Thursday, February 19, 2015

தமிழ்த் தாத்தா உ வே சா அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்

தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் நூலகத்தில் உ வே சா அவர்களின் என் சரித்திரம் நூலில் கி. வா ஜகன்னாதன் அவர்களால் எழுதப் பட்ட முன்னுரை.
உ வே சாவின் வரலாற்றைத் தமிழ் பேசும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

(ஒரு சிறு திருத்தம் இந்த இணையதளத்தில் அவரது பிறந்த ஆண்டை 1885 என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளனர் . அது 1855)



ஐயரவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்

-கி .வா.ஜகன்னாதன்


இந்த நூற்றாண்டில் தமிழ் இலக்கிய உலகில் இரண்டு பெரிய
மலைகளைப் போன்ற பெரியவர்கள் தமிழ்மொழிக்குப் புதிய ஒளியைக்
கொடுத்தார்கள். ஒருவர் ஸ்ரீசுப்பிரமணிய பாரதியார். மற்றொருவர் ஸ்ரீ
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் கவிஞர் பாரதியார்
தம்முடைய புதிய கவிகளால் தமிழ்த்தாய்க்குப் புதிய அணிகளைப் பூட்டினார்.
ஐயரவர்களோ, பல காலமாக மங்கி மறைந்து கிடந்த பழைய அணிகளை
மீட்டும் எடுத்துக் கொணர்ந்து துலக்கி மெருகூட்டிப் பூட்டி அழகு
பார்த்தார்கள்.
தமிழ்த் தாத்தா என்று தமிழ்க் குழந்தைகளால் அன்புடன்
போற்றப்பெறும் ஐயரவர்கள் உண்மையில் சென்ற நூற்றாண்டிலேயே
தம்முடைய அரும்பெருந் தொண்டைத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள்
1885-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி தோன்றினார்கள்.(ஒரு சிறு திருத்தம் இந்த இணையதளத்தில் அவரது பிறந்த ஆண்டை 1885 என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளனர் . அது 1855)
அவர்கள் தோன்றிய காலத்தில் இருந்த தமிழின் நிலைக்கும் அவர்கள்
மறைந்த காலத்தில் (ஏப்ரல், 1942) தமிழ் உயர்ந்து நின்ற நிலைக்கும்
எவ்வளவோ வேற்றுமை உண்டு. அவர்கள் 1887-ஆம் ஆண்டில்
சீவகசிந்தாமணியை அச்சிட்டு வெளியிட்டார்கள். அது முதல் இறுதிக்
காலம் வரையில் தமிழ்த்தாயின் அணிகளை ஒவ்வொன்றாகப் புதுப்பிக்கும்
அற்புதமான தொண்டில் தம் காலம் முழுவதையும் அவர்கள் செலவிட்டார்கள்,
அவர்கள் தோன்றிய காலத்தில் பெரும் புலவர்களும் சங்க நூல்கள்
என்று பெயரளவிலே தெரிந்து கொண்டிருந்தார்களே ஒழிய அவை இன்னவை
என்பது அவர்களுக்குத் தெரியாது. கோவலன் கதை என்ற ஒரு நாடோடிக்
கதையையும் அதில் வரும் கண்ணகியையும் மாதவியையும் அறிவார்களே
யன்றிச் சிலப்பதிகாரத்தையும் அதில் உள்ள பாத்திரங்களையும்
அறியமாட்டார்கள். அகநானூறு, புறநானூறு என்ற இரண்டுக்கும் உள்ள
வேறுபாடு இன்னதென்று தெரியாது, மணிமேகலை எந்தச் சமயத்தைப் பற்றிய
நூல் என்பதும் தெரியாது.
இன்றோ பள்ளிக்கூடத்திற் பயிலும் மூன்றாம் வகுப்பு மாணவனுக்கும்
பாரியைப்பற்றிய வரலாறு தெரியும். சேரன் செங்குட்டுவனுடைய வெற்றியைப்
பற்றி மேல் வகுப்பு மாணாக்கர்கள் படிக்கிறார்கள். பள்ளிக் கூடங்களிலும்
கல்லூரிகளிலும் புறநானூறு, குறுந்தொகை பத்துப்பாட்டு முதலிய சங்க
நூல்களிலுள்ள பகுதிகளைப் பாடமாக வாசிக்கிறார்கள் பிள்ளைகள்.

