Thursday, November 10, 2011

ஐ.சி.யு வில் வந்தியத்தேவன்

நவம்பர் மாத செம்மலர் இதழில் வந்தூள்ள என் கட்டுரை


வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியனும் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்த போது ஒரு நர்ஸ் வந்து “டாக்டர்! மாரியம்மாள் பேஷண்டுக்கு திரும்பவும் ஃபீவரா இருக்கு!” என்றாள்.இது ஏதோ பின்நவீனத்துவ நிகழ்வல்ல.பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் பயிற்சி மருத்துவனாக இருந்த நான் தீவிர சிகிச்சைப் பிரிவின் அரைகுறை இருளில் பொன்னியின் செல்வன் படித்துக் கொண்டிருக்கும் போது நடந்தது.
மிகக் குறைந்த இலக்கிய வாசிப்பு கொண்டவர்கள் என்று எத்தனை கறாரான பட்டியல் போட்டாலும் அதில் முதல் மூன்று இடங்களுக்குள் மருத்துவர்கள் வருவது உறுதி.



பிளஸ் டூ விலிருந்தே (இப்பொழுதெல்லாம் ஆறாம் வகுப்பிலிருந்தே ) தொடங்கி விடும் பாட புத்தகங்களை மட்டும் வாசிக்கும் பழக்கம். தப்பித் தவறி இலக்கிய புத்தகத்தைப் படித்தாலும் நண்பர் மற்றும் பெற்றோரின் நடவடிக்கைகளால் குற்ற உணர்வு கொண்டு புத்தகத்தைத் தூக்கி எறிந்து விடுவர்.

மருத்துவப் படிப்பின் போதும் புத்தக வாசிப்பு சொல்லிக் கொள்ளும் படி இருக்காது.பயிற்சி மருத்துவ காலம் சுதந்திரமான காலம்.படிப்புச் சுமை இருக்காது. பயிற்சிக்கால ஊதியம் சொற்பமேயாயினும் பண நடமாட்டம் இருக்கும்.. எனவே பலர் சீரியஸாகக் காதலிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்து விடுவர். அதிலும் அப்போது அலைபேசி கிடையாது.ஒருவருடன் பேச வேண்டுமென்றால் கற்கால மனிதர் போல நேரே சென்று முகத்தைப் பார்த்துத்தான் பேச வேண்டும்.


கையாலாகாத ஒருசிலரே வாசிப்பின் பக்கம் திரும்புவோம்.அத்தி மலராய் வாசிக்கும் சில பெண்களிடம் மரப்பசு,அம்மா வந்தாள் போன்ற நாவல்களைப் பரிமாறலாம்.எனினும் ஏவாளின் காலத்திலிருந்தே ஜாக்கிரதை உணர்வு மிக்க பெண்கள் இலக்கிய ரசனையை ஒருவரைக் காதலிப்பதற்கான தகுதியாகப் பார்ப்பதில்லை.”பொழுது போகவில்லை ஏதாவது புக் இருந்தாக் குடு!” என்று கேட்கும் பெண்ணிடம் ‘ஜே.ஜே சில குறிப்புகள்’ ,லா.ச.ரா என்று கொடுப்பது எவ்வளவு ஆபத்தானது என்று உணர்ந்ததும் அக்கால கட்டத்தில் தான்.மறுநாள் நாவலுடன் ஒரு முறைப்பும் சேர்ந்தே திரும்பக் கிடைக்கும்.அதுவே அவர்கள் நம்மைப் பார்க்கும் கடைசிப் பார்வை.


எனவே மேலும் தீவிர வாசிப்பே கதியாய் இருக்கும்.அலைபேசி ரீ சார்ஜ், வாகன எரிபொருள் செலவு போன்றவை இல்லாத காலம்.எங்கள் பேராசிரியர்கள் சிலர் நடந்தும் சைக்கிளிலும் வருவர்.இன்று சைக்கிள்களைச் சர்க்கஸில்தான் அதிகம் காண முடிகிறது.எனவே அநாவசியச் செலவே புத்தகம் வாங்குவதுதான்.
வாசிப்பே மனநலப் பிரிவைத் தேர்ந்தெடுக்க என்னைத் தள்ளியது.இன்றைய மனநல அறிவியல் மனித மனத்தைப் பெரும்பாலும் செரட்டோனின்,டோபமின் போன்ற ரசாயனங்களாகவே பார்க்கிறது.மனம் என்பது ஒரு வேதியல் வினை (mind is a chemical reaction) என்று சொல்லும் பாட புத்தகங்களை விட இலக்கிய வாசிப்பே மனிதனைப் புரிந்து கொள்ள உதவுகிறது.


இன்றைய சூழலில் மருத்துவத்தில் மேற்படிப்பு இல்லாமல் காலம் தள்ள முடியாது என்ற நிலை இருப்பதால் பயிற்சி மருத்துவர்கள் பாட புத்தகங்களிலிருந்து தலையை எடுப்பதேயில்லை;எப்பொழுதாவது நேரம் கிடைத்தால் நோயாளியைப் பார்ப்பதைத் தவிர. 


ஏதோ ஒரு உந்துதலில் என்முன் இருக்கும் காலச்சுவடையோ வேறு படங்கள் இல்லாமல் நீள நீள வாக்கியங்கள் கொண்ட புத்தகத்தையோ புரட்டினால் பாட புத்தகத்தைக் கண்டது போல் அதிர்ச்சி அடைந்து விடுவர்.
மருத்துவத்திலும் கிளாசிக்குகள் என்று சொல்லப்படும் சில புத்தகங்கள் இலக்கியத் தரத்தில் இருக்கும்.கிரேயின் அனாடமி (Gray’s anatomy) மருத்துவர் அல்லாதவர்களிடமும் புகழ் பெற்றது.பாய்டின் நோய்க்குறியீட்டியல் (Boyd’s pathology) புத்தகத்தைப் படிக்காதவர்கள் போலி மருத்துவராகக் கூடத் தகுதியற்றவர் என்று எங்கள் பேராசிரியர் கூறுவார். பெய்லி மற்றும் லவ் எழுதிய அறுவை சிகிச்சை நூல் மிகுந்த கவித்துவத்துடன் ஷேக்ஸ்பியரின் வரிகளுடன் இருக்கும். 


ஆனால் இப்போது மாணவர்கள் கோனார் உரை போன்ற புத்தகங்களையே படிக்கிறார்கள்.இலக்கியம், வரலாறு மற்றும் மானுடம் ஆகியவை வடிகட்டப் பட்டு வெறும் தகவல் அறிவாகவே படிப்பு இருக்கிறது.மற்ற துறையில் இருப்பவர்களை விட மருத்துவர்களுக்கு இலக்கிய வாசிப்பின் தேவை அதிகம்.எரிக் சீகலின் ‘டாக்டர்ஸ்’ எல்லா மருத்துவரும் படிக்க வேண்டிய நாவல்.ஆனால் பெரும்பாலானோர் சோமாலியா நாட்டு உள்துறை அமைச்சரைப் பற்றித் தெரிந்து கொண்ட அளவை விடக் கம்மியாகவே இந்நாவலைப் பற்றி அறிந்துள்ளனர்.


கொஞ்சம் மேல்தட்டுப் பெண்கள்,வெளி மாநிலப் பெண்கள் டான் பிரவுன் வாசிக்கின்றர்.ஏனோ அவர்களிடம் கடலை போடுவதற்காகக் கூடப் பையன்கள் புத்தகங்கள் படித்துப் பார்த்ததில்லை.யாரும் காதல் கடிதங்களைப்(அப்படி ஒன்று இருந்தால்) புத்தகத்தில் வைத்துக் கொடுப்பதில்லை.


விதிவிலக்காக ஒரு மாணவர் இருந்தார்.தீவிர சிகிச்சைப் பிரிவில் உட்கார்ந்து அதி தீவிரமாகக் கவிதை எழுதிக்கொண்டிருப்பார்.சிற்றிதழ்களில் வெளிவருவதும் உண்டு.ஒரு முறை ஒரு தாளை நீட்டினார்.நோயாளிகளைப் பற்றிய விவரங்கள் எழுதும் கேஸ் ஷீட் தாள்.அதில் அவர் ஒரு கவிதை எழுதியிருந்தார்.நோயாளியின் பெயர் என்பதற்கு நேரே கவிதையின் தலைப்பு இருந்தது.நோய் அறிதல்(டயக்னோசிஸ்) என்பதற்கு நேரே கவிதையின் கடைசி வரி ‘மர்மமாக உள்ளது’ என்று முடிந்திருந்தது.

நான் சொன்னேன் “ கவிதை நன்றாக உள்ளது.ஆனால் தயவு செய்து வேறு தாளில் எழுதி அனுப்புங்கள்.இல்லையென்றால் மருத்துவ ஆய்வுக்கட்டுரை என்றோ பின்நவீனத்துவக் கவிதை என்றோ அப்படியே பிரசுரமாகிவிடும்”

Saturday, November 5, 2011

அழகே அழகு - விரல்களே விழிகள்.

ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று மற்றொரு பாடல் வந்துவிடுகிறது. பெரும்பாலும் அந்தப் பாடல்கள் ஒரே ராகத்தைச் சேர்ந்தவையாக இருக்கின்றன. அப்படித்தான் சிவரஞ்சனியில் ஏழிசை கீதமேவை வாசித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று இந்தப் பாடல் வந்துவிட்டது. பிள்ளையார் பிடிக்க .பிள்ளையாருக்குப் பிடித்த கொழுக்கட்டையாய் முடிந்த  மாதிரி.

