Friday, October 21, 2011

சிவரஞ்சனி--சொன்னாலே சோகம் வரும்

24x7மணி நேரத்  தொலைக்காட்சிகளில்லாத காலம் அது.பரபரப்பான காலை நேரம். தூர்தர்ஷன் முக்கியத் தலைவர் ஒருவர் இறந்த செய்தியை அலறிக் கொண்டிருக்கிறது.வீட்டில் இருக்கும் யாரும் அந்த செய்தியைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. திடீரென்று ஒரு வடநாட்டு உஸ்தாத் வந்து நிலையத்தில் அமர்கிறார்.தலைவர் இழுத்துக் கொண்டிருக்கும் போதே அவரது லீவைக் கான்சல் செய்துவிட்டு அழைப்பு விடுத்து விட்டனர். இது மாதிரி சமயங்களுக்கே உரிய மங்கலான ஆடைகளையும் முகபாவனைகளையும் அணிந்த அவர் தனது சாரங்கியை எடுத்துச் சிவரஞ்சனியை இரண்டு இழுப்பு இழுத்தார். அவ்வளவு தான் மொத்தக் குடும்பமும் திரும்பித் தொலைக்காட்சியைப் பார்த்தது."அய்யய்யோ! போய்ட்டாரா?" என்று .அப்போது தான் அந்தச் சாவு அவர்களுக்கு உறைத்தது. அவ்வளவு மகிமை சிவரஞ்சனிக்கு உண்டு.அண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் போல் சிவரஞ்சனியைச் சொன்னாலே சோகம் வரும். ஹிந்துஸ்தானியிலும் பிரபலமான ராகம் இது. புல்லாங்குழலில் சிவரஞ்சனியைக் கேளுங்கள்.மனதை உருக்கும் இசை.உங்களுக்கு என்னென்ன பாடல்களை நினைவு படுத்துகிறது என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள்


மனதில் இனம்புரியாத ஒரு அழுத்தம் ஏறுகிறதா?அந்தச் சோகத்திலும் ஒரு சுவை இருக்கிறதல்லவா? அந்த நிறைவுணர்வை வெளிப்படுத்த இசையரசி எம் எஸ்ஸின் குரலில் அமைந்த அமரத்துவம் வாய்ந்த பாடல் "குறைஒன்றும் இல்லை ". பாடலின் துவக்கமும் முதல் சரணமும் சிவரஞ்சனியில் அமைந்திருக்கிறது.


சிவரஞ்சனி கர்னாடக இசையில் பிரபலமாகாத ராகம். கீர்த்தனைகள் பெரிதாக இல்லாவிட்டாலும் தற்காலத்தில் மிகவும் பரவலாகப் பாடப்படுகிறது.'தருணம் இதைய்யா' என்ற பாபனாசம் சிவனின் கீர்த்தனை இருக்கிறது .மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் அருமையான தில்லானா ஒன்று உண்டு. நாகூர் ஹனிஃபாவின் உருக்கும் குரலில் ,சிவரஞ்சனியில் ஒரு அருமையான இஸ்லாமியப் பாடலைக் கேளுங்கள் .(தகவல் உபயம் எழுத்தாளர் திரு.சுப்பாராவ்)






பெரும்பாலும் ராகமாலிகை எனப்படும் பல்வேறு ராகக்கலவைகளில் சேர்ந்து வருகிறது. இளையராஜாவால் பெரிதும் சிலாகிக்கப்படும் 'சின்னஞ்சிறு கிளியே 'என்ற பாரதியின் பாடலில் 'உன் கண்ணில் நீர் வடிந்தால் என்ற வரிகளுக்குப் பொருத்தமாகச் சிவரஞ்சனியை அமைத்திருப்பார் இசை அமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன்.(சிலர் சிவரஞ்சனிக்கு நெருங்கின ராகமான நீலமணிஎன்றும் சொல்வர்)


பழைய திரைப்படங்களில் அவ்வளவாகப் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் அழியாப் புகழ் கொண்ட இந்தப் பாடல் சிவரஞ்சனியில் அமைந்திருக்கிறது.கடைசிச் சரணத்தில் வேறு ராகத்துக்குப் போய்விட்டாலும் பிரிவின் துயரை ,சொல்லமுடியாத தவிப்பை வெளிப்படுத்த சிவரஞ்சனியே சிறந்தது என்று அமைத்திருக்கிறார் திரை இசைத்திலகம் கே.வி .மகாதேவன்.செவ்வாய் கிரகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடலைப்  பற்றி மேலும் விவரங்கள் தேவைப்படும். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்.


