முன்னேற்றப் புத்தகங்களும்தான். ‘வீட்டிலிருந்தபடியே இருதய அறுவை சிகிச்சை செய்வது எப்படி?’ என்பது போல் ‘அறுபது நாட்களில் அம்பானி ஆவது எப்படி?’ என்ற ரீதியில் பல புத்தகங்கள் தினமும் பிரசவமாகின்றன.

சமீபத்தில் நானும் அப்படி ஒரு நூலை வாசிக்க நேர்ந்தது. நூலின் பெயர் ‘ஐஸ்க்ரீமிற்காகச் சுறாக்கள் மத்தியில் நீந்தியவர்’ (He Swam with sharks for ice cream). எழுதியவர் தவால் பாட்டியா. பொதுவான சுயமுன்னேற்றப் புத்தகம் என்றாலும் தொழிலதிபர் தீருபாய் அம்பானியைப் பெருமளவில் மேற்கோள் காட்டுகிறது. தலைப்பே அம்பானி ஒரு சாகசத்திற்காகச் சுறாக்கள் உள்ள கடலில் நீந்திய சம்பவத்தின் அடிப்படையில் இருக்கிறது.

வியாபார நுணுக்கங்களைப் ‘பனியா புத்தி’ என்ற சொல்லாடல் மூலம் மிகவும் சுவாரஸ்யமாக விவரிக்கிறார் ஆசிரியர்.ஒருகாலத்தில் பணம் சம்பாதிப்பது பாவமாகக் கருதப்பட்டது.பணக்காரன் என்பவன் பாவி. நிம்மதியாகத் தூங்கமாட்டான் என்றெல்லாம் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டிருந்தது

மாறிவரும் பொருளாதாரச் சூழலில் பணம் சம்பாதிப்பது அதுவும் பெரும் பணம் பண்ணுவதே வாழ்க்கையின் ஓரே லட்சியமாகக் கொண்டுள்ள ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது.பன்னாட்டு,உள்நாடு நிறுவனங்களில் பணிபுரியவும் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்கும் சந்தையை உருவாக்குவதற்கும் தேவையான சூழலை உருவாக்குவதில் சுயமுன்னேற்றப் புத்தகங்கள் முதலிடம் வகிக்கின்றன.

உலகின் வளங்கள் குறைந்து கொண்டே வருகின்றன என்பது கண்கூடு.ஆனால் இந்தப் புத்தகம் நுகர்வுக் கலாச்சாரத்தைப் போற்றுகிறது. உலகிலுள்ள எல்லாருக்கும் தேவையான வளங்கள் இருக்கின்றன. ஆகையால் செலவளிப்பது ஒன்றும் குற்றமல்ல என்கிறது இந்நூல்.இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஒருவருக்கு உடனே களத்தில் இறங்கிச் சம்பாதிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவது இயற்கை. ஆனால் இயற்கைவளம், உயிரியல் சமன்பாடு (ecological balance), விழுமியங்கள் (values) போன்றவற்றைப் பற்றிய அடிப்படைப் புரிதல்களையாவது உருவாக்குமா என்பது சந்தேகமே.

 சமீபத்தில் மரணமடைந்த ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிக் கூறப்பட்ட ஒரு விஷயம் என்னவென்றால் ‘அவர் முதலில் பொருட்களை உருவாக்குவார். பின்பு அதற்கான தேவையை உருவாக்குவார்’ என்று. அதாவது தேவையற்றவற்றைக் கூட இன்றியமையாதது என்று நினைக்கச் செய்யும் வியாபார தந்திரம்.இதுவே நுகர்வுக்கலாச்சாரத்தின் சாரம்.
இதற்கு நேர்மாறான  ஒரு புத்தகத்தையும் படித்திருக்கிறேன்.அ தை எழுதியதும் ஒரு பனியாதான்.நவீனமயமாக்கலின் எல்லா முகங்களையும் கடுமையாக எதிர்த்தார் .இயந்திரமயமாக்கல், நவீனமருத்துவம் ,ஏன் அவர் அதிகம் பயன்படுத்திய புகைவண்டியைக் கூட எதிர்த்தார். ‘தேவைக்கு அதிகமாய் வைத்திருப்பவன் திருடன்’ என்றார். புத்தகத்தின் பெயர் ஹிந்த் ஸ்வராஜ்.எழுதியவர் பெயர் மகாத்மா காந்தி.அந்த அளவுக்குப் போகாவிட்டாலும் கூட ஓரளவுக்கு நம்முடைய நுகர்வுக்கலாச்சாரத்தைக் குறைத்துக்கொள்ளலாம்

உளவியல்ரீதியாக இன்றைய வாழ்க்கைச்சூழல் மிகவும் பதற்றமுடையதாகவும், போட்டி நிரம்பியதாகவும் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் நாம் அசாத்தியமான குறிக்கோள்களை வைத்திருப்பது.அந்தக் கருத்தாக்கத்தை உருவாக்குவதற்கு இது போன்ற சுயமுன்னேற்ற நூல்கள் முக்கிய காரணமாக உள்ளன.ஆகவே அடுத்த முறை பில்கேட்ஸ் ஆவதற்கு முன் சற்று யோசியுங்கள்.

கடன் தந்தார் நெஞ்சம் போல்.