பல ஆண்டுகளுக்கு முன் திராவிட மொழிகளின் அமைப்பைப் பற்றிக்
கால்டுவெல் என்ற ஆங்கிலேயர் அழகான நூல் ஒன்று எழுதினார். ‘திராவிட
மொழிகளின் ஒப்பியல்’ (Comparative Phonology of Dravidian
Languages
) என்பது அந்து நூலின் பெயர். அதை இன்றும் சிறந்த நூலாகப்
புலவர்கள் கொண்டாடுகிறார்கள். அதை எழுதினவருக்கே எட்டுத் தொகை,
பத்துப்பாட்டு ஆகியவை கிடைக்கவில்லை. அந் நூல்களின் அமைப்பை
அவர் அறியார்.
இன்றோ சங்ககாலத் தமிழரைப் பற்றியும், நூல்களைப் பற்றியும் பல
பல நூல்கள் வந்திருக்கின்றன, பல வகையான ஆராய்ச்சிகள் நிகழ்ந்து
வருகின்றன. தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்று சங்க காலத்தைப்
போற்றிப் பாராட்டிப் பெருமிதத்துடன் பேசுகிறோம். தமிழர் பண்பாடு,
தமிழர் நாகரிகம், தமிழர் மரபு என்று நமக்குரிய தனிச் சிறப்பைப் பல
மேடைகளில் புலவர் பெருமக்கள் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். பாரத
நாட்டில் உயிருடன் வழங்கி வரும் மொழிகள் யாவற்றிலும் பழையது.
இலக்கிய வளம் பொருந்தியது, இலக்கண வரம்புடையது, எதையும்
வழங்கத்தக்க சொல்வளமுடையது என்றெல்லாம் மற்றவர்களும் ஒப்புக்
கொள்ளும் நிலை தமிழுக்குக் கிடைத்திருக்கிறது.
தமிழ்த் தாத்தாவின் அரும்பெருந் தொண்டே இத்தனை உயர்வுக்கும்
மூலகாரணம் என்பதைத் தமிழ்ப் புலவர்கள் அறிவார்கள். தமிழ் வரலாற்றில்
ஐயரவர்களுக்கு என்று ஒரு தனிப் பகுதி இருக்கும் என்பதில் சந்தேகமே
இல்லை.
ஐயரவர்களுடைய ஊர் தஞ்சை ஜில்லாவில் உள்ள உத்தமதானபுரம்
என்ற சிறிய கிராமம். சங்கீத வித்துவானகிய ஸ்ரீ வேங்கட சுப்பையருக்கும்
ஸ்ரீமதி சரசுவதியம்மாளுக்கும் புத்திரராக ஐயரவர்கள் பிறந்தார்கள்.
அவர்களுடைய தந்தையார் பல இடங்களுக்குச் சென்று தம்முடைய இசைத்
திறமையைக் காட்டி ஊதியம் பெற்று வாழ்ந்து வந்தார்கள். குறிப்பிட்ட
வேலையும் குறிப்பிட்ட சம்பளமும் இல்லாவிட்டாலும் அக்காலத்தில் வாழ்ந்தமக்களின் அன்பும் கலையபிமானமும் அவரைப் போன்ற கலைஞர்களைப்
பாதுகாத்து வந்தன. அங்கங்கே இருந்த செல்வர்களும் ஜமீன்தார்களும்
அவருக்குச் சிறப்புச் செய்து, வாழ்க்கையைச் சுவையுடையதாக்கினார்கள்.
இந்தச் சூழ்நிலையில் ஐயரவர்கள் வளர்ந்து வந்தார்கள். தந்தையாரிடமும்
சில திண்ணைப் பள்ளிக் கூடத்து ஆசிரியர்களிடமும் இப்பேரறிஞர்
இளமையில் கல்வி பயின்றார். அக்காலத்தில் சில நூல்களையே
கற்றிருந்தாலும், அவற்றைத் திருத்தமாகப் பயின்று மற்றவர்களுக்கும்
தெளிவாகப் பாடம் சொல்லும் சிறிய புலவர்கள் அங்கங்கே இருந்தார்கள்.