என்ன ஒரு அற்புதமான பாடல்.சில இடங்களில் சிவரஞ்சனியின் இலக்கணங்களை மீறினாலும் இசையின் அழகு கூடுகிறதே தவிரக் குறைவதில்லை.ஒரு புலனால் மற்றொரு புலனை உணர்வதற்குப் பெயர் synaesthesia. உ-ம் இசையைப் பார்ப்பது. இங்கு விழிப்புலன் இல்லாத ஒருவன் தன் விரல்களால் காண்கிறான். கவியரசு கண்ணதாசனின் வரிகள். அந்திமழையாய்ப் பொழிய ஆரம்பித்த வைரமுத்துவின் ஆவேசக் காதல் வரிகளுக்கு இடையே மெல்லிய தூறலாய்ப் பெய்யும் கவியரசின் கவிச்சாரல் இந்தப் பாடல்

அழகே அழகு.. தேவதை...
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்

கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும்
கேள்வி ஆனது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மன கண்கள் சொல்லும் பொன்னோவியம்

சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும்
முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அஙகம் கைகள் அறியாதது

பூ உலாவும் கொடியை போல
இடையை காண்கிறேன்
போக போக வாழை போல
அழகை காண்கிறேன்
மாவிலை பாதமோ
மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லயே




Friday, October 21, 2011

சிவரஞ்சனி--சொன்னாலே சோகம் வரும்

24x7மணி நேரத்  தொலைக்காட்சிகளில்லாத காலம் அது.பரபரப்பான காலை நேரம். தூர்தர்ஷன் முக்கியத் தலைவர் ஒருவர் இறந்த செய்தியை அலறிக் கொண்டிருக்கிறது.வீட்டில் இருக்கும் யாரும் அந்த செய்தியைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. திடீரென்று ஒரு வடநாட்டு உஸ்தாத் வந்து நிலையத்தில் அமர்கிறார்.தலைவர் இழுத்துக் கொண்டிருக்கும் போதே அவரது லீவைக் கான்சல் செய்துவிட்டு அழைப்பு விடுத்து விட்டனர். இது மாதிரி சமயங்களுக்கே உரிய மங்கலான ஆடைகளையும் முகபாவனைகளையும் அணிந்த அவர் தனது சாரங்கியை எடுத்துச் சிவரஞ்சனியை இரண்டு இழுப்பு இழுத்தார். அவ்வளவு தான் மொத்தக் குடும்பமும் திரும்பித் தொலைக்காட்சியைப் பார்த்தது."அய்யய்யோ! போய்ட்டாரா?" என்று .அப்போது தான் அந்தச் சாவு அவர்களுக்கு உறைத்தது. அவ்வளவு மகிமை சிவரஞ்சனிக்கு உண்டு.அண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் போல் சிவரஞ்சனியைச் சொன்னாலே சோகம் வரும். ஹிந்துஸ்தானியிலும் பிரபலமான ராகம் இது. புல்லாங்குழலில் சிவரஞ்சனியைக் கேளுங்கள்.மனதை உருக்கும் இசை.உங்களுக்கு என்னென்ன பாடல்களை நினைவு படுத்துகிறது என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள்


மனதில் இனம்புரியாத ஒரு அழுத்தம் ஏறுகிறதா?அந்தச் சோகத்திலும் ஒரு சுவை இருக்கிறதல்லவா? அந்த நிறைவுணர்வை வெளிப்படுத்த இசையரசி எம் எஸ்ஸின் குரலில் அமைந்த அமரத்துவம் வாய்ந்த பாடல் "குறைஒன்றும் இல்லை ". பாடலின் துவக்கமும் முதல் சரணமும் சிவரஞ்சனியில் அமைந்திருக்கிறது.


சிவரஞ்சனி கர்னாடக இசையில் பிரபலமாகாத ராகம். கீர்த்தனைகள் பெரிதாக இல்லாவிட்டாலும் தற்காலத்தில் மிகவும் பரவலாகப் பாடப்படுகிறது.'தருணம் இதைய்யா' என்ற பாபனாசம் சிவனின் கீர்த்தனை இருக்கிறது .மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் அருமையான தில்லானா ஒன்று உண்டு. நாகூர் ஹனிஃபாவின் உருக்கும் குரலில் ,சிவரஞ்சனியில் ஒரு அருமையான இஸ்லாமியப் பாடலைக் கேளுங்கள் .(தகவல் உபயம் எழுத்தாளர் திரு.சுப்பாராவ்)






பெரும்பாலும் ராகமாலிகை எனப்படும் பல்வேறு ராகக்கலவைகளில் சேர்ந்து வருகிறது. இளையராஜாவால் பெரிதும் சிலாகிக்கப்படும் 'சின்னஞ்சிறு கிளியே 'என்ற பாரதியின் பாடலில் 'உன் கண்ணில் நீர் வடிந்தால் என்ற வரிகளுக்குப் பொருத்தமாகச் சிவரஞ்சனியை அமைத்திருப்பார் இசை அமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன்.(சிலர் சிவரஞ்சனிக்கு நெருங்கின ராகமான நீலமணிஎன்றும் சொல்வர்)


பழைய திரைப்படங்களில் அவ்வளவாகப் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் அழியாப் புகழ் கொண்ட இந்தப் பாடல் சிவரஞ்சனியில் அமைந்திருக்கிறது.கடைசிச் சரணத்தில் வேறு ராகத்துக்குப் போய்விட்டாலும் பிரிவின் துயரை ,சொல்லமுடியாத தவிப்பை வெளிப்படுத்த சிவரஞ்சனியே சிறந்தது என்று அமைத்திருக்கிறார் திரை இசைத்திலகம் கே.வி .மகாதேவன்.செவ்வாய் கிரகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடலைப்  பற்றி மேலும் விவரங்கள் தேவைப்படும். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்.


சிவரஞ்சனி என்றாலே என்றென்றும் நம் நினைவிற்கு வருவது ஒரு ஹிந்திப் பாடல்தான்.மென்மையான சோகம் கலந்த காதல் பாடலாக நிரந்தர நினைவுகள் எழுப்பும் பாடல்.லக்ஷ்மிகாந்த் -பியாரிலால் இசையில் .ஏக்துஜேகேலியே. மிக எளிமையான ,ஆனால் அழகும் இனிமையும் கூடிவரும் மெட்டு.




'Pentatonic' என்று அழைக்கப்படும் ஐந்து ஸ்வரங்களை (ஸ,ரி2,க1, ப,த2) உடைய வகையைச் சேர்ந்த சிவரஞ்சனி மெல்லிசைக்கு மிகவும் ஏற்றது. இளையராஜா வழக்கம் போல் ஏராளமான பாடல்களில் பயன்படுத்தி இருக்கிறார்.பொன்மானே கோபம் ஏனோ( ஒரு கைதியின் டைரி),குயில்பாட்டு ஓ வந்ததென்ன (என் ராசாவின் மனசிலே),அடி ஆத்தாடி (கடலோரக்கவிதைகள்) என்று பல பாடல்களில் சந்தோஷமான சூழ்நிலையில் பயன்படுத்தி இருக்கிறார்.நல்லவனுக்கு நல்லவன் படத்தில் வந்த உன்னைத்தானே ஒரு மாஸ்டர்பீஸ்.ஆனாலும் அவரது டாப் சிவரஞ்சனி வரும் பாடல் 'வா வா அன்பே அன்பே' படம் அக்னி நட்சத்திரம்.ஒரு ஹிந்துஸ்தானி சாடையிலான ராகத்தை மேல்நாட்டு பாணியில் அற்புதமான சேர்ந்திசையாகத் தந்திருப்பார்.







சோகமான சூழலுக்கும் ராஜா பயன்படுத்தியிருக்கிறார்.சோலைப் புஷ்பங்களே (இங்கேயும் ஒரு கங்கை) ,குடகுமலைக் காற்றில் ஒரு (கரகாட்டக்காரன்),ஓ ப்ரியா ப்ரியா(இதயதைத் திருடாதே) என்று பல பாடல்கள். ஆனாலும் இரவா? பிரிவா? துயரமா? "கூப்பிடுடா சிவரஞ்சனியை! "என்று இளையராஜா அழைக்கும் போது உருக்குவதற்காகவே வந்துவிடுவாள். வைதேகி காத்திருந்தாள் என்னும் இசையால் நிரம்பி வழியும் திரைப்படத்தில் ஒரு சிவரஞ்சனி.




சிவரஞ்சனி என்று சொல்லிவிட்டு அந்தப் பாடலைச் சொல்லாமல் எப்படி? மூங்கில் இலைக் காடுகளே மாதிரி நல்ல சிவரஞ்சனியைத் தந்திருக்கும் சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.பி பாடும் "அவள் ஒரு மேனகை" பாடலில் முதல் சில வரிகள் சிவரஞ்சனியில் அமைந்திருக்கும்.மூல மெட்டு தெலுங்குப் படத்திலிருந்து சுடப்பட்டது என்றாலும் அருமையான பாடல்.படம்-நட்சத்திரம்அவள் ஒரு மேனகை- இங்கே க்ளிக்கவும்

மலையாளத் திரை இசையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் ரவீந்திரன். கர்னாடக இசையின் பின்னணியில் அமைந்த ஏராளமான வெற்றிப் பாடல்களைப் படைத்திருக்கிறார். ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, பரதம்,கமலதளம் மாதிரி.அவரது இசையில் ஒரு அருமையான சிவரஞ்சனி

விஜய் ஆனந்த என்ற கன்னட இசை அமைப்பாளரைப் பற்றி நமக்குப் பெரிதாக (ஏன் சிறியதாகக் கூட) ஒன்றும் தெரியாது.ஆனால் அவர் 'நான் அடிமை இல்லை' திரைப்படத்தில் ஒரு அருமையான சிவரஞ்சனியைத் தந்திருக்கிறார். கமலுக்கு ஒரு 'தேரே மேரே 'என்றால் ரஜினிக்கு ஒரு 'ஒரு ஜீவன் தான்' 

சமீபகாலமாய்த்  திரைப்படங்களின் உலோகத்தன்மை அதிகரித்து மென்மையான உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு வருவதால் சிவரஞ்சனி மாதிரி  மென்மையான ராகங்கள் அருகி வருகின்றன. எனினும் அபூர்வமாக நல்ல சிவ்ரஞ்சனியைச் சமீபத்தில் கேட்க முடிந்தது.'காதல்' திரைப்படத்தில் 'உனக்கென இருப்பேன்". இசையமைப்பாளர் ஜோஷுவா ஸ்ரீதர் (இவரை எங்கே காணவில்லை?)

 

சோகத்தையும் கலையாக்கும் கலையில் சிவரஞ்சனிக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.




Thursday, October 6, 2011

நோயர் விருப்பம்.


(அக்டோபர் மாத 'புதிய ஆசிரியன்' இதழில் வந்தது)

வெகுகாலத்துக்கு முன் நடந்த சம்பவம் ஒன்று .ஒரு வயதான அம்மையார் மருத்துவரிடம் முட்டு வலி என்று சென்றார் ஒருவர். மருத்துவர் ஸ்டெத்தஸ்கோப்பை எடுத்தார். அப்போது அந்த நோயாளி கூறினார் “ நானும் எத்தனையோ டாக்டர்களிடம் காட்டிவிட்டேன் . யாருமே இந்தக் குழாயை முட்டில் வைத்துப் பார்க்கவே இல்லையே ராசா”. . உஷாரான அந்த மருத்துவர் ஸ்டெத்தஸ்கோப்பை முட்டில் வைத்துப் பார்த்தார். பாட்டிக்குப் பரம திருப்தி.அதில் வேடிக்கை என்னவென்றால் முட்டில் வைத்து விட்டுப் பழக்க தோஷத்தில் “ மூச்சை நல்லா இழுத்து விடுங்க “ என்றதுதான்.

ஒரு துணி எடுக்கச் செல்லும் போது நம் மனதில் ஒரு எதிர்பார்ப்பு இருப்பது போல் மருத்துவரிடம் செல்லும் போதும் நோயுற்றவர்களுக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். இன்ன வியாதிதான் நமக்கு, அதற்கு இதுதான் காரணம் , இதுதான் வைத்தியம் என்று ஒரு எதிர்ப்பார்ப்போடுதான் வருவார்கள். திறமையை விட இந்த நோயர் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதே ஒரு மருத்துவரைப் புகழ்பெற்றவராக்குகிறது.