புதிய ஆசிரியன் பிப்ரவரி இதழில் வந்த என் கட்டுரை. (பாவம் அந்த இதழ்)

கடன் தந்தார் நெஞ்சம் போல்..

முன் குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களைக் குறிப்பது போல் தோன்றினால் அதற்கு நிர்வாகம் பொறுப்பாகாது.

டிசம்பர் மாதம் வந்தால் சென்னையைத் தாக்கும் காய்ச்சல்களில் புத்தகக் காய்ச்சலும் ஒன்று.தொலைபேசி டைரக்டரியைத் தவிர வேறு புத்தகத்தை விரல் நகத்தால் கூடத் தொட்டிருக்காதவர்கள் கூட புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதையும் முடிந்தால் புத்தகம்
வாங்குவதையும் ஒரு கடமையாகக் கைக்கொள்வர்.

காதல் என்பது கல்யாணம் ஆகும் வரை என்பது போல் ஒரு புத்தகத்தைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் பெரும்பாலும் அதை வாங்கியவுடன் வடிந்து விடுகிறது.அடித்துப் பிடித்து வாங்கிய புத்தகங்கள் சர்க்கரை நோயாளியிடம் இருக்கும் சாக்லெட் போல் யாருக்கும் பலனின்றி இருக்கும்.

பலர் பின்னட்டையை மட்டும் படித்துவிட்டுப் ‘பின்னிட்டான்’ என்பார்கள். இப்படித்தான் ஒரு நண்பர் தான் வாங்கிய ஒரு நாவலைப் “பிரமாதம் நானே இரண்டு முறை படித்துவிட்டேன்” என்று கூறி என் கையில் தந்தார்.ஒரு சுபமுகூர்த்த வேளையில் அதைப் படிக்கும் போதுதான் தெரிந்தது அந்தப் புத்தகத்தில் சுமார் நாற்பது பக்கங்கள் ஒட்டிக் கொண்டு பிரிக்கப்படாமலே இருந்தன.படிக்கும் சுவாரஸ்யத்தில் அவர் அதைக் கவனிக்கவில்லை போலும்.

புத்தகத்தைப் படிக்காவிட்டாலும் கூட விலை கொடுத்து வாங்கினால் குறைந்தபட்சம் ஒரு படைப்பாளிக்குக் கொஞ்சம் ராயல்டியாவது கிடைக்கிறது என்று ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்.
ஆனால் புத்தகத்தை இரவல் பெறுவது வேறு ஒரு வகை. ‘இரவல் தந்தவன் கேட்கின்றான்.அதை இல்லையென்றால் அவன் விடுவானா?” என்ற கண்ணதாசனின் வரிகளை கண்டு கொள்ளாமலே இருப்பது நம் பழக்கம்.

ஒருவருக்குத் தந்த புத்தகத்தில் “இதைப் படித்தவுடன் தயவு செய்து டாக்டர்.ராமானுஜத்திடம் திரும்பிக் கொடுக்கவும்” என்று எழுதியிருந்தேன் அதை வாங்கிப் போன நண்பர் அதைத் தருவதைப் பற்றியே பேசக்காணோம். ஒரு நாள் அவர் வீட்டுக்குச் சென்ற போது அவர் அறியாமல் அந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன் .அதில் நான் எழுதியதற்குக் கீழே “சரி! கொடுத்துவிடுகிறேன்” என்று எழுதியிருந்தது.

அதே போல் முன்பு ஒருமுறை சாண்டில்யன் எழுதிய ‘கடல் ராணி’ புத்தகத்தைப் பக்கத்து வீட்டில் வாங்கிச் சென்றனர். சில மாதங்கள் கழித்து அவர்கள் வீட்டில் நவராத்திரி கொலுவில் சுண்டல் வாங்கிய எனக்குப் பேரதிர்ச்சி சுண்டல் தாளில் ‘கடல் ராணி’ பயணித்துக் கொண்டிருந்தாள். அடுத்த சில நாட்கள் கழித்து பொன்னியின் செல்வன் இருக்கிறதா என்று கேட்டார்களே பார்க்கலாம்.ஒரு வேளை பத்து வருடங்களுக்குச் சுண்டல் மடிக்க ஏற்பாடு செய்தார்களோ என்னவோ.

‘புத்தகம் வனிதா வித்தம் பரஹஸ்தம் கதம்’ –என்று ஒரு சம்ஸ்கிருதப் பழமொழி உண்டு. புத்தகம்,பெண், பணம் மூன்றும் கைமாறினால் மீண்டும் கிடைக்காது என்று பொருள்.பெண்களை இப்பழமொழி இழிவுபடுத்தினாலும் புத்தக விஷயத்தில் அது முழு உண்மையே.


ஒரு நோயைக் குணப்படுத்த எதுவும் செய்ய முடியாது என்றால் மருத்துவ உலகம் குறைந்த பட்சம் அதற்கு ஒரு அழகான பெயராவது வைத்து அழைத்து மகிழும்.

புத்தகங்களைத் திருடுவதற்குப் BIBLIO KLEPTOMANIA (BIBLIO –புத்தகம் KLEPTO திருட்டு) என்று பெயர்.புத்தகங்களைத் திருப்பித்தராத குணத்தை BIBLIODEBTOMANIA என்று அழைக்கலாமா? வேறென்ன செய்யமுடியும்?

பின் குறிப்பு: எனக்கு இரவல் தந்தவர்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.