Thursday, March 10, 2011

குறுந்தொகை- கொங்குதேர் வாழ்க்கை

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே --குறுந்தொகை 2 ஆம் பாடல்-இறையனார்



நானூறு (401?) பாடல்களைக் கொண்ட நான்கு முதல் எட்டு அடிகளாலான குறுந்தொகையின் இரண்டாம் பாடலாகிய இப்பாடல் திருவிளையாடல் திரைப்படத்தால் புகழ்பெற்றது.இறைவனே (இறையனார்) எழுதியதாக நம்பப் படுகிறது.


கொங்கு- பூவின் மகரந்தம்
தேர்-         தேர்நெடுக்கும்
வாழ்க்கை-வாழும்
அஞ்சிறைத்தும்பி-உள்ளே சிறகுகளை உடைய தும்பி(வண்டு)-(அம் சிறை -அழகிய சிறகுகள்)
காமம் செப்பாது -நான் விரும்பியதைச் சொல்லாது
கண்டது மொழிமோ-நீ கண்டறிந்ததைக் கூறு
பயலியது கெழீய நட்பின் - பல பிறவிகளிலும் நட்புடன் விளங்கும்(கெழி-நட்பு)
மயிலியல்-மயில் போன்ற
செறியியெற் றரிவை- செறிவான பற்களைக்(எயிறு) கொண்ட பெண்
கூந்தலின்-கூந்தலை விட
நறியவும் உளவோ- மணமிகுந்த ஏதேனும் உள்ளதோ
நீ அறியும் பூவே- நீ அறிந்த பூக்களிடம்


செண்பகப் பாண்டியனுக்கு ஏற்பட்ட ஐயத்தைப் போக்க இறைவன் தருமி மூலம்
கொடுத்தனுப்பிய பாடல்


கருத்து:மலர்களில் மகரந்தங்களை எடுத்து வாழும் அழகிய சிறகுகளை உடைய தும்பியே! நீ அறிந்த பூக்களில்  என்னுடன் பல பிறப்புகளில் நட்புடன் பழகும் மயில் போல் அழகுடைய அழகிய பற்களை உடைய பெண்ணில் கூந்தலைவிட மணமுடையது ஏதேனும் உள்ளதோ?எனக்குப் பிடித்ததைக் கூறவேண்டாம்.நீ கற்றறிந்ததைக் கூறு !


திருவிளையாடற் புராணத்திலும் இந்தப் பாடல் மேற்கோள் காட்டப் படுகிறது


தென்னவன் குல தெய்வமாகிய
மன்னர் கொங்குதேர் வாழ்க்கை இன்றமிழ்
சொன்னலம் பெறச் சொல்லி நல்கினார்
இன்னல் தீர்ந்தவன் இறைஞ்சி வாங்கினான்


52 ஆம் படலம் 88 ஆம் பாடல்


குறிஞ்சித் திணைக்குரிய கூடலும் கூடுதல் நிமித்தம் பொருள்படும் அற்புதப் பாடல்.
இள வேனிற்காலத்தில் தும்பியினம் மகரந்தங்களைத் தேடும் எனும் செய்தியும் காணப் படுகிறது.பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா என்ற விவாத்ம் பாண்டியன் அவையில் நடக்க வழி வகுக்கிறது.இன்றைய கவிஞர்களைப் போல் அல்லாமல் நக்கீரன் குற்றம் குற்றமே என்கிறான்


கற்றைவார்ச் சடையான் நெற்றிக் கண்ணினைச் சிறிதே காட்ட
பற்றுவான் இன்னும் அஞ்சான் உம்பரார் பதிபோல் ஆகம்
முற்று நீர் கண்ணானாலும் மொழிந்த நும் பாடல் குற்றம்
குற்றமே என்றான் தன் பால் ஆகிய குற்றம் தேரான்  --106 ஆம் பாடல்
(உம்பரார் பதி-இந்திரன்)




இயற்கையுடன் இணைந்தது  பழந்தமிழர் வாழ்வு.


கண்டு ரசிக்க
http://www.youtube.com/watch?v=m-xLGALYZyk&playnext=1&list=PL3270FF7E6A99F404




இக்காலத் திரைப்படங்க்களில் இது போன்ற காட்சியை நினைத்துப் பார்க்க முடியுமா?வாழ்க ஏ.பி.நாகராஜன்! 





6 comments:

  1. https://youtu.be/QLq1LoabFiY திருவிளையாடல் படத்திற்கு முன்னரே "நான் பெற்ற செல்வம்" படத்தில் சிவாஜிகணேசனே இறைவனாகவும், நக்கீரனாகவும் அற்புத காட்சி

    ReplyDelete
  2. அது இதைவிட நன்றாக இருக்கிறது.அதில் சிவாஜி கணேசன் அவர்களே பரமசிவனாகவும் தவிர நக்கீரர் யாகவும் நடிக்கவில்லை வாழ்ந்திருப்பார்

    ReplyDelete
  3. Google Deivame Vaazhga... 🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  4. தங்கள் தமிழ் இலக்கிய ஆர்வம் மற்றும் புலமை பார்த்து வியக்கிறேன்.மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. Thiruvilaiyadar puraanam arumpatha uraiyudan ethavathu padhipagam veliyittulatha?

    ReplyDelete
  6. இரத்தினசாமி தங்கைய்யன்May 5, 2023 at 7:09 AM

    இதிலிருந்து பண்டைக்கால தமிழ் பெண்கள் கூந்தலில் எப்போதும் மலர் செருகியிருப்பார்கள் என்று தெரிய வருகிறது. எனது நாவலான வனதேவதை அமேசானில் மின்னூலாகக் கிடைக்கும். அதை வாசித்தால் இந்தப் பாடல் வரிகளின் சந்தேகம் நீங்கும்.

    ReplyDelete