அத்தகையவர்களாகிய அரியலூர்ச் சடகோபையங்கார், செங்கணம் விருத்தாசலரெட்டியார் 
முதலியவர்களிடம் ஐயரவர்கள் சில நூல்களைக் கற்றார்கள். ஐயரவர்களுடைய
தந்தையாருக்குத் தம் குமாரரைப் பெரிய சங்கீத வித்துவானாக ஆக்க
வேண்டுமென்ற ஆசையே முதலில் எழுந்தது. ஆனால் இவர்களுக்குத் தமிழில்
உண்டான பெரும் பசியைக் கண்ட போது அந்தத் துறையில் இவர்களை
ஈடுபடுத்துவதுதான் தம்முடைய கடமை என்பதை அவர் உணர்ந்தார்.
அதனால் எங்கெங்கே தமிழ் நூல்களைப் பாடம் சொல்லுகிறவர்கள்
இருக்கிறார்களோ, அந்த அந்த ஊர்களுக்கெல்லாம் குடியேறித் தம்முடைய
குமாரர் தமிழ்க் கல்வி பெறும்படி செய்து வந்தார்.
அப்போது திருவாவடுதுறை ஆதீனத்தில் பெருங் கவிஞராகவும் சிறந்த
புலவராகவும் திகழ்ந்த மாகவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தது. அவர் பல மாணாக்கர்களுக்குப்
பாடம் சொல்லிக் கொடுத்துவருகிறார் என்ற செய்தி ஐயரவர்களின் தந்தையார்
காதில் விழுந்தது. “நம் பிள்ளையையும் அந்த மகாவித்துவானிடம் சேர்த்து
விட வேண்டும்” என்ற ஆவல் அவருக்கு உண்டாயிற்று.
1870-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐயரவர்கள் வாழ்க்கையின்
இரண்டாம் பகுதி தொடங்கியது. மாயூரத்தில் இருந்த மகாவித்துவான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் இவர்கள் மாணாக்கராகச் சேர்ந்தார்கள்.
அதுமுதல் அந்தத் தமிழ்க் கடலின் மறைவு வரையில் (1-2-1876) உடனிருந்து
பலவகையான தமிழ் நூல்களைக் கற்றார்கள். அப்புலவர்பிரான் அவ்வப்போது
இயற்றிவந்த நூல்களை எழுதுவதும் திருவாவடுதுறை மடத்தின்
ஆதீனகர்த்தர்களாக இருந்த ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடன் பழகுவதும், அந்த
மடத்துக்கு வரும் தமிழ்ப் புலவர்களிடத்திலும் வடமொழி வாணரிடத்திலும்
சங்கீத வித்துவான்களிடத்திலும் நெருங்கிப் பழகுவதும் போன்ற செயல்களால்
இவர்களுக்கிடைத்த அநுபவம் வேறு யாருக்கும் கிடைத்தற்கு அரிது.
அத்தகைய அநுபவத்தினால் ஐயரவர்கள் பெற்ற பயன் மிக அதிகம். எந்தப்
பொருளானாலும், எத்தகைய மனிதரானாலும், எந்த விதமான
நிகழ்ச்சியானாலும் கூர்ந்து உணரும் இயல்பு ஐயரவர்களிடம் சிறந்திருந்தது.
அதனால் அக்காலத்தில் அவர்கள் கண்டவையும் கேட்டவையும்
அப்படியப்படியே இவர்களுடைய இளநெஞ்சில் நன்றாகப் பதிந்தன. பெரிய
ஆதீனத்தின் தொடர்பால் பலவகை மக்களின் பழக்கம் இவர்களுக்கு
ஏற்பட்டது. பெரும்புலவருடைய தொடர்பால் பல நூல்களில் அறிவு
உண்டாயிற்று. பல கலைஞருடைய நட்பினால் பல துறையிலும் அறிவு
சிறந்தது. வெவ்வேறு ஊர்களுக்குத் தம்முடைய ஆசிரியருடன் செல்ல
வேண்டியிருந்தமையால் பல தலங்களைப்பற்றிய செய்திகளும் அங்கங்குள்ள பெரிய மனிதர்களின் 
பழக்கமும் ஐயரவர்களுக்குக் கிடைத்தன.
