Tuesday, November 19, 2013

தர்மவதி- தத்திதோம் என்று தித்திக்கும்

தர்மவதி- இது ஒரு அருமையான ராகம். வடக்கே இதற்குப் பைஜாமாவெல்லாம் அணிவித்து மதுவந்தி என்கிறார்கள். இதில் அரிதாக ஆனால் அட்டகாசமான திரைப்பாடல்கள் அமைந்துள்ளன.'அவன் ஒரு சரித்திரம்' என்ற திரைப்படத்தில் வரும்
"அம்மானை அழகு மிகு பெண்மானை" என்ற பாடலைக் கேட்டால் பத்து நாளுக்காவது இப்பாடலை முணுமுணுப்பீர். வாணி ஜெயராம் -டி.எம்.எஸ் ஜோடி பாடிய மிகச்சில பாடல்களுள் இதுவும் ஒன்று.இதன் prelude ஐக் கேட்டால் வேறு ஒரு பாடல் நினைவிற்கு வருகிறதா? 



அம்மானை' பாடலைக் கேட்ட உடனே எனக்கு நினைவிற்கு வரும் பாடல் 'ஒட்டகத்தைக் கட்டிக்கோ'. ஏ.ஆர் .ரஹ்மானின் ஆரம்ப காலத்தில் போட்ட ஒரு அருமையான பாடல். ஷெனாயில் அருமையான தர்மவதி!



 தர்மவதியின் ஒட்டிப்பிறந்த ராகமான மதுவந்தியில் இளையராஜா சில க்ளாசிக் பாடல்களை அமைத்துள்ளார். 'உனக்காகவே வாழ்கிறேன் ' படத்தில் வரும் இளஞ்சோலை பூத்ததா? ஒரு உன்னதமான பாடல்



அதே போல் மதுவந்தியில் வாணிஜெயராமின் இனிமையான குரலில் விரகதாபத்தை ,சோகத்தை வெளிப்படுத்தும் ஒரு அருமையான பாடல் 'ரோசாப்பூ ரவிக்காரி ' படத்தில் அமைந்த 'என்னுள்ளில் ஏதோ' என்ற பாடல்.

 மதுவந்தியில் இளையராஜாவின் மாஸ்டர்பீஸ் -விக்ரம் படத்தில் வரும் 'மீண்டும் மீண்டும் வா'எனும் பாடல்தான். இளஞ்சோலை பூத்ததா என்ற பாடலை நினைவுறுத்தும் மெட்டு. டிம்பிள் கபாடியாவை ஜொள்ளாமல் கேட்டால் மதுவந்தி தெரியும்


 

மெல்லிசை மன்னர் அமைத்த ஒரு அருமையான மதுவந்தி, மன்மதலீலை படத்தில் வரும் 'ஹலோ மை டியர் ராங்க் நம்பர்' பாடல்தான்.







ஆனால் தர்மவதியில் அமைந்த மாஸ்டர் பீஸ் என்றால் அது மரகதமணி போட்ட பாடல்தான். சித்ரா எனும் ராட்சசியின் குரலில் கீ போர்டும் மம்முட்டியின் கம்பீரமான நடிப்பும் நினைவிற்கு வரும் அந்தப் பாடல் "தத்தித்தோம்".எத்தனை முறை கேட்டிருந்தாலும் எள்முனை அளவுகூட சலிப்பு வராது.