சிவரஞ்சனி என்றாலே என்றென்றும் நம் நினைவிற்கு வருவது ஒரு ஹிந்திப் பாடல்தான்.மென்மையான சோகம் கலந்த காதல் பாடலாக நிரந்தர நினைவுகள் எழுப்பும் பாடல்.லக்ஷ்மிகாந்த் -பியாரிலால் இசையில் .ஏக்துஜேகேலியே. மிக எளிமையான ,ஆனால் அழகும் இனிமையும் கூடிவரும் மெட்டு.




'Pentatonic' என்று அழைக்கப்படும் ஐந்து ஸ்வரங்களை (ஸ,ரி2,க1, ப,த2) உடைய வகையைச் சேர்ந்த சிவரஞ்சனி மெல்லிசைக்கு மிகவும் ஏற்றது. இளையராஜா வழக்கம் போல் ஏராளமான பாடல்களில் பயன்படுத்தி இருக்கிறார்.பொன்மானே கோபம் ஏனோ( ஒரு கைதியின் டைரி),குயில்பாட்டு ஓ வந்ததென்ன (என் ராசாவின் மனசிலே),அடி ஆத்தாடி (கடலோரக்கவிதைகள்) என்று பல பாடல்களில் சந்தோஷமான சூழ்நிலையில் பயன்படுத்தி இருக்கிறார்.நல்லவனுக்கு நல்லவன் படத்தில் வந்த உன்னைத்தானே ஒரு மாஸ்டர்பீஸ்.ஆனாலும் அவரது டாப் சிவரஞ்சனி வரும் பாடல் 'வா வா அன்பே அன்பே' படம் அக்னி நட்சத்திரம்.ஒரு ஹிந்துஸ்தானி சாடையிலான ராகத்தை மேல்நாட்டு பாணியில் அற்புதமான சேர்ந்திசையாகத் தந்திருப்பார்.







சோகமான சூழலுக்கும் ராஜா பயன்படுத்தியிருக்கிறார்.சோலைப் புஷ்பங்களே (இங்கேயும் ஒரு கங்கை) ,குடகுமலைக் காற்றில் ஒரு (கரகாட்டக்காரன்),ஓ ப்ரியா ப்ரியா(இதயதைத் திருடாதே) என்று பல பாடல்கள். ஆனாலும் இரவா? பிரிவா? துயரமா? "கூப்பிடுடா சிவரஞ்சனியை! "என்று இளையராஜா அழைக்கும் போது உருக்குவதற்காகவே வந்துவிடுவாள். வைதேகி காத்திருந்தாள் என்னும் இசையால் நிரம்பி வழியும் திரைப்படத்தில் ஒரு சிவரஞ்சனி.




சிவரஞ்சனி என்று சொல்லிவிட்டு அந்தப் பாடலைச் சொல்லாமல் எப்படி? மூங்கில் இலைக் காடுகளே மாதிரி நல்ல சிவரஞ்சனியைத் தந்திருக்கும் சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.பி பாடும் "அவள் ஒரு மேனகை" பாடலில் முதல் சில வரிகள் சிவரஞ்சனியில் அமைந்திருக்கும்.மூல மெட்டு தெலுங்குப் படத்திலிருந்து சுடப்பட்டது என்றாலும் அருமையான பாடல்.படம்-நட்சத்திரம்அவள் ஒரு மேனகை- இங்கே க்ளிக்கவும்