எல்லா நோய்களுக்கும் ஊசி போட்டால் தான் சரியாகும் என்பது பெரும்பாலான நோயர் விருப்பமாக உள்ளது.அதிலும் சிலர் வலதுகை வலி என்று போனேன் இடதுகையில் ஊசி போட்டுவிட்டார்கள் என்று நுகர்வோர் நிதிமன்றம் வரை போவதுண்டு. நெல்லை டவுணில் ஒரு புகழ் பெற்ற மருத்துவர் இருந்தார். அவரது கிளினிக் திஹார் ஜெயில் போல் நிரம்பி வழியும் .காரணம் அவரது தனித்தன்மையே.  நாம் எந்தப் பகுதியில் வலி என்கிறோமோ அந்தப் பகுதியிலேயே ஊசி போடுவார். சற்றும் மிகைப்படுத்தலற்ற உண்மை இது. இது தெரியாமல் வரிசையில் காத்திருந்த ஒருவர் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் தலைதெறிக்க வெளியே ஓடிவிட்டார். வேறு ஒன்றுமில்லை அவர் மூலவியாதிக்காகச் சிகிச்சை வந்திருந்தார்.

இப்பொழுதெல்லாம் குழந்தை பெறுவது கூட இயற்கையாக அன்றி நாள் நட்சத்திரம் பார்த்துப் பெரியவர்களின் விருப்பப்படி தான் நடைபெறுகிறது. “ரோகிணி நட்சத்திரம் வேண்டாம். மாமாவுக்கு ஆகாது. அதனால இன்னும் இரண்டு நாள் கழித்துச் சிசேரியன் வைத்துக் கொள்ளலாமா டாக்டர்?” என்று கேட்பது சாதாரணமாகி விட்டது. எதிர்காலத்தில் மகப்பேறு மருத்துவமனைகளில் ட்யூட்டி டாக்டர் போல் ட்யூட்டி ஜோதிடர்களும் இருக்கலாம்.

நோயுற்றவரின் எதிர்பார்ப்பும், உடன் இருப்பவரின் விருப்பமும் வேறு வேறாக இருக்கும். மேலைநாட்டில் பத்து வருடங்களாக மூக்கடைப்பால் அவதிப்பட்டிருந்த ஒரு பெண் மூக்கடைப்பு சரியானதும் கணவர் மீது துர்நாற்றம் அடிக்கிறது என்று விவாகரத்து செய்துவிட்டார்.சில சமயம் நோய் குணமாகக் கூடாது என்று நோயாளியே நினைக்கலாம். திங்கட்கிழமை காலை வயிற்றுவலியால் பாதிக்கப்படும் குழந்தை போல். காது கேளாமையால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவரிடம் கூறினார் “தயவு செய்து எனக்குச் சரி செய்துவிடாதீர்கள் .என் மனைவியின் பேச்சைக் கேட்க முடியாது” .

எதற்காகச் சிகிச்சைக்கு வருகிறார் என்பதைத் தெளிவு படுத்திக் கொள்வது அவசியம். குடிப்பழக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவர் என்னிடம் வந்தார். “ குடிச்சுக் குடிச்சுக் கையெல்லாம் ரொம்ப நடுங்குது டாக்டர்.எப்படியாவது நீங்கதான் இதை நிறுத்தணும்” என்றார். “கவலைப் படாதீர்கள் ! உங்கள் குடிப்பழக்கத்தை நான் நிறுத்திவிடுகிறேன்” என்றேன். திடுக்கிட்ட அவர் “ அதெல்லாம் வேண்டாம் டாக்டர். இந்த கை நடுக்கத்தை மட்டும் நிறுத்துங்க! சரக்கெல்லாம் கொட்டி நிறைய வீணாகுது “ என்றாரே பார்க்கலாம்.
   
ஒரே வியாதியால் இருவர் பாதிக்கப்படலாம்.ஆனால் இருவரும் ஒன்றல்ல.நேயர் விருப்பம் போல் நோயர் விருப்பமும் தனித்தன்மையுடையதே.      

      

Friday, September 9, 2011

பெயரியல் கலை-பெயரைக் கலை!


  

ஒருவருடன் கடைசிவரை வருவது யாரோ ? என்று கண்ணதாசன் பாடியுள்ளார். சில சமயம் கடைசி வரை பேரோ? என்று கூடக் கேட்கலாம் என்று தோன்றுகிறது. இட்ட தினத்திருந்து இடுகாடு வரை நம்மைத் தொடர்ந்து வருவது நம்முடைய பெயரே ஆகும்..

ஆனால் அதுவே சிலருக்குத் துரதிர்ஷ்டமாகிறது.அவர்களது விருப்பமின்றி ஒரு பெரிய மரு போல் உறுத்திக்கொண்டு இருக்கிறது.எல்லோருக்குமே ஒருமுறையாவது தன் பெயர் சரியில்லை என்ற எண்ணம் வந்திருக்கும்.

பெயரிடும் போது குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து வைப்பவர் சிலரே. ஒருவரைக் கூப்பிட்டால் அவர் மட்டும் திரும்பிப் பார்க்கும் வண்ணம் பெயர் இருப்பது நலம். ஹைகோர்ட், நடுக்கடல், என்றெல்லாம் கூடப் பெயருள்ள மனிதர்கள் இருக்கிறார்கள். சீன முறையில் ஒரு பெரிய பாத்திரத்தைக் குழந்தையை உதைக்கச் செய்து அது எழுப்பும் ‘டிங்க் டங்க் ‘ என்ற ஓசையைப் பெயராக வைப்பதாக ஒரு ஐதீகம்.

அதனினும் அரிது இட்ட பெயர் பொருத்தமாக அமைவது. ஊரெல்லாம் கடன்வாங்கும் ‘கோடீஸ்வரன்’கள் , மூன்றாவது வகுப்பில் தோல்வியடையும் ‘மதிவாணன்’கள் என்று ஏராளமானோர் உண்டு. ஆங்கிலத்தில் மிஸ்னோமெர் (MISNOMER- MISS NO MORE அல்ல) என்று இப்பிழைப் பெயர்களைக் கூறுவார்கள்.விதிவிலக்காகப் பொருத்தமான பெயருடையவரும் உண்டு. சமீபத்தில் ஒரு மொடாக்குடியர் சிகிச்சைக்கு வந்தார். கங்குலும் பகலும் தண்ணீரிலேயே மிதக்கும் கயல்களை ஒத்த அவரது பெயரைக் கேட்டேன். ‘ஜல’கண்டேஸ்வரன் என்றார். அவரது தந்தையின் தீர்க்க தரிசனத்தை வியந்தேன்.

மனிதர்களுக்கு வைப்பது போல் வியாதிகளுக்கும் பெயர் வைப்பதும் ஒரு கலை.. மலையாளக் கவிதைகளைப் புரிந்து கொள்ள மலையாளம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. ஆனால் சம்ஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று சுந்தர ராமசாமி ஒருமுறை கூறியிருந்தார். அதே மாதிரி மருத்துவத் துறையில் பெயர்களை அறிய ஆங்கிலத்தை விட கிரேக்கம்,லத்தீன் தெரிந்திருப்பது அவசியம். கேன்சர் என்றால் நண்டு, கேட்டராக்ட் என்றால் அருவி. தூக்கமின்மையைக் குறிக்கும் இன்சோம்னியா என்ற வார்த்தை கூட சோம்னாஸ் என்ற தூக்கத்துக்கான இத்தாலியக் கடவுளின் பெயரிலிருந்து வந்தது. நம் ஊர் கும்பகர்ணனுக்கு இதிலும் யோகமில்லை.


சில வியாதிகளுக்குத் தான் நல்ல கம்பீரமான பெயர் அமையும்.
எனக்கு என்ன வியாதி டாக்டர்? என்று கேட்கும் போது நோயாளியின் கண்களில் மருத்துவர் ஒரு நல்ல பெயருடைய வியாதியைக் குறிப்பிட வேண்டுமே என்ற ஆவல் தெரியும். கண்ணில் புரை என்றால் அவரது கண்களில் ஏமாற்றம் பளிச்சிடும்.அதுவே ‘அக்யூட் கஞ்சங்க்ட்டிவைட்டிஸ் (சென்னை ஐ தான்) என்றால் முகம் பிரகாசிக்கும். அழகான பெயருள்ள வியாதி வரவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். கடுமையான உச்சரிப்புக் கொண்ட பெயர்கள் நோயாளிகளைப் பயமுறுத்தவும் செய்கின்றன. ‘லுக்கீமியா’ என்று சொன்னால் ஏற்படும் பயம் ‘வெண்குருதி’ என்றால் ஏற்படுவதில்லை.

இப்பொழுதெல்லாம் பெயரியல் நிபுணர்களின் ஆலோசனைப் படிக் குழந்தைகளுக்குப் பெயரிடுகின்றனர். ‘ஞௌ’ ‘ஙீ’ போன்ற எழுத்துகளில் ஆரம்பிக்கும் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள் என்று சிலர் மிரட்டுவதும் உண்டு. பெயர்களில் உள்ள எழுத்துக்களை மாற்றி பெயரில் X ‘Z போன்ற எழுத்துக்களையும் சேர்த்துக் கொள்ளும் மருத்துவ முறையும் இருக்கிறது. ஒருமுறை ஒரு பெயரியல் நிபுணர் சர்க்கரை நோயாளிக்கு ஆலோசனை வழங்கினார் “ உங்க பெயரில் ஒரு ‘R’ சேர்த்துக் கொள்ளுங்கள் –RAJARRAM என்று.உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் “ என்று. பாவம் அந்த நோயாளி தெரியாமல் இரண்டு R ஐச் சேர்த்துவிட்டார். சர்க்கரை அளவு மிகவும் குறைந்து ஐ சி யு வில் சேர்க்கும்படி ஆகி விட்டது.

நண்பர் எஸ்.வி.வி சொன்ன பயனுள்ள யோசனை ஒன்று எதிர்கால ஆய்வுக்காகப் பயன்படும். அதாவது ஒவ்வொரு மனிதனின் பெயரையும் பெயரியல் படி மாற்றுவதை விட அந்த வியாதிகளின் பெயரையே மாற்றி மனிதர்களுக்கு வரவிடாமல் செய்துவிடலாமே என்பதுதான் அந்த யோசனை. டயப்பட்டீஸ் என்பதைக் கூட ஒரு ‘T’ சேர்த்து அழைத்தால் என்ன குறைந்து விடப் போகிறது?


Friday, August 19, 2011

சாருகேசி- ராமநாதனை வென்றார் உண்டோ?