பிள்ளையவர்கள் மறைவுக்குப்பின்பு திருவாவடுதுறை ஆதீனத்தின்
தொடர்பு ஐயரவர்களுக்குப் பின்னும் இறுகலாக அமைந்தது. அதற்கு முன்
பிள்ளையவர்கள் மூலமாக ஆதீனத்தின் தொடர்பு இருந்துவந்தது. அதற்குப்
பின் ஆதினகர்த்தராகிய ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடமே பாடம் கேட்கப்
புகுந்தார்கள் ஐயரவர்கள். அதோடு மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும்
பணியையும் மேற்கொண்டார்கள். இதனால் இவர்களுடைய தமிழறிவு உரம்
பெற்று வந்தது.
அக்காலத்தில் கும்பகோணம் அரசாங்கக் காலேஜில் தியாகராச
செட்டியார் என்ற பெரும்புலவர் தமிழாசிரியராக இருந்தார். அவர்
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் படித்தவர். அவர்
ஓய்வு பெறவேண்டிய காலம் வந்தபோது அவர் தம்முடைய இடத்தில்
ஐயரவர்களை நியமிக்கும்படி செய்தார். 1880-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்
16-ஆம் தேதி முதல் ஐயரவர்கள் கல்லூரித் தமிழாசிரியராக வேலை பார்க்கத்
தொடங்கினார்கள்.
நிறைந்த தமிழ்ப் புலமை, எதையும் சுவையாக எடுத்து விளக்கும்
ஆற்றல், இசைப்பயிற்சி, அன்பு முதலிய இயல்புகளை இவர்கள் சிறப்பாகப்
பெற்றிருந்தமையால் கல்லூரி மாணாக்கர்கள் உள்ளத்தை எளிதில்
கவர்ந்தார்கள். ஆங்கில மோகம் உச்சநிலையில் இருந்த காலம் அது.
ஆங்கிலமும் பிறபாடங்களும் கற்பிக்கும் பேராசிரியர்களிடம்
மாணாக்கர்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்ல மதிப்பு இருந்து வந்தது.
இங்கிலீஷ்காரர்கள் சிலர் அந்தப் பாடங்களைக் கற்பித்து வந்தார்கள்.
அதனாலும் அவற்றிற்கும் அவற்றைக் கற்பிப்பவர்களுக்கும் மதிப்பு
உயர்ந்திருந்தது. தமிழாசிரியர்களுக்கு அத்தகைய மதிப்பு இல்லை.
அவர்களுக்குக் கிடைத்த ஊதியமும் மிகக் குறைவு. கல்லூரிச் சேவகனுக்கு
அடுத்தபடி சம்பளம் வாங்கினவர் தமிழாசிரியரே.
இத்தகைய நிலையில் ஐயரவர்கள் மாணாக்கர்களின் உள்ளத்தைப்
பிணித்ததோடு மற்ற ஆசிரியர்களுக்குச் சமமான மதிப்பையும் பெற்றார்கள்.
ஆங்கிலம் சிறிதும் அறியாவிட்டாலும், ஆண்டில் இளைஞராக இருந்தாலும்,
அவர்களுடைய புலமையும், பண்பும் மாணாக்கர்களும் ஆசிரியர்களும்
பிறரும் இவர்களைச் சிறந்தவர்களாக மதிப்பதற்குரிய காரணங்களாக இருந்தன.
காலேஜில் ஆசிரியராகப் புகுந்த ஆண்டிலேயே (அக்டோபர் மாதம்)
ஐயரவர்களுக்கும் கும்பகோணத்தில் ஜில்லா முன்சீபாக இருந்த சேலம்
இராமசுவாமி முதலியாரவர்களுக்கும் பழக்கம்உண்டாயிற்று. அந்தப் பழக்கமே ஐயரவர்கள் பிறந்ததன் பயனைத் 
தமிழுலகத்துக்குக் கிடைக்கும்படி செய்யக் காரணமாயிற்று. முதலியார்
சிந்தாமணியைப் பாடம் சொல்லும்படி ஐயரவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அதனை முன்பு பாடம் கேட்டறியாதவர்கள் இவர்கள்; அந்த நூலைப்
பார்த்தது கூட இல்லை. ஆயினும் தைரியமாகப் பாடம் சொல்லப்
புகுந்தார்கள். ஏட்டுச் சுவடியை வைத்துக் கொண்டு பாடம் சொன்னார்கள்.