மலையாளத் திரை இசையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் ரவீந்திரன். கர்னாடக இசையின் பின்னணியில் அமைந்த ஏராளமான வெற்றிப் பாடல்களைப் படைத்திருக்கிறார். ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, பரதம்,கமலதளம் மாதிரி.அவரது இசையில் ஒரு அருமையான சிவரஞ்சனி

விஜய் ஆனந்த என்ற கன்னட இசை அமைப்பாளரைப் பற்றி நமக்குப் பெரிதாக (ஏன் சிறியதாகக் கூட) ஒன்றும் தெரியாது.ஆனால் அவர் 'நான் அடிமை இல்லை' திரைப்படத்தில் ஒரு அருமையான சிவரஞ்சனியைத் தந்திருக்கிறார். கமலுக்கு ஒரு 'தேரே மேரே 'என்றால் ரஜினிக்கு ஒரு 'ஒரு ஜீவன் தான்' 

சமீபகாலமாய்த்  திரைப்படங்களின் உலோகத்தன்மை அதிகரித்து மென்மையான உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு வருவதால் சிவரஞ்சனி மாதிரி  மென்மையான ராகங்கள் அருகி வருகின்றன. எனினும் அபூர்வமாக நல்ல சிவ்ரஞ்சனியைச் சமீபத்தில் கேட்க முடிந்தது.'காதல்' திரைப்படத்தில் 'உனக்கென இருப்பேன்". இசையமைப்பாளர் ஜோஷுவா ஸ்ரீதர் (இவரை எங்கே காணவில்லை?)

 

சோகத்தையும் கலையாக்கும் கலையில் சிவரஞ்சனிக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.




8 comments:

  1. அன்புக்குரிய தோழர் டாக்டர் ராமானுஜம் அவர்களுக்கு

    உங்களை எதில் வரையறுப்பது?

    இப்படி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக விஷயம் முதல், அசைவ சமையல் செய்வது எப்படி வரை தெரிந்து வைத்திருப்பது போதாது என்று, இசை வழியும் எழுத்தோவியத்தை இணையத்தில் தீட்டும் இன்பம் பற்றி என்ன சொல்ல, என்ன கேட்க?

    உங்களது இந்த முத்தான மன வெளிப் பயணத்தில் இடைப் பட்ட சிற்றோடை, பெரு நதி, அருவியின் சாரல், பனிச் சிதறல்கள், ஆலங்கட்டி மழை எல்லாம் கடந்து வந்த எனக்கு, இறுதியில் காதல் வேலையில் அடித்த இடத்தில் அதிர்ந்து போய் நின்றுவிட்டேன்....

    உனக்கென இருப்பேன் என்பது நா.முத்துக்குமாரின் அசாத்திய கவிதை என்பேன்..வெந்நீரில் நீ குளிக்க விறகாகித் தீக் குளிப்பேன், உயிருக்குள் உன்னைக் கலப்பேன், விழி மூடித் தூங்கும் போதும் விலகாது நானிருப்பேன், கனவுக்குள் காவல் இருப்பேன்...என்ற சாகா வரிகள், சிவரஞ்சனியின் உருக்கி வார்த்த சோக தளத்தின் மீது பொறிக்கப் பட்டவை என்று அறிந்து இன்னும் உருகிப் போனேன்...

    கொல்லும் அய்யா, மக்களை, இசைப் பாடல்களின் உள் முகவரிகளை இசையின் பிரிசத்தில் வண்ணக் கலவையாக விரித்து வையுங்கள், ரசிகர்கள் அன்றாடத்தின் நச்சரவில் இருந்து மீண்டு தம்மைப் பறிகொடுத்துத் தேடிக் கொண்டிருக்கட்டும் பொன்னான வேறு உலகை..

    வாழ்த்துக்கள்..

    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  2. அன்புக்குரிய தோழர் டாக்டர் ராமானுஜம் அவர்களுக்கு

    உங்களை எதில் வரையறுப்பது?

    இப்படி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக விஷயம் முதல், அசைவ சமையல் செய்வது எப்படி வரை தெரிந்து வைத்திருப்பது போதாது என்று, இசை வழியும் எழுத்தோவியத்தை இணையத்தில் தீட்டும் இன்பம் பற்றி என்ன சொல்ல, என்ன கேட்க?

    உங்களது இந்த முத்தான மன வெளிப் பயணத்தில் இடைப் பட்ட சிற்றோடை, பெரு நதி, அருவியின் சாரல், பனிச் சிதறல்கள், ஆலங்கட்டி மழை எல்லாம் கடந்து வந்த எனக்கு, இறுதியில் காதல் வேலையில் அடித்த இடத்தில் அதிர்ந்து போய் நின்றுவிட்டேன்....
    உனக்கென இருப்பேன் என்பது நா.முத்துக்குமாரின் அசாத்திய கவிதை என்பேன்..வெந்நீரில் நீ குளிக்க விறகாகித் தீக் குளிப்பேன், உயிருக்குள் உன்னைக் கலப்பேன், விழி மூடித் தூங்கும் போதும் விலகாது நானிருப்பேன், கனவுக்குள் காவல் இருப்பேன்...என்ற சாகா வரிகள், சிவரஞ்சனியின் உருக்கி வார்த்த சோக தளத்தின் மீது பொறிக்கப் பட்டவை என்று அறிந்து இன்னும் உருகிப் போனேன்...

    கொல்லும் அய்யா, மக்களை, இசைப் பாடல்களின் உள் முகவரிகளை இசையின் பிரிசத்தில் வண்ணக் கலவையாக விரித்து வையுங்கள், ரசிகர்கள் அன்றாடத்தின் நச்சரவில் இருந்து மீண்டு தம்மைப் பறிகொடுத்துத் தேடிக் கொண்டிருக்கட்டும் பொன்னான வேறு உலகை..

    வாழ்த்துக்கள்..

    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  3. என் கோரிக்கையை ஏற்று சிவரஞ்சனி பற்றி அருமையான பதிவை எழுதியதற்கும் அதில் என் பெயரை குறிப்பிட்டதற்கும் நன்றி. என்னும் விடுபட்டவைகளை சேர்த்து உங்கள் பதிவை செழுமைப் படுத்த ஆசையாக இருக்கிறது. உன்கண்ணில் நீர் வழிந்தால் நீலமணி தான். சிவரஞ்சனி இல்லை. அதில் காந்தாரம் வராது.சுத்த மத்யமம் அதோடு தாவும் சின்ன தா வரும்.
    அதிகாலை நேரம் பாடலை ஒரு முறை இப்போது கேட்டுவிட்டு எழுதுகிறேன். அது இன்னும் பல சிவரஞ்சனிகளை நினைவூட்டுகிறது. டி .ராஜேந்தர் அருமையாகப் போட்டது நானும் உந்தன் உறவை ... அதில் உள்ள ஹம்மிங் அடடா... அதே போல எனது கானம் உன்காதில் விழவில்லையா . மனோஜ் கியானும் தான் பங்கிற்கு சிவரஞ்சனியில் விளையாடி இருக்கிறார்.கண்மணி நில்லு காரணம் சொல்லு, மாமரத்து பூ எடுத்து, செந்தூர பூவே நீயும் என்று படத்துக்கு ஒரு சிவரஞ்சனி வைத்து விடுவார்.
    சிவரஞ்சனியின் அழகு மேல் காந்தாரத்தைப் பிடிக்கும் போது அப்படியே க2௨வையும் சேர்த்துப் பிடிப்பதில் தான் இருக்கிறது. நீங்களும் நானும் பட்டியலிட்ட பாட்டுக்கள் எல்லாவற்றிலும் சிவரஞ்சனியின் ஜீவன் தெரியும் இடங்களில் இசை அமைப்பாளர்கள் எதை செய்திருப்பார்கள்.
    என்றாலும் இத்தனை அற்புதமான பதிவில் கே வி மகாதேவன் சிவரஞ்சனியை அப்படியே பிழிந்திருக்கும் கலைமகள் கைப்பொருளே வை விட்டுவிட்டீர்களே டாக்டர்!