முன்பெல்லாம் கர்நாடக இசையில் ஒரு ராகத்தை அறிய வேண்டுமென்றால் அந்த ராகத்தின் முன்மாதிரியான பாடல் ஒன்றைப் பயிலவேண்டும்.அது பெரும்பாலும் மிகப் பெரிய சங்கீத மேதையின் கீர்த்தனையாக இருக்கும். உதாரணத்திற்குக் கானடா என்றால் 'அலைபாயுதே',ஸ்ரீ ராகம் என்றால் 'எந்தரோ மஹானுபாவுலு' இது போல். திரைப்பாடல்களும் இந்த கீர்த்தனைகளின் மெட்டிலேயே இருக்கும். உதாரணம் 'நாததனுமனிசம்' என்ற தியாகய்யைர் கீர்த்தனை 'காதல் கனி ரசமே' என்று பி.யு.சின்னப்பாவால் பாடப்படும்.ஆனால் முதல்முறையாக ஒரு திரைப்பாடல் ஒரு ராகத்தின் முன்மாதிரியாக அமைந்தது வரலாறு படைத்த  ஒரு படத்தில்  அமைந்த பாடல். அந்தப் பாடலைக் கேட்டுவிட்டு சங்கீதப் பிதாமகர் செம்மங்குடி சீனிவாசய்யரே அந்த இசை அமைப்பாளரின் வீடு தேடி வந்து பாராட்டினார். கர்நாடக சங்கீத ராகங்களை எளிமையாகவும் அதே நேரம் அழகாகவும் மெட்டுக்களாக்கிய ஒரு புது பாணி உருவாகிப் பின் கே.வி மகாதேவன்,இளையராஜா என்று தொடர்ந்து வந்தது. அந்த இசையமைப்பாளர் --ஜி.ராமநாதன். பாடல்: மன்மத லீலையை வென்றார் உண்டோ? படம்: ஹரிதாஸ் (1944). ராகம் __சாருகேசி



சாரு கேசி என்றால் அழகான கூந்தல் உடையவள் (வன்) என்று பொருள். ஏழு ஸ்வரங்களும் வரும் சம்பூர்ண ராகம். கம்பீரமாகவும் தோன்றும். மென்மையான சோகம் வெளிப்படுமாறும் விளங்கும். ஆடமோடி கலதே என்று தியாகைய்யரின் பாடல் ஒன்று உண்டு. ஆனால் கச்சேரிகளில் பரவலாகப் பாடத் தொடங்கியது ஹரிதாஸுக்குப் பின்னால்தான் என்றால் மிகையாகாது. 'இன்னும் என் மனம்' என்று லால்குடி ஜெயராமன் இயற்றிய ஒரு புகழ்பெற்ற வர்ணம் உண்டு. ஸ்வாதித் திருநாள் ஒரு பாடலை இயற்றி இருந்தார். செம்மங்குடி அந்தப் பாடலைப் பிரபலப் படுத்தினார். ஏசுதாஸின் குரலில் இந்தச் சாருகேசியை கேளுங்கள்

   
சாருகேசி ஜி.ராமாநாதனின் பிரியத்துக்குரிய ராகமாகவே இருந்து வந்தது.திருவிளையாடல் என்றால் சிவாஜிதான் நினைவுக்கு வருவார், ஆனால் எம். ஜி. ஆரின் ஒரு பாடலும் திருவிளையாடல்களைப் பற்றி அமைந்து புகழ்பெற்றது. 'மதுரை வீரன்' படத்தில் அமைந்த 'ஆடல் காணீரோ' என்ற பாடல் சாருகேசியில்  நாட்டியப் பேரொளியின் நடனத்துடன் அமைந்திருக்கும். பாடலின் தொடக்கத்தைக் கேட்டாலே ஜி.ராமநாதனின் மேதமை நமக்குப் புரியும்.



பின்னர் 'சாரங்கதாரா;என்ற படத்தில் அமைந்த 'வசந்த முல்லை போலே வந்து" என்ற பாடலும் சாருகேசியின் அழகைக் காட்டிகிறது. முழுத்தொண்டையில் கம்பீரமாகப் பாடும் டி.எம்.எஸ்ஸுக்குப் பல வாய்ப்புகள் அளித்துப் பிரபலப் படுத்தியவர் ராமநாதன்.இந்தப் பாடலைச் சமீபத்தில் ரீமிக்ஸ் என்ற பேரில் சின்னாபின்னமாக்கியுள்ளனர்

         
நாட்டியம் போன்ற பாடல்களுக்கே பெரும்பாலும் சாருகேசி பயன்படுத்தப்பட்டு வந்தது.இந்த பாணியை மாற்றினார் திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன். திருவிளையாடல் முதல் சங்கராபரணம் வரைச் சாதனைகள் பல புரிந்துள்ள அவர்  ஒரு மெல்லிய சோகம் கலந்த ஒரு அற்புத இரவுப் பாடலாக அமைத்திருக்கிறார் .டி.எம்.எஸ்ஸும் சுசீலாவும் இணைந்து ஆரவாரமில்லாமல் பாடியுருப்பார்கள். படம் குங்குமம். சில இடங்களில் வயலினிலிருந்து வரும் சாருகேசி நம் வயிற்றையும் என்னவோ செய்யும்.

    
பின்னர் வெகு காலம் சாருகேசி பயன்படுத்தப் படாமல் இருந்தது. இளையராஜா வந்தபின் மீண்டும் ஒரு சுற்று வரத் தொடங்கியது. பெரும்பாலும் சோகமான சூழலுக்குப் பொருந்துமாறு ராஜா இசை அமைத்திருப்பார். 'அன்னை ஓர் ஆலயம்' படத்தில் டி.எம்.எஸ் பாடிய 'அம்மா ! நீ சுமந்த பிள்ளை" என்ற பாடல் சாருகேசியில் அமைந்தது. வெகுகாலம் இதைச் சிவாஜி கணேசன் படப் பாடல் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
'தூங்காத கண்ணென்று பாடல்' பாணியில் அமைந்த பாடல்




நெருக்கடியான சூழலையும் ரசிக்க வைத்து ஒரு அனுபவமாக்குவதே படைப்பு. சாருகேசி துயரத்தையும் கவிதையாக வெளிப்படுத்தும் ராகம். 'முந்தானை முடிச்சு' படத்தில் வரும் 'சின்னஞ்ச்சிறு கிளியே' பாடல் அந்தவகையைச் சேர்ந்தது. பின் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் மிகவும் மெல்லிசை பாணியில் 'காதலின் தீபம் ஒன்று' என்ற பாடலை அளித்திருப்பார். எஸ்.பி.பியின் குழைவுடன் சாருகேசிக்கே உரிய பிரிவின் ஏக்கத்தை உணர்த்தும் பாவம் மிக அழகாக வெளிவந்திருக்கும்.



ஏராளமான பாடல்களைச் சாருகேசியில் தந்திருக்கிறார் இளைய ராஜா. 'நானே ராஜா நானே மந்திரி' படத்தில் வரும் 'மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்' என்ற பாடல் அருமையான பாடல்.அதே போல் 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு' படத்தில் வரும் 'உயிரே உயிரின் ஒளியே' என்ற பாடலும் ஏசுதாஸின் கந்தர்வக் குரலில் மெல்லிய துயரத்தை வெளிப்படுத்துகிறது.

  

'வாத்தியார் வீட்டுப் பிள்ளை' சத்யராஜின் நூறாவது படம் .சிவாஜியை(நவராத்திரி)த்  தவிர மற்ற நடிகர்களின் நூறாவது படம் போலவே (கமல்-ராஜபார்வை,ரஜினி-ராகவேந்திரா) இந்தப் படமும் தோல்விப் படம்.ஆனால் அந்தப் படத்தில் ஒரு அற்புதமான சாருகேசி அமைத்திருப்பார். வழக்கமான பாணியில் தங்கையை வாழ்த்திப் பாடினாலும் ஒரு பிரிவின் சோகம் அதில் இழையோடும் .அதுதான் ராஜா!.அதுதான் ராகம்!.



அதேமாதிரி இயக்குனர்.தயாரிப்பாளர் என்று யாருமே சிரத்தை இன்றி மேலோட்டமாக எடுத்த படம் சிங்கார வேலன்.ஆனால் ராஜா அப்படி விடுவாரா? 'தூது செல்வதாரடி?' என்று ஒரு பாடல்.சின்னப் பாடல் தான் ஆனால் ஜானகி தூ......து என்று ஆரம்பித்துச் சாருகேசியைக் கோடிகாட்டிப் கொடிகட்டிருப்பார்.தன் வேலையை மிகவும் ரசிக்கும் ஒருவரால் நுனிப்புல் மேய்ந்து கொண்டே இருக்க முடியாது .



நாட்டியப் பாடல்களுக்காக ஜி.ராமநாதன் காட்டிய பாதையிலிருந்து மெல்லிசைக்குத் தாவியது சாருகேசி. வெகுகாலம் கழித்துச் சாருகேசியில் ஒரு செவ்வியல் பாணியிலான நாட்டியத்திற்கேற்ற பாடல் இளையராஜா இசையில் அமைந்தது. 'ஸ்ரீ ராகவேந்திரா' திரைப்படத்தில் (வழக்கம் போல் நூறாவது படம், படம் தோல்வி; பாடல்கள் பிரமாதம்)  வரும் 'ஆடல் கலையே தேவன் தந்தது' பாடல்தான் அது. 'மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும் மெல்லிசையின் ஓசை போல் மெல்ல சிரித்தாள்' என்ற வாலியின் வரிகளும் வீணை,மிருதங்கம்,குரல் என்று கலவையாய் இன்பம் அளிக்கும் பாடல் அது.


எதிர்பாராமல் ஒரு ராகத்தைச் சிறப்பாகத் திரையில் அவ்வப்போது வழங்குபவர் தேவா. தன் திறமையை அவரே அறியவில்லை என்று நினைக்கிறேன். சாருகேசியில் இனிமையான இரண்டு பாடல்களைத் தந்திருக்கிறார். 'அவ்வை சண்முகி'யில் வரும் 'காதலா காதலா' என்ற பாடல் மிகவும் உச்சஸ்தாயியில் சாருகேசியில் புக முடியாத இடங்களுக்கெல்லம் போயிருக்கும் . ஆனால் தேவா இசையமைத்த எல்லாப் பாடல்களிலும் மிகச் சிறந்ததாக நான் கருதுவது ஒரு சாருகேசிப் பாடல் தான். 'நேருக்கு நேர் ' படத்தில் வரும் 'எங்கெங்கே எங்கெங்கே ' என்ற பாடல் மிகவும் நேர்த்தியாக இசையமைக்கப் பட்டிருக்கும்.



மிக இனிமையான ராகம் சாருகேசி. ஒரு சிறு அலைவரிசை மாறினாலும் அந்த இசை வேறு ராகமாக மாறி வேறொரு உணர்வைக் கொடுத்துவிடும். ஒலியில் புதைந்துள்ள உணர்வுகளை மீட்டெடுப்பவனே நல்ல கலைஞன். ராமாநாதன் தொடங்கி ராஜா வரை நமக்குக் கிடைத்த கொடைகள் பல.





Sunday, July 31, 2011

விசிட்டாத்வைதம்

ஆகஸ்ட் மாத 'புதிய ஆசிரியன்' இதழில் வந்தது


                  ‘விசிட்’டாத்வைதம்
(ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்திற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது)

நோயுற்றிருப்பவரை மிகவும் அச்சுறுத்துவது நோயின் தீவிரமோ, மருத்துவமனை பில்லோ கூட அல்ல. அது நோயாளிகளைப் பார்க்க வருபர்கள் சிலரது செயல்பாடுகள்தான். மருத்துவ வட்டாரங்களையும் மிரள வைக்கும் ‘விசிட்டர்’ என்ற சொல்

நோயாளிகளைப் பார்ப்பது என்பதை ஒரு திருவிழா மாதிரி உற்சாகமாகக் கிளம்புவார்கள் சிலர். “ஆஸ்பத்திரிக்குப் போய் மாமாவைப் பாத்துட்டு அப்படியே சரவணபவன்ல போய் சாப்டுட்டு வீட்டுக்குப் போலாம்” என்று திட்டமிட்டுப் படையெடுக்கும் ஒரு கும்பல்.. வசிட்டர் வாயல் கூட பிரம்ம ரிஷிப் பட்டம் வாங்கி விடலாம். ஆனால்  விசிட்டராக வருபவர் வாயால் நல்ல தகவல் கிடைப்பது அபூர்வம்.