சிந்தாமணியில் ஆழ்ந்தார்கள். தாம் அதுகாறும் படித்த நூல் குவியல்களால்
அறியவொண்ணாத பலவற்றை அதில் கண்டார்கள். அது ஜைனசமய
நூலாதலால் பல செய்திகள் ஐயரவர்களுக்கு விளங்கவில்லை. அவற்றை
யெல்லாம் ஜைனர்களிடம் சென்று கேட்டு அறிந்தார்கள். சிந்தாமணிக்கு
நச்சினார்க்கினியர் எழுதிய உரையைப் படித்தார்கள். அவருடைய
உரைப்போக்கும் அதனிடையே அவர் காட்டியிருக்கும் மேற்கோள்களும்
ஏதோ ஒரு புதிய பிரபஞ்சத்தையே அவர்கள் அகக்கண்முன் தோற்றுவித்தன.
தமிழ் மக்கள் செய்த தவத்தின் பயனாக இவர்களுக்குச் சிந்தாமணியைப்
பதிப்பிக்கவேண்டும். என்னும் எண்ணம் உண்டாயிற்று. ஆராய்ச்சி
நடைபெற்றது. மேட்டுமடையில் நீர் பாய்வதுபோன்ற வேதனையைப் பல
சமயத்தில் அவர்கள் அடைந்தார்கள். ஆனாலும் விடாப்பிடியாக முயன்று,
1887-ஆம் ஆண்டு சிந்தாமணியை வெளியிட்டார்கள். அந்தப் பதிப்பைக்
கண்ட தமிழ் நாட்டினர் மிகவும் ஆனந்தமடைந்து களிக்கூத்தாடினர். அது
முதல் ஐயரவர்கள் பழைய நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் முயற்சியில்
ஈடுபட்டார்கள்.
சிந்தாமணிக்குப்பின் பத்துப்பாட்டு வெளியாயிற்று. அதன்பின்
சிலப்பதிகாரம், புறநானூறு, மணிமேகலை என்பவை வந்தன. புறநானூறு
கண்ட தமிழுலகம் ஏதோ ஒரு புதிய கண்டத்தைக்கண்டு பிடித்ததுபோன்ற
மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அடைந்தது. ஆராய்ச்சிக்காரர்களுடைய மூளை
வேலை செய்யத் தொடங்கியது. பழந்தமிழ் மக்களின் வாழ்க்கையைப்பற்றிய
ஆராய்ச்சிகளை அறிஞர்கள் எழுதத் தொடங்கினார்கள்.
இவ்வாறு ஐயரவர்கள் பழந்தமிழ் நூல்களை அச்சிடும் தொண்டை
விடாது செய்து வந்தார்கள். ஐம்பெருங் காப்பியங்கள் என்று சேர்த்துச்
சொல்லும் நூல்களில் கிடைத்த சிலப்பதிகாரம், மணிமேகலை,
சீவகசிந்தாமணி 
என்ற மூன்றையும் அவர்கள் வெளியிட்டார்கள்.
பத்துப்பாட்டை அவர்களுடைய உழைப்பால் தமிழுலகம் காண முடிந்தது.
எட்டுத்தொகைகளில் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு
என்பன மலர்ந்தன.பெருங்கதை, புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல் சங்கர 
நமச்சிவாயர் உரை என்னும் இலக்கிய இலக்கணங்கள் வெளிவந்தன.
இவற்றையன்றித் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்
திருக்காளத்திப் புராணம் 
முதலிய பல புராணங்களும், கோவை, உலா,
கலம்பகம், பிள்ளைத்தமிழ், இரட்டை மணிமாலை, அந்தாதி, குறவஞ்சி 

முதலிய பலவகைப் பிரபந்தங்களும் குறிப்புரைகளுடன் வெளிவந்தன.
தம்முடைய ஆசிரியர் இயற்றிய பிரபந்தங்கள் எல்லாவற்றையும் தொகுத்து
ஒரு தொகுதியாக வெளியிட்டார்கள்.