    ReplyDelete
  4. அன்புள்ள சுப்பாராவ். எனக்கு சிவரஞ்சனி பற்றி எழுத ஊக்கமளித்தமைக்கு நன்றி. ஓரிரு விளக்கங்கள்
    1.உன் கண்ணில் நீர் வடிந்தால் நீலமணி என்று மத்தியமத்தை வைத்துச் சொன்னாலும் அதைச் சிவரஞ்சனி என்றும் கூறலாம். காரணம் மத்யமஸ்ருதிக்கு(அதாவது மத்தியமத்தைச் ஷட்ஜமாக வைத்து) மாற்றினால், அதாவது ம1=ஸ ப=ரி த1=க1 என்று வாசித்தால் சிவரஞ்சனியாகும்.இதை ஒரு அற்புதமான சுருதி பேதமாய்ப் பண்ணியிருக்கிறார் சுப்பராமன்.மேலும் நீலமணியில் வரும் க நீ ஆகியவை இந்தச் சரணத்தில் வருவதில்லை.
    நானும் உந்தன் உறவை -அற்புதமான பாடல்.அதே மாதிரிதான் செந்தூரப் பூவேவும் .மனோஜ் கியானை எழுத வேண்டும் என்றி நினைத்திருந்தேன் .எப்படியோ மறந்துவிட்டது.
    கலைமகள் கைப்பொருளே பாடலுக்கு என் உயிரையே கொடுப்பேன்.ஆயினும் கே.வி.எம் வழக்கம் போல் (ஆயிரம் நிலவே வா, நலம்தானா பாணியில்) அந்நியஸ்வரங்களை நிறையச் சேர்த்திருக்கிறார் என நினைக்கிறேன்.தங்கள் கூரிய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  5. Dear Dr Ramanujam Sir,

    Really astonished to see the widest coverage on Sivarnajani. Well done.
    I can add only tail piece.
    Vindhaiyilum periya vindhaiyadi sung by Sri kazhugumalai kandaswamy( Disciple of Madurai Somu). There naina savanu - by Kishore kumar.

    Thodarattum ummudaiya Pani.

    Deva

    ReplyDelete
  6. அன்புள்ள டாக்டர்,
    இன்று தான் உங்கள் வலைப்பதிவை முதன் முறையாகப் பார்க்கிறேன். இது வரை எப்படி பார்க்காமல் போனேன் என்ற வருத்தமும் ஏற்பட்டது. உங்கள் பதிவுகள் அனைத்தையும் விரைவில் படிக்க முடிவெடுத்து விட்டேன். இன்றே தொடங்கியும் விட்டேன்.
    அன்புடன்,
    சீனி மோகன்

    ReplyDelete
  7. என்ன டாக்டர் நீங்கள் ஹிந்தி எதிர்ப்பு கோஷ்டியா?
    சங்கர் ஜெய்கிஷன் இல்லாமல் சிவரஞ்சனியா?
    ஜானே கஹான் கயே வோ தின் (மேரா நாம் ஜோககர்)
    ஓ மேரே சனம் (சங்கம்)
    Baharo Phool Barsao(suraj)
    இந்த மூன்றும் milestones அல்லவா!
    மேலும்
    kvm இன்
    இதயவீணை தூங்கும்போது (இருவர் உள்ளம)
    masterpiece ஆயிற்றே!
    How come you missed..
    காதலிலே தோல்வியுற்றாள் (கல்யாணபரிசு)
    முடிவாக இந்த சோகராகத்தை தன் மேதமையால் குஷிராகமாக மாற்றிய ARR இன்
    கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்....

    தூள கிளப்பறீங்க டாக்டர்!

    ReplyDelete
  8. இசையில் தொடங்குதம்மா விரக தாபகமே - ஹம்சநாதம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்

    ReplyDelete