“நம்ம பரமசிவம் பையன் இப்படித்தான் சாதாரண ஜுரம்னு ட்ரீட்மெண்ட் எடுத்திட்டிருந்திருந்தான். கடைசில பாத்தா முத்தின டி.பி யாம்.” என்று திகிலூட்டுவதுடன் “இந்த ஆஸ்பத்திரியா ? நம்ம ராமசாமி வீட்டை விக்க வைச்சதே இந்த டாக்டர்தான்” என்று ஜப்தி செய்ய வந்திருக்கும் அமீனா அளவுக்கு மிரட்டுவதும் உண்டு .

நோயாளியைப் பார்பதற்கென்றே உரிய சடங்கு சாங்கியமான கட்டிதட்டிப் போன ஹார்லிக்ஸ், வாடிய ஆரஞ்சு (இவற்றை நோயாளியே பின்னர் வெளியில் விற்றுவிடுவார்)  போன்றவற்றைக் கொடுத்து  நோயாளியைப் பார்த்துவிட்டுச் சும்மாச் செல்பவர்கள் சிலரே. சிலருக்குத் தன் மருத்துவ அறிவை நிருபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும்.

மருத்துவருக்கே சரியாகப் புரியாத எக்ஸ்ரே, ஸ்கேன் போன்றவற்றை ஸ்டைலாகப் பிடித்து “என்ன சித்தப்பா! இங்க இவ்வளவு வெள்ளையா இருக்கு? “ என்று கருத்துக் கூறுவர் . அல்லது “ அக்கா! அரிசியை நல்லாக் களைஞ்சிருந்தா மச்சானுக்கு கிட்னில கல் வந்திருக்காதுல்ல! “ என்று இன்று ஒரு தகவல் கொடுப்பர்.

பிறகு பைநிறைய தாங்கள் கொண்டு வந்திருக்கும் அறிவுரைகளைப் பொழிந்து தள்ளும் படலம் ஆரம்பம். இன்னும் ‘மூணு வருஷத்துக்கு எந்த வேலையும் செய்யக் கூடாது !’ என்று வீட்டில் உலைவைப்பதற்கே உலைவைப்பார். அல்லது தினம் ‘அரைக்கிலோ பாகற்காய் சாப்பிட்டு கிழக்கிலோ வடக்கிலோ ஒரு கிலோமீட்டர் நடந்தால் நல்லது!” என்று என்றோ ஒரு நாள் முடி வெட்டிக் கொள்ள சலூனில் காத்திருந்த போது செய்தித்தாளில் படித்த செய்தியைப் பகிர்ந்து கொள்வார்.
விபத்தாக இருந்தால் கட்டாயம் ‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு’ என்ற பழமொழியை முன்மொழியாமல் போக மாட்டார்கள்.

நோயாளியிடம் தனக்கிருக்கும் அக்கறையை வெளிப்படுத்த “எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர். குணமாக்கிருங்க !” என்று மருத்துவர்களை உசுப்பேற்றுவதும் இவர்களே. பில்வரும் போதோ அந்தத் தொகுதிப் பக்கமே காணப்படமாட்டார்.

பல வருடங்களாக முகத்திலேயே முழிக்காமல்  இருப்பவர் ‘ஒரே ஒரு நிமிஷம் பார்த்திட்டுப் போறேன்’ என்று அவசரப் பிரிவில் சண்டையிடுவது மற்றும் இவ்வளவு நாள் ஒரு வாய் தண்ணீர் கூடக் கொடுக்காதவர் “ டாக்டர் ! இவர் ஆப்பிள் ஜூஸ் சாப்பிடலாம் தானே? “ என்று கேட்பது போன்றவை சில விசிட்டர்களின் விசேஷ குணங்கள்.

இவர்களைக் கலைக்கக் கண்ணீர்புகையை விட வலிய குண்டு ஒன்றை எங்கள் பேராசிரியர்கள் சிலர் பயன் படுத்துவதுண்டு. “சார்! நீங்க எந்த ப்ளட் க்ரூப்? நோயாளிக்கு ரெண்டு பாட்டில் இரத்தம் தேவைப் படுகிறது. கொஞ்சம் கூட வாங்க” என்றால் உடனே “காலையில் ஷேவ் பண்ணும் போது நிறைய ரத்தம் போயிடுச்சு….” என்று இழுத்த படியே காணாமல் போய்விடுவார்கள்.

“கேட்டிலும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளக்குமோர் கோல்”—குறள்

நல்ல நண்பரை அளக்கும் கருவியாக இருப்பதால் கெடுதியிலும் ஒரு நன்மை உண்டு. நோயுறுதலும் அவ்வாறே.
*************************************************************************************************

Tuesday, July 19, 2011

ஆபோகி - .இன்றைக்கும் என்றைக்கும் ஆனந்தமே!

நந்தனார் சரித்திரம் இயற்றிப் புகழ் பெற்றவர் கோபால கிருஷ்ண பாரதி. இவரது ஐயே மெத்தக் கடினம், மாடு வழி மறைக்குதே, சற்றே விலகி இரும் பிள்ளாய் போன்ற கீர்த்தனைகள் மிகப் பிரசித்தி பெற்றவை. உபரி தகவல்: நந்தனார் என்ற திரைப்படத்துக்குத் தான் இந்தியத் திரையுலகில் முதன் முறையாக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினார் கே.பி சுந்தராம்பாள். அப்படிப் பட்ட கோபாலகிருஷ்ணபாரதி சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிகளின் இல்லத்திற்குச் சென்றிருந்தார்.அங்கு ஆபோகி ராகத்தில் ஒரு கீர்த்தனையைப் பாடிக் கொண்டிருந்தனர் தியாகய்யரின் சிஷ்யர்கள்.  நீங்கள் இந்த ராகத்தில் ஏதாவது பாடியிருக்கிறீர்களா என்று தியாகய்யர் கோபாலகிருஷ்ண பாரதியைக் கேட்டார். அதுவரை அந்த ராகத்தில் பாடல் புனைந்திராத பாரதி உடனே அங்கேயே ஆபோகி ராகத்தில் ஒரு பாடல் புனைந்தார். 'சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா? " என்ற அந்தப் பாடல் இன்றுவரை மங்காப் புகழ் கொண்டது.



ஆபோகி மிகவும் எளிமையான இனிமையான ராகம். ஸ ரி க ம த ஸ் ஸ் த ம க ரி ஸ என்ற ஸ்வர வரிசையைப் பெற்று வருகிறது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியிலுள்ள லக்ஷ்மி வராஹப் பெருமாள் மீது முத்துஸ்வாமி தீக்ஷிதர் பாடிய ஸ்ரீ லக்ஷ்மி வராஹம் என்ற பாடல் ஆபோகி ராகத்தில் அமைந்துள்ளது. பாபநாசம் சிவன் பாடிய "நெக்குருகி உன்னைப் பணியாக் கல்நெஞ்சன்' என்ற பாடல் கல்நெஞ்சையும் உருக்கும். அருணா சாயிராமின் கணீர்க் குரலில் ஆபோகியின் அழகைக் காணலாம்


திரை இசையில் அவ்வப்போது ஆபோகி தலைதூக்கும் .
'மாலை இட்ட மங்கை' என்ற படத்தில் ஆபோகி ராகத்தில் அற்புதமான பாடலை டி.ஆர். மகாலிங்கம் பாடியிருப்பார்.எப்போதும் உச்சஸ்தாயில் பாடும் அவர் மிக மென்மையாகப் பாடியிருக்கும் இப்பாடல் ஆபோகியின் இனிமையைப் பறைசாற்றுகிறது. இந்தப் படத்தில் உள்ள 'செந்தமிழ் தேன் மொழியாள் ' அளவுக்குப் புகழடையவில்லை இப்பாடல். உடன் பாடியவர் A.P. கோமளா. இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. வருடம் 1958.

பாடலைக் கேட்க
பாடலைக் கேட்கக் க்ளிக் செய்யுங்கள்

1964 ஆம் ஆண்டு வந்த கலைக்கோவில் என்ற படத்தைப் பலர் மறந்திருக்கலாம். ஆனால் ஆபோகி ராகத்தில் அமைந்த 'தங்க ரதம் வந்தது' என்ற பாடல் பாலமுரளிக்ருஷ்ணாவின் குரலில் அமரத்துவம் பெற்றது.மெல்லிசை மன்னர்கள் இசையில் கவியரசரின் வரிகளில் 'மாங்கனி கன்னத்தில் தேனூற சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீனாட' போன்ற வரிகளுடன் அமைந்தது அப்பாடல்.

  



இசை ஞானியிடம் நல்ல மெட்டுக்களை வாங்குவது ஒரு கலை.அதில் ஒரு சில இயக்குனர்களே தேறுவார்கள். ஸ்ரீதர், பாலு மகேந்திரா, மணிரத்னம்,ஃபாசில், மகேந்திரன் என்று சிலரது படங்களுக்கு இளையராஜா விசேஷமான இசையைக் கொடுப்பார். அந்த வரிசையில் ஆர்.சுந்தர்ராஜனும் ஒருவர். இன்று நகைச்சுவை நடிகராக உருமாற்றம் ஆகியுள்ள அவர் ஒரு காலத்தில் மிகவும் வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்த போது இளையராஜாவுடன் இணைந்து இசையை மையமாக வைத்துப் பல படங்களைத் தந்திருக்கிறார். மிக எளிமையான கிராமத்துக் கதை, கவுண்டமணி செந்திலின் பெட்ரோமாக்ஸ் லைட் காமெடி போன்றவற்றுடன் இனிய பாடல்கள்க்காகவும் நினைவில் நிற்கும் படம் 'வைதேகி காத்திருந்தாள்'.அந்தப் படத்தில் ஆபோகி ராகத்தில் அமைந்துள்ள ஒரு அற்புதப் பாடல் 'இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே' . ஜெயச்சந்திரன் என்றவுடன் நினைவுக்கு வரும் இப்பாடலின் ஆரம்ப ஆலாபனையும் இடையில் வாணிஜெயராம் பாடும் ஸ்வரக் கோர்வைகளும் 'தகிட தகிட' என்னும் துள்ளல் நடையில் வரும் தபேலாவும் வீணையும் இணைந்து என்றென்றைக்கும் ஆனந்தம் அளிக்கும் அனுபவத்தைக் கொடுக்கிறது.





அதே சுந்தர்ராஜன், அதே இளையராஜா அதே ஆபோகி. இந்த முறை 'அம்மன் கோவில் கிழக்காலே.'  'காலை நேரப் பூங்குயில் கவிதை பாடி' என்ற பாடல். வயலின் ,குழல் ஷெனாய் என்று எந்த வாத்தியத்தில் வாசித்தாலும் ஆபோகி ராகத்தின் அடையாளத்தையும் இனிமையையும் மாற்றாமல் தந்திருப்பார்.





இளையராஜாவின் பாணியின் ஒரு அம்சம் என்னவென்றால் ஒரு பாடலில் அவர் தேர்வு செய்யும் ராகத்தின் இலக்கணத்தைப் பெரும்பாலும் மீறமாட்டார். எம் எஸ்வி , ஏ ஆர் ரகுமான் போன்றவர்கள் இலக்கணத்தைப் பற்றிக் கவலைப் படாமல் சில விதிமீறல்களை அனுமதிப்பார்கள். அது ஒரு வகை அழகு. அதனாலேயே ராஜாவின்  பாடல்கள்  ராகங்களை அறிவதற்கான ராஜபாட்டையாக இருக்கிறது. கீர்த்தனைகள் கற்றுக் கொள்வதற்கு முன் இது போன்ற பாடல்கள் மூலமாகத்தான் என் போன்றவர்களுக்கெல்லாம் ஏதோ இசையைப் பற்றிப் பேசும் அளவுக்காவது விவரம் தெரிய வருகிறது.

வெகுகாலத்திற்கு ஆபோகி ஏனோ திரை இசையில் தென்படவே இல்லை. ராகங்களை அடிப்படையாகக் கொண்டு இசையமைக்கும் காலம் மலையேறி விட்டாலும் அபூர்வமாகச் சில சமயம் நல்ல கர்நாடக ராகங்களில் பாடல்களைத் தரும் வித்யாசாகரின் இசையில் ஒரு ஆச்சரிய ஆபோகி - 'கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் '. கோபாலகிருஷ்ண பாரதி முதல் நயன்தாரா காலம் வரை ஆபோகியின் இளமை மாறவில்லை.


















Thursday, July 7, 2011

பேசுவது கிலியா?

(அச்சுப்பிழை அல்ல கிலி தான்)


புதிய ஆசிரியன் ஜூலை இதழில் வந்த கட்டுரை.


     ‘நீரா’ ரும் கடலுடுத்த தமிழகத்தின் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல ,மருத்துவர்களுக்கும் தொலைபேசி உரையாடல் சில சமயம் கிலியை உண்டாக்கும்.
       திடீரென்று ஒரு அழைப்பு வரும் “ சார்! அந்த நீலக்கலர் மாத்திரையை எப்ப சாப்பிடணும்? காலையிலா? மாலையிலா?” என்று. அல்லது “ சார்! மூணு வருஷத்துக்கு முன்னே வந்தேன்ல! இப்பவும் அதே மாதிரி தொந்தரவு இருக்கு.அதே மாத்திரையைச் சாப்பிடட்டுமா?” என்று ஒருவர் சிவ பெருமான் மாதிரி ஆதியும் அந்தமும் தெரியாமல் புதிர் போடுவார்.
        ஒருமுறை ஒருவர் தொலைபேசியில் அழைத்துத் தன் மகன் இருமுவதைத் தொலைபேசியில் கேளுங்கள் என்று மகன் வாயருகில் ஃபோனை வைத்துக் கேட்கச் செய்தார். நல்ல வேளை அவனுக்கு வாய்வுத் தொந்தரவு இல்லை! 
   பொதுவாக மருத்துவச் செலவுகள் பர்ஸைப் பதம் பார்ப்பது போல் மருத்துவச் சொற்கள்  நம் பற்களைப் பதம் பார்க்கும். என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல முறை தொலைபேசியில் ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்டையோ,ஆய்வகப் பரிசோதனை முடிவையோ வாசிப்பார்கள்.அப்போது ஒவ்வொரு சொல்லையும் பதம் பிரித்து அவர்கள் வாசித்து முடிப்பதற்குள் என் தலைமுடி ஒரு  இஞ்ச் கூடுதலாக வளர்ந்திருக்கும். ஒரு முறை ஒருவர் ஒரு நவீன மருத்துவ மனையில் எடுத்த ஒரு மாஸ்டர் ஹெல்த் செக்கப்பின் முப்பத்தி இரண்டு பக்கங்களையும் தொலைபேசியில் படித்தார். “போன வருடம் எடுத்ததையும் படிக்கிறேன் .கம்பேர் பண்றீங்களா? “ என்றார்.நல்ல வேலை என் தொலைபேசி அதற்குள் உயரிழந்து விட்டது. இப்பொழுதெல்லாம் அந்த முடிவுகளை மின்னஞ்சல் செய்யச் சொல்லித் தப்பித்து விட முடிகிறது.
     அதே போல் தொலை பேசி உரையாடல் மருத்துவ அறிவை மட்டுமின்றி ஆங்கில அறிவையும் சோதிப்பதாக அமையக்கூடும்.என்னுடைய ஆங்கில மொழிப்புலமையை என் மனைவி அவ்வளவாகச் சிலாகிக்காவிட்டாலும் நான் சற்று உயர்வாக எண்ணிக் கொண்டிருந்தேன்.அந்த நினைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக மண் விழத் தொடங்கியது தொலைபேசி உரையாடல்களால்தான்.
     நாம் அன்றாடம் தொலைபேசியில் யாருக்காவது நம் பெயர்,விலாசம்,வளர்ப்பு மிருகம் பற்றிய விவரங்கள் என்று ஏதாவது தகவல் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.ஒரு முறை ஒரு வங்கியிலிருந்து பேசிய தேன்மொழியாள் ஒருவள் நான் சொன்ன எல்லாச் சொற்களுக்கும் “ஸ்பெல்லிங்க் என்ன?” என்று கேட்டுக் கொண்டே இருந்தாள்.என்னுடைய படிப்பு என்ன என்று கேட்டாள்(நல்ல வேளை மதிப்பெண்களைக் கேட்கவில்லை).நான் M.D என்றதும் அதற்கும் ஸ்பெல்லிங்க் கேட்டாள்.ஒரு வேளை MD என்பதை  empty என்று நினைத்துவிட்டாள் போலும்.

       நோயாளி மருத்துவர் இருவருக்கும்
மிகவும் பயங்கரமான அனுபவம் தொலைபேசியில் மருந்துகளைச் சொல்வது.நாம் ஆஸ்பிரின் என்று சொல்லிவிட்டுத் தொலை
பேசியை வைத்துவிட முடியாது.உடனே “ஏ ஃபார்?” என்ற கேள்வி வரும்.”எஸ் ஃபார் ?” என்ற துணைக்கேள்வி வரும்.
நானும் ஆங்கில அகராதியை உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் ரேஞ்சுக்கு யோசிப்பேன். எனினும் வார்த்தைகள் வராமல் தடுமாறும்.ஆங்கில எழுத்துக்களில் குறைந்தபட்சம் இருபத்தைந்து எழுத்துக்களாவது எனக்குத் தொந்தரவு கொடுக்கும். (தொலைபேசியில் மருந்துகளைக் கூறுவதில் இன்னொரு சங்கடம் –அதற்கு ஃபீஸ் வாங்க முடியாது)

   ஒருமுறை இப்படித்தான் ஒருவர் தொலைபேசியில் மருந்து கேட்டார். அப்போது என் என்ற ஆங்கில எழுத்துவரும் ஒரு மருந்தைச் சொன்னே. ‘என்’ ஃபார் என்பதற்கு எந்த வார்த்தையும் நினைவுக்கு வரவில்லை. திடீரென்று என் ஃபார் நயன் தாரா என்றேன். மறுமுனையில் இருந்தவர் ஒரு ஆச்சாரமான முதியவர்.என்ன நினைத்தார் என்று தெரியவில்லை.அதன்பின் என்னிடம் வரவே இல்லை.ஒருவேளை நாராயணா என்று சொல்லியிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாரோ என்னவோ? . இல்லை அவர் த்ரிஷாவின் ரசிகராகக் கூட இருக்கலாம்.


(ஹிந்து வில் மார்ச் 27 வந்த என் ஆங்கிலக் கட்டுரையைச் சின்னாபின்னமாக்கித் தந்திருக்கிறேன்)

Monday, June 13, 2011

சுயம் அழியும் நேரம்


             சுயம் அழியும் நேரம்
     புதிய ஆசிரியன் ஜூன் 2011 இதழில் வந்தது

           அதென்னமோ தெரியவில்லை.சுண்டலை விட சுண்டல் தரும் தாளில் உள்ள விஷயங்கள் சுவையாக இருக்கின்றன.ஒருவர் எழுதுவதைப் பலர் படிக்க வேண்டுமானால் சுண்டல்காரரிடம் அவரது புத்தகத்தைக் கொடுத்தால் போதும்.ஆனால் ஒரு கஷ்டம் .சுவாரஸ்யமாகப் படிக்கும் விஷயம் பாதியில் நின்றுவிடும். ’நாயுடன் நிற்கும் நடிகை யார்?’ என்று நம் கையில் உள்ள தாளில் உள்ள கேள்விக்கு விடை தெரியாமல் முழிப்போம்.
          அன்றும் இப்படித்தான் வீட்டு வாசலில் சுண்டல் வாங்கிய தாளைப் படித்துக் கொண்டிருந்தேன்.ஏதோ ஆன்மீக இதழ் போலும். ‘யார் இந்த நான்?’ என்று ஒரு கட்டுரை. ஒரு கார்ப்பரேட் ஆனந்தா ஓஷோ,ஜே.கே, ஜென் என்று காக்டெய்லாகக் கலக்கி எழுதியிருந்தார்.         
    நாம் நமக்கு என்று பெயர்,இனம்,அந்தஸ்து போன்றவற்றுடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம். இந்த அடையாளங்கள் நீங்கிச் சுயம் அழிதலே ஞானம்.இவ்வாறு சென்ற கட்டுரை முடிவு தெரியாமல் பாதியில் நின்றுவிட்டது.சுயத்தை அழிக்கும் வழியைச் சுண்டல்காரரிடம் கேட்கலாம் என்றால் அவர் வெகுதூரம் சென்று விட்டார்.கட்டுரை வந்தது எந்த இதழ் என்றும் தெரியவில்லை.எடைக்குப் போட்டபின் எல்லா இதழ்களும் தங்கள் சுயத்தை இழந்து விடுகின்றனவே.
           அகங்காரத்தை அழித்து ஞானம் அடையும் வழியை யோசித்துக் கொண்டிருந்தபோது ஒருவர்  என்னிடம் வந்து “நீங்க தானே 53?” என்றார்.முதலில் ஒன்றும் புரியவில்லை பின்புதான் எனது வீட்டு எண்ணைச் சொல்கிறார் என்று சுதாரித்து “ஆமாம்!” என்றேன். வீட்டு வரியைக் கட்டச் சொல்லி நினைவு படுத்தி விட்டு 53 A  வை அழைத்தபடிச் சென்றார் அந்த மாநகராட்சி ஊழியர்.    
          உள்ளே தொலைபேசி அலறியது.”நீங்க 2541494 தானே ?” என்றது பெண் குரல். என் பெயர் எண்களால் ஆனதா? அல்லது எழுத்துக்களாலா? என்றெண்ணும்போது அது தொலைபேசி எண்  என்று நினைவுக்கு வந்தது.
“ஆமாம்!”
“டெலிஃபோன் லைன் கரெக்டா இருக்கான்னு செக் பண்றோம் .நான் பேசறது கேட்குதா சார்? என்றார். பதிலுரைக்கும் முன் வைத்துவிட்டார்.
           வரிகட்டப் பணம் எடுக்கலாம் என்று தானியங்கி நோக்கிச் சென்றேன்.முக்கிய சாலையில் ஏ.டி.எம் இருந்ததால் ஒரே நெரிசல்.வண்டியைச் சற்று இசகு பிசகாக நிறுத்தி விட்டுச் சென்றேன்.வரிசையில் நின்ற பின் ‘எல்லாத் துறையினருக்கும் ஒரே நாளில் சம்பளம் போடுவதால் தான் ஏ.டி.எம் களில் கூட்டம் சேர்கிறது’ என்று என் சமூக பொருளாதார அறிவைக் காட்டிக் கொண்டிருந்தபோது ஒரு போக்குவரத்துப் போலீஸ் “நீங்கதானே 3322 ?” என்று கேட்டார். தலையை ஆட்டியதும் “ட்ராஃபிக்குக்கு இடைஞ்சலா இருக்கு .வண்டியை எடுங்க சார்” என்றார்.
      சரி வங்கிக்கே சென்று பணமெடுக்கலாம் என்று போனால் அங்கு நல்ல கூட்டம். சற்றே அமர்ந்து அங்கு தொங்கிக் கொண்டிருக்கும் நானாவிதமான கடன் பற்றிய விளம்பரங்களில் ஏதேனும் வாங்காமல் விட்டு வைத்திருக்கிறோமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். விளம்பரங்களில் தான் கடன் வாங்கியவர்களும் கொடுத்தவர்களும் சிரிக்கிறார்கள்.திடீரென அருகில் அமர்ந்திருந்த ஒருவர்  “நீங்க 312 தானே?” ” உங்களைக் கூப்பிடறாங்க!” என்றார்.எனக்குத் தான் சஹஸ்ரநாமம் போல் எத்தனை பெயர்கள் (நடிகர் சஹஸ்ரநாமத்திற்கு அந்த ஒரு பெயர்தான்) என்று என் கையிலிருந்த டோக்கனைச் சரி பார்த்துப் பணம் வாங்கி வெளியே வந்தேன்.
     இன்று நான் 312?நாளை யார் 312 ஆக இருப்பாரோ?ஒவ்வொரு இடத்திலும் அடையாளம் அழித்து வேடமிட்டுக் கொள்கிறோம்.
மருத்துவர்களிடம் சென்றால் கேஸ் வந்திருக்கிறது என்பார்கள்.ஆட்டோ டிரைவர் சவாரி வந்திருக்கிறது என்பார்.அவையும் நம் சுயத்தை அழிக்கும் இடங்கள் தானே என்று எண்ணியவாறே அருகிலிருந்த ஓட்டலுக்குச் சென்று காபி என்றேன்.ஏழுக்கு ஒரு காப்பி! என்று என் டேபிள் எண்ணை வைத்து என்னை அடையாளப் படுத்திச்ச சென்றார்.
     ஒரு வழியாக வீடு அடைந்தேன். வாசலில் என் பெயரைப் பார்த்ததும் தான் ‘சுய’ நினைவே வந்தது.சமுதாயத்தில் கும்பலோடு இருக்கும் போது இல்லாத சுயம் தனிமையில் வந்து விடுகிறது.சமூகக் கடலில் கரையும் போது சுயம் பெருங்காயமாகிறது. ஆஹா! நமக்கும் சுயமாகவே கட்டுரை எழுத வருகிறது.இந்தத் தாடி மட்டும் சற்று வளர்ந்து தொலைத்தால் குருவாகவே ஆகிவிடலாம்! சுய சம்ஹார யோகா.கட்டணம் ஆயிரம் டாலர்கள் மட்டுமே!

(பி.கு: சுண்டல் சாப்பிட்ட பின் எறியாமல் இதைப் படித்தமைக்கு நன்றி)
           
          

             


Sunday, May 15, 2011

மாயாமாளவ கௌளை -ராஜ ராகம்

மீண்டும் எழுத்தாளர் சுஜாதாவுக்கே வருவோம்.அவருடைய எழுத்துக்கள் பலதரப்பட்டவை. தாத்தா ஈஸிச்சேரில் சாய்ந்து கொண்டு சுஜாதா ஆழ்வார்களைப் பற்றி எழுதியதைப் படித்துக் கொண்டிருப்பார்.பேரன் மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைப் படித்து ரசித்துக் கொண்டிருப்பான்.அவரா இது என்று வியக்கவைக்கும்.அதுபோல் சில ராகங்களையும் இசை அமைப்பாளர்கள் வேறு வேறு இடங்களில் பயன்படுத்தி இருப்பார்கள்.ஒரே ராகத்தில் அமைந்த இரண்டு பாடல்களைக் கேட்கும் போது அதுவா இது என்று வியக்கவைப்பதே ஒரு இசையமைப்பாளரின் படைப்புத்திறனின் வெளிப்பாடு.

படைப்பாளியின் கற்பனையோடு ராகமும் வளைந்து கொடுக்கும் தன்மையுடையதாய் இருந்தால் நமக்குக் கிடைப்பது விதவிதமான விருந்துகள் தான்.அப்படி ஒரு ராகம் தான் மாயா மாளவ கௌளை.இந்த இடத்தில் ஒரு சிறு தகவல்.கர்நாடக சங்கீதத்தில் ரி,க,ம,த,நி ஆகிய ஸ்வரங்கள் இரண்டிரண்டு இருக்கும் உ-ம் சின்ன ரி(ரி1) பெரிய ரி (ரி2). 'ஸ' வும் 'ப' வும் ஆதார ஸ்ருதிகள் ஆகவே ஒன்றுதான்.கீ போர்டில் ஒரு வெள்ளைக் கட்டைக்கு முன் மேலே இருக்கும் கருப்புக் கட்டை சின்ன ஸ்வரம்.('ம' மட்டும் விதிவிலக்கு). ஒரு ராகத்தில் ஏதாவது ஒரு ஸ்வரம்( சின்னதோ பெரியதோ) மட்டுமே வரும்.(இதிலும் சில விதிவிலக்குகள் உள்ளன).



இவ்வாறு ஸ்வரங்களின் விதவிதமானச சேர்க்கையில் (உ-ம் ஸ ரி1க2 ம1 ப த1நி2ஸ் -மாயா மாளவ கௌளை.ஸ ரி2க2ம2ப த2 நி2 ஸ்-கல்யாணி) 72 வகையான ராகங்கள் கிடைக்கின்றன.இவை மேளகர்த்தா ராகங்கள் என அழைக்கப் படுகின்றன.ஏழு சுரங்களும் வருவதால் சம்பூர்ண ராகம் என்றும் அழைக்கப்படும்.இவற்றில் 15 ஆவது மேளகர்த்தா ராகம் மாயாமாளவ கௌளை.ராகங்கள் உருவாகும் விதம் பற்றி இன்னொரு முறை விரிவாக விவாதிக்கலாம்.

கர்நாடக சங்கீதம் படிப்பவர்களுக்கான பால பாடங்கள் மாயா மாளவ கௌளை ராகத்தில்தான் சொல்லிக்கொடுக்கப்படிகின்றன.உடல் பொருள் ஆனந்தி என்றொரு நாவலில் ஜாவர் சீதாராமன் இந்த ராகம் வீணையில் வாசிக்கப்படுவது  எப்படி உள்ளத்தை உருக்கும் விதம் உள்ளது  என்று விலாவாரியாக விவரித்திருப்பார்.சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் 'ஸ்ரீ நாதாதி குரு குஹோ 'என்று இந்த ராகத்தில் தான் தன் முதல்பாடலை இயற்றினார்.தியாகய்யர் 'துளசி தளமுலசே' என்று ஒரு இனிமையான கீர்த்தனை அமைத்திருக்கிறார்.முத்துத்தாண்டவர் இயற்றிய 'ஆடிக்கொண்டார் ' என்ற தமிழ்பாடலும் மிகப் புகழ்பெற்றது



துளசிதளமுல மெட்டிலேயே  பட்டினத்தார் (1962)படத்தில் 'நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ 'என்று ஜி.ராமனாதன் அற்புதமான பாடல் ஒன்றை அமைத்திருப்பார்.'கோடிச் செல்வம் நிறைந்தாலும் என்ன
அதைக் குலவிக் கொஞ்ச மனம் குளிர்ந்திடுமோ
ஓடி வந்து விளையாட இங்கு ஒரு
பாலன் வேண்டுமென வேலன் தந்தையிடம்
(நிலவே) என்று மருதகாசி உருக்கமாய் எழுதியிருப்பார்....பழைய படங்களில் அபூர்வமாகவே இந்த ராகம் பயன்பட்டது.எனினும் 'ஆலய மணி'(1962) யில் வந்த இப்பாடல் மிகப் புகழ்பெற்றது.இடையில் வரும் ஹம்மிங்கில் ராக ஆலாபனை இனிமையாக இருக்கும்


திரை இசையில் மாயாமாளவ  கௌள ராகத்தை மிகமிக அதிகமாகப் பயன்படுத்தியது இளையராஜா தான்.எனக்குத் தெரிந்தே ஐம்பது பாடல்கள் வரை இந்த ராகத்தில் போட்டிருக்கிறார்.                            
இந்த ராகத்தைப் பெரும்பாலும் உருக்கத்தையும் சோகத்தையும் வெளிப்படுத்தப் பயன்படுத்தி இருந்தாலும் வித்யாசமான களங்களிலும் பயன்படுத்தி இருப்பார்.. ஆரம்பகாலத்தில் தீபம் (1977) படத்தில் வரும் 'அந்தப்புரத்தில் ஒரு மகராணி ' என்று இந்த ராகத்தில் அமைத்திருப்பார்.கவரிமான் (1979) படத்தில் 'பூப்போல உன் புன்னகையில்' என்ற பாடலும்     வட்டத்துக்குள் சதுரம் (1978) படத்தில் வரும் 'இதோ இதோ என்னெஞ்சிலே' என்ற பாடலும் உருக்கமானவை என்றால் முதல் இரவு படத்தில் வரும் 'மஞ்சள் நிலாவுக்கு இங்கு ஒரே சுகம் ' என்ற பாடல் மிக அருமையாக ரயிலின் ஒலி,தாளலயத்துடன் அமைந்துள்ளது



இசை என்பது ஒழுங்கு படுத்தப்பட்ட ஓசை .அவ்வளவே.அதில் கர்நாடக இசை, மேற்கத்திய இசை என்ற பிரிவினையெல்லாம் மேதைகளுக்கில்லை.நாட்டுப்புற இசையில் இந்த ராகத்தைப் பிரமாதமாகப் பயன்படுத்தியிருப்பார் ராஜா. 'எங்க ஊரு பாட்டுக்காரன் ' படத்தின் 'மதுர மரிகொழுந்து வாசம்'; கிளிப்பேச்சுக் கேட்கவா வில் 'சிவகாமி நினைப்பினிலே'  ;கரகாட்டக்காரனில் 'மாரியம்மா மாரியம்மா'; சின்னத்தம்பியில் 'குயிலைப் பிடிச்சி' என்று ஏராளமான பாடல்கள் இருந்தாலும் நாட்டுப்புற இசையில் இந்த ராகத்தைக் குழைத்தெடுத்த பாடல்களில் சிறந்தது 'சின்னத்தாயி' படத்தின் இப்பாடல் தான்.ராஜாவின் மேதமைக்கு இப்பாடல் ஒரு சாட்சி.






பலநாள் பட்டினி கிடந்தவன் ஐந்து நட்சத்திர விடுதியில் நடக்கும் விருந்துக்கு வந்தது போல் எதை எடுப்பது எதை விடுவது என்று குழப்பமாய் இருக்கிறது.எனினும் ஓரிரு பாடல்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
இரண்டு 'பூ' பாடல்கள். ஒன்று 'அம்மன் கோவில் கிழக்காலே' படத்தில் வரும் 'பூவை எடுத்து ஒரு மாலை' என்ற பாடல்.இடையில் வரும் 'காத்துல சூடன் போலக் கரையுதே' என்று ஜானகி பாடுவதைக் கேட்டால் நாமும் கரைவோம்.


இரண்டாவது பூ பாடல் இளையராஜா இசையமைத்த சிறந்த பத்துப் பாடல்கள் என்ற பட்டியலை யார் போட்டாலும் இடம் பெறும்.இந்தப் பாடலின் ஆரம்பம் மிகச் சிறந்த இசைக் கோர்வையாக(ஆர்கெஸ்ட்ரா) அமைந்திருக்கும்.வயலினும் குழலும் இணைந்து இசை மழை பொழிந்திருக்கும்.படம் 'நிழல்கள்' பாடல் ' பூங்கதவே தாழ்திறவாய்'


'ஆறடிச் சுவருதான் ஆசையைப் பிரிக்குமா' (இது நம்ம பூமி) ,உயிரே உயிரே உருகாதே (ஒருவர் வாழும் ஆலயம்),என்று சோகத்தை வெளிப்படுத்தவும் பயன்படுத்தியுள்ளார்.
சுத்தமான மேற்கத்திய பாணியிலும் இந்த ராகத்தைப் பயன் படுத்தியிருக்கிறார்.இளையராஜா என்றால் வயலின் தான்.இந்தப் பாடலில் வரும் வயலின் இசை மிக அற்புதமான ஒன்று. 'காதல் கவிதைகள் படித்திடும் நேரம்' படம் -கோபுர வாசலிலே



ஒன்றரை அடி நீளமேயுள்ள ஒரு ஆர்மோனியப் பெட்டியையும் ஏழு ஸ்வரங்களையும் வைத்துக் கொண்டு நூற்றுக் கணக்கான மெட்டுக்கள் அமைப்பது மனித மூளையின் கட்டற்ற ஆற்றலின் வெளிப்பாடே.மாயா மாளவ கௌளையில்,சுத்தமான கர்னாடக சங்கீதத்தில் அமைந்த இளையராஜாவின் பாடலோடு முடிப்போம்.இங்கே இடம்பெற்றவை கொஞ்சமே.

      படம் ஸ்ரீ ராகவேந்திரர். யேசுதாஸின் கந்தர்வக் குரலில் 'ராம நாமம் ஒரு'



Saturday, May 7, 2011

ஆபேரி -- கொஞ்சும் சலங்கை ஒலி



நாதஸ்வரத்தில் வாசிக்கப் பட்டிருந்த அந்தப் பாடலைப் பாடப் பலரையும் அணுகினார் இசையமைப்பாளர் எஸ் எம் சுப்பையா நாயுடு.வருடம் 1962.ஒருவரும் சரிப்படவில்லை.அந்தப் பாடலை நாகஸ்வரத்தில் வாசித்திருந்தவர் திருநெல்வேலியிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காருகுறிச்சி என்ற கிராமம் உலகப் புகழ் பெறுவதற்குக் காரணமாயிருந்த நாகஸ்வர மேதை அருணாசலம்.கடைசியில் அப்போது அவ்வளவு பிரபலமாயிராத எஸ்.ஜானகியைப் பாட வைத்தார்.கொஞ்சும் சலங்கை படத்தில் வந்த இன்றும் அழியாப் புகழுடன் விளங்கும் 'சிங்கார வேலனே தேவா ' என்ற பாடல் அது. இத்தனைக்கும் அந்தப் பாடலுக்கு முன் வரும் 'ஏன் சாந்தா பாட்டை நிறுத்திவிட்டாய் ?' என்ற வசனத்தைக் கேலி செய்யாதவர்களே இருந்திருக்க மாட்டார்கள்.'ஆபேரி' ராகத்தில் அமைந்திருந்த அந்தப் பாடல் அந்த ராகத்தில் அமைந்துள்ள எல்லாப் பாடல்களுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்துள்ளது.இப்பாடலை எழுதியவர் கு.மா.பாலசுப்பிரமணியம்





ஆபேரி ராகம் நிறுத்தி நிதானமாகவும் வாசிக்கப் படும்.விறுவிறுப்பாகவும் வாசிக்கப்படும்..கர்னாடக சங்கீதத்தில் தியாக ராஜரின் 'நகுமோமு' என்ற கீர்த்தனை புகழ் பெற்றது.ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் இதற்குப் பைஜாமா அணிவித்துப் பீம்ப்ளாஸ் என்று அழைப்பர்.துதிப்போர்க்கு வல்வினை போம் என்று ஆரம்பிக்கும் கந்தர் சஷ்டி கவசத்தின் (சூலமங்கலம் சகோதரிகள்கள் பாடியது) முதல் சில நிமிடங்கள் ஆபேரி ராகத்தில் தான் இருக்கும்.சஷ்டியை நோக்கச் சரவண பவனார் என்றஅந்த மெட்டு பலரது உள்ளத்தில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.பக்திக்காக இல்லாவிட்டாலும் இசைக்காக.

இருபத்தியோரு தந்திகளைக் கொண்டக் கொண்ட பேரியாழ் (ஆயிரம் தந்தி உடைய பேரியாழும் இருந்தது என்கிறார் ஆபிரகாம் பண்டிதர்)  என்னும் யாழில் பண்டைய பாணர்கள் இசைத்த பண்ணே ஆபேரி .தமிழர்தம் இசைக் கருவியான நாகஸ்வரத்தில் வாசிக்க ஏற்ற ராகம்.தில்லானா மோகனாம்பாள் படத்தில் வாசிக்கப் படும் ஆபேரியைக் கேளுங்கள்.ராஜ கம்பீரம் என்றால் இது தான்.






திரை இசைத் திலகம் கே.வி மஹாதேவன் தில்லானா மோகனாம்பாள் மட்டுமின்றிப் பல பக்திப் படங்களிலும் ஆபேரியைக் கையாண்டிருப்பார் .திருவிளையாடலில் இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என்று டி.ஆர்.மகாலிங்கம் பாடியிருப்பது ஆபேரியில் .பாண பத்திரரின் பாட்டாக வரும் அப்பாடலில் வரும் உச்சஸ்தாயி நம்மைத் திகைக்க வைக்கும்




சரஸ்வதி சபதத்தில் வரும் கோமாதா எங்கள் குல மாதா பாடல் கூட ஆபேரி தான். இசை ஞானி இது போன்ற ராகத்தைப் பெரும்பாலும் மென்மையான காதல் பாடலுக்குப் பயன்படுத்தியுள்ளார்.நல்லதொரு குடும்பம் படத்தில் வந்த இப்பாடல் ஆபேரியின் மென்மையைக் காட்டுகிறது.வாணிஸ்ரீயைப் போன்றே இசையும் அழகாய் இருக்கிறது.



கமல் ஸ்ரீதேவியைப் பெண்பார்க்க வருகிறார்.வீணையை வைத்துக் கொண்டு அவர் பாடுகிறார்.பாதியில் பாடல் மறந்து விடுவது,சொந்தக்காரக் குழந்தை மடியில் உச்சா போவது என்று கலக்கலான பாடல் ஆபேரி ராகத்தில்.படம் மீண்டும் கோகிலா.(1981) வெள்ளிப் பனி உருகி மடியில் வீழ்வது போன்ற      பாடல்.எஸ்.பி ஷைலஜா, கே ஜெ யேசுதாஸ் பாடியது





சுத்தமான கர்நாடக ராகத்தை நாட்டுப்புற இசையோடு கலப்பதில் ராஜா ராஜாதான். ஆனந்த ராகம் படத்தில் வரும் பாட்டைக் கவனியுங்கள்.மீனவர்களுக்கான இசையும் ஆபேரி ராகத்தையும் இணைத்திருப்பது ஆனந்தம் தருவது.ஏதோ நெஞ்சில் ஆசை வந்து என்னென்னவோ ஆகிப் போச்சு என்ற இடத்தில் ஜானகி ஏசுதாசும் பாடும் போது நமக்கு ஏதோ ஆகிப்போகிறது.

                                     

பல பாடல்களை ஆபேரியில்  அமைத்திருக்கிறார் ராஜா.என் பாட்டு என் பாட்டு(பூ மணி) ,உம் மனசுல பாட்டுதான் படிக்குது (பாண்டி நாட்டுத் தங்கம்) வெள்ளிக் கொலுசு மணி (பொங்கி வரும் காவேரி) என்று ஏராளமான ஆபேரியை ராஜா போட்டிருந்தாலும் இரண்டு சோகம் கலந்த பாடல்கள் மிகுந்த இனிமையானவை.இரண்டுமே ஃபாஸிலின் படங்கள் தாம்.ஒன்று தமிழ் சினிமாவில் மிக அபூர்வமாகப் பாட்டி- பேத்தி உறவைப் பற்றிய படம், பாட்டும் பூவே பூச்சூடவா தான். இரண்டாவது கற்பூர முல்லை படத்தில் வரும் பூங்காவியம் என்ற பாடல். இடையில் வரும் வயலின் இசை  மனதை உருக்கும்.தாய் மகள் உறவை அற்புதமாகச் சித்தரித்த படம்.இன்று நெல்லையில் அந்தப் படங்கள் ஓடிய செல்வம் தியேட்டர் கார் ஷோ ரூமாக இருக்கிறது


ஏ ஆர் ரகுமானும் ஆபேரியில் ஒரு நல்ல துள்ளல் பாடலைப் போட்டிருப்பார்.இடையில் திசை மாறிப் போனாலும் ஜீன்ஸ் படத்துப் பாடல் நித்யஸ்ரீ யின் குரலில் அற்புதமாக ஒலிக்கிறது.





ஆபேரி ராகம்  கம்பீரமாகச் சில சமயம் மென்மையாக ,இனிமையாகச் சில சமயம் சோகமாகவும் இசைக்கப்படும் ராகம்.சிங்கார வேலனுக்கு ஈடும் உள்ளதோ?

பின் குறிப்பு : சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வரும் ஜானகி தேவி என்ற பாடலை மறந்து விட்டேன்.நண்பர் இசை அறிஞர் சுப்பாராவ் நினைவூட்டினார்-நன்றி .பாடலுக்கு இசை சங்கர்-கணேஷ்.