ஏட்டில் இருக்கிறதை அப்படியே பெயர்த்துக் காகிதத்தில் அச்சிடும்
வேலை அன்று, ஐயரவர்கள் செய்தது. புத்தகப் பதிப்பு அவ்வளவு எளிதாக
இருந்தால் எத்தனையோ அறிஞர்கள் அதை முன்பே செய்து புகழ்
பெற்றிருப்பார்கள். ஏட்டில் உள்ள பாடம் பிழைபட்டிருக்கும்; பல இடங்களில்
இன்னதென்றே ஊகிக்க முடியாத அளவுக்குச் சிதைவு உண்டாகியிருக்கும்;
அவற்றையெல்லாம் பல நூல் அறிவினாலும் இயற்கையான அறிவுத்
திறமையாலும் விடாமுயற்சியினாலும் திருவருளின் துணையாலும் ஆராய்ந்து
செப்பம் செய்யவேண்டும். ஐயரவர்கள் திக்குத் தெரியாத காட்டில் நுழைந்து
தாமே வழியமைத்துக் காடு நாடாக்கிய பெருந்தொண்டர். அவர்களுடைய
பதிப்பு என்றாலே தமிழ்ப் புலவர்களும் ஆராய்ச்சியாளரும் போற்றிப்
பாதுகாக்கிறார்கள். ஒவ்வொரு நூலிலும் முன்னே உள்ள முகவுரையும்,
ஆசிரியர் வரலாறும், நூலைப்பற்றிய குறிப்புக்களும், பிற செய்திகளும் மிகமிக
அற்புதமானவை. விளக்கங்களும் பல நூல்களிலிருந்து எடுத்த ஒப்புமைப்
பகுதிகளும் காட்சி தரும். அவை ஐயரவர்களுடைய பரந்த நூற்புலமைக்குச்
சான்றாக விளங்கும். இறுதியில் நூலில் கண்ட சொற்களுக்கும்
பொருள்களுக்கும் அகராதி இருக்கும். ஆசிரியரின் உதவியின்றியே பயிலும்
வகையில் அமைந்தவை ஐயரவர்களின் பதிப்புக்கள்.
இந்த முறையில் கண்ணாடிபோல் மேல் நாட்டாரும் வியக்கும் வண்ணம்
ஆங்கிலமே அறியாத ஒரு தமிழ்ப் பண்டிதர் புதிதாக இத்துறையில் புகுந்து
சாதித்தார் என்று சொன்னால் அது அதிசயமான செயல் அல்லவா?
முன்னுரை முதலியவற்றை எழுதி உரைநடை எழுதும் ஆற்றலைச் சிறிய
அளவிலே வெளிப்படுத்திய ஐயரவர்கள், தாம் பதிப்பித்த நூல்களின்
அங்கமாக மணிமேகலைக் கதைச் சுருக்கம், புத்த தர்மம், உதயணன் கதைச்
சுருக்கம் என்பவற்றை எழுதியளித்தார்கள்.கும்பகோணம் கல்லூரியிலிருந்து சென்னைக் கல்லூரிக்குத் 
தமிழாசிரியராக 1903-ஆம் ஆண்டு வந்தார்கள். அப்பால் அந்தப்
பதவியிலிருந்து 1919-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்கள். கல்லூரி ஆசிரியர்
என்ற அலுவலிலிருந்து ஓய்வு பெற்றார்களேயன்றி மாணாக்கர்களுக்குப்
பாடம் சொல்லும் ஆசிரியத் தொண்டிலிருந்தோ, நூல்களைப் பதிப்பிக்கும்
பதிப்பாசிரியத் தொண்டிலிருந்தோ, அவர்கள் ஓய்வு பெறவில்லை.
உண்மையில் அவ்வேலைகள் பின்னும் பன்மடங்கு பெருகின.
கல்லூரியில் வேலையாக இருந்தபோதே வீட்டில் தனியே இவர்களிடம்
பலர் பாடம் கேட்டார்கள். மகாபாரதப் பதிப்பாசிரியராகிய
மகாமகோபாத்தியாய ம.வீ. இராமாநுஜாசாரியார், திருப்பனந்தாள் காசி
மடத்தின் அதிபராக விளங்கிய சொக்கலிங்கத் தம்பிரான் முதலிய பலர்
இவ்வகையில் பாடம் கேட்டவர்கள். இவர்களிடம் இருந்து ஆராய்ச்சி
முறையைக் கற்றுக் கொண்டு தாமே நூல்களை வெளியிட்டவர்கள் சிலர்.
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், இ.வை. அனந்தராமையர் முதலியவர்கள்
இத்தகைய வரிசையில் இருந்தவர்கள். இவர்கள் ஏடு தேடி ஆராய்ந்து
பதிப்பித்து வெளியிட்ட நூல்களைப் படித்து அந்த முறையையும் அறிந்த சில
புலவர்கள் பழந்தமிழ் நூல்களைத் தாமே வெளியிடும் முயற்சியில்
ஈடுபட்டார்கள்.
1924 முதல் 1927 வரையில் ஐயரவர்கள் ராஜா அண்ணாமலை
செட்டியாரவர்கள் நிறுவிய மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் தலைவராக
இருந்தார்கள்.
அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு, தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதோடு
தம்முடைய அனுபவங்களை எளிய இனிய உரைநடையில் எழுதத்
தொடங்கினார்கள். இந்தத் துறையில் ஐயரவர்கள் தொண்டாற்றப் புகுந்தபோது
பெரியவர்களும், சிறுவர்களும், ஆடவரும், பெண்டிரும், புலவர்களும் பிறரும்
ஒருங்கே இவர்கள் எழுத்தைப் படித்து இன்புற்றார்கள். பத்திரிகைகளில்
இவர்கள் கட்டுரைகள் வெளியாயின. மாதந்தோறும் முதலில் ஐயரவர்களின்
கட்டுரை ஒன்றைத் தாங்கிச் சிறப்படைந்தது கலைமகள். தமிழ் நாட்டுப்
பத்திரிகைகளின் மலர்கள் ஐயரவர்களின் கட்டுரைகளோடு மலர்ந்தன.
தம்முடைய ஆசிரியராகிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
பிள்ளையவர்களின் வரலாற்றை வெளியிட வேண்டும் என்னும் நெடு நாள்
ஆர்வத்தால் அவர்கள் பல செய்திகளைத் தொகுத்து வைத்திருந்தார்கள்.
அவற்றைக் கொண்டு மிகவிரிவாக அச்சரித்திரத்தை இரண்டு பாகங்களாக
எழுதி முடித்தார்கள். தம்முடைய வாழ்க்கையில் எந்தப் பெரியார்களோடு பழக நேர்ந்ததோ 
அவர்களைப் பற்றிய வரலாறுகளையும் நிகழ்ச்சிகளையும் சுவை ததும்ப
எழுதினார்கள். தியாகராச செட்டியார் சரித்திரம் கோபாலகிருஷ்ண பாரதியார்
சரித்திரம், மகா வைத்தியநாதையர் சரித்திரம், கனம் கிருஷ்ணையர் வரலாறு
என்பன இவர்களுடைய அன்பையும் எழுதும் ஆற்றலையும் நன்றியறிவையும்
விளக்குகின்றன. சிலருடைய வரலாற்றைச் சுருக்கமாக எழுதினார்கள்; இந்த
வகையில் பூண்டி அரங்கநாத முதலியார், மணி ஐயர், வி.கிருஷ்ணசாமி ஐயர்,
திவான் சேஷையா சாஸ்திரிகள் முதலியவர்களைப் பற்றிய கட்டுரைகள்
வெளியாயின.
இவர்களுடைய பெருமையைத் தமிழுலகம், மெல்ல மெல்ல
உணரலாயிற்று. அரசாங்கத்தார், 1906-ஆம் ஆண்டு ‘மகாமகோபாத்தியாயர்’
என்ற பட்டத்தை அளித்தார்கள். 1917-ஆம் ஆண்டு பாரத தர்ம
மண்டலத்தார், ‘திராவிட வித்தியா பூஷணம்‘ என்ற பட்டத்தை வழங்கிச்
சிறப்பித்தார்கள். 1925-ஆம் ஆண்டு காமகோடி பீடாதிபதிகளாகிய ஸ்ரீ
சங்கராசார்ய ஸ்வாமிகளவர்கள், ‘தாக்ஷிணாத்திய கலா நிதி’ என்ற
பட்டத்தை அருளினார்கள். இவர்கள், சென்னை, மைசூர், ஆந்திரா, காசி
முதலிய இடங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் பல வகையில் கலந்து
தொண்டாற்றினார்கள். 1932-இல் சென்னைப் பல்கலைக் கழகத்தார் ‘டாக்டர்’
பட்டம் அளித்தார்கள்.
1935-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 6-ஆம் தேதி ஐயரவர்கள் 80-
ஆண்டுகள் நிறைந்து விளங்கினார்கள். அவர்களுடைய சதாபிஷேக
விழாவைத் தமிழுலகம் முழுவதும் கொண்டாடியது. சென்னையில் பல்கலைக்
கழக மண்டபத்தில் இவ்விழா மிகமிகச் சிறப்பாக நடைபெற்றது.
பழுத்த பருவத்திலும் ஐயரவர்கள் தமிழ்த் தொண்டு வீறு கொண்டு
நடைபெற்றது. குறுந்தொகையை விரிவான உரையுடன் பதிப்பித்தார்கள்.
சிவக்கொழுந்து தேசிகர், குமரகுருபரர் என்னும் புலவர்களின் பிரபந்தத்
திரட்டுகள் குறிப்புடன் வெளியாயின. தமிழன்பர்களின் விருப்பப்படி ஆனந்த
விகடனில் வாரந்தோறும் தம்முடைய வரலாற்றை “என் சரித்திரம்” என்ற
தலைப்பில் எழுதத் தொடங்கினார்கள். 1940-ஆம் ஆண்டு ஜனவரியில்
தொடங்கிய அது 122 அத்தியாயங்களோடு சுயசரித்திரமாக வரும் நிலை
பெற்றது.
1942-ஆம் ஆண்டு உலகப் பெரும்போர் நிகழ்ந்தபோது ஐயரவர்கள்
தம் குடும்பத்துடன் திருக்கழுக்குன்றம் சென்று
தங்கினார்கள். ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி அந்தத்தலத்தில் தமிழ்த் தாயின்
தவப்புதல்வராகிய ஐயரவர்கள், தாம் பிறந்த காலத்தில் கண்ட நிலையை
மாற்றித் தமிழ் மக்களைப் பழந்தமிழ்ச் செல்வத்துக்கு உரிமையுடையவர்களாக
ஆக்கி, ஆசி கூறிவிட்டு இறைவன் திருவடியை அடைந்தார்கள்.
1948 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ஆறாம் தேதி சென்னை அரசினர்
கல்லூரியில் ஐயரவர்களுடைய முழு உருவச் சிலையொன்றை நிறுவினார்கள்.
தமிழ்க் கடலின் விரிவை மீட்டும் தமிழுலகத்துக்குக் காட்டிய ஐயரவர்களின்
திருவுருவம் பெருங் கடலை நோக்கி நிற்கும்கோலத்தை இன்றும் கண்டு
மகிழலாம்.
1955-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி ஐயரவர்கள் பிறந்து
நூறு ஆண்டுகள் நிறைவடைந்தன. அதனை, அவர்கள் பெயர் கொண்ட நூல்
நிலையம் மிகச் சிறப்பாகக் கொண்டாடிற்று.
ஐயரவர்களுடைய குணநலங்கள் பல சிறந்த பண்பு உள்ளவர்கள்
இவர்கள். இணையற்ற ஆசிரியர். பலவகை மாணாக்கர்களுடைய உள்ளம்
அறிந்து தக்கவண்ணம் பாடம் சொல்வதில் வல்லவர்கள். புலமைப்
பெருங்கடல்; கவிஞர்; சிறந்த எழுத்தாளர். முன்னும் பின்னும் கண்டறியாத
அற்புதப் பதிப்பாசிரியர். சுப்பிரமணிய பாரதியார் தாம் பாடிய பாட்டில்
  
 “கும்பமுனி எனத்தோன்றும் சாமிநாதப் புலவன்”
 
என்று ஐயரவர்களைச் சிறப்பிக்கிறார்.
  
  “பொதியமலைப் பிறந்த தமிழ் வாழ்வறியும்
           காலமெலாம் புலவோர் வாயில்
  துதியறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்
           இறப்பின்றித் துலங்குவாயே”
 
என்று அவர் பாடியிருப்பதற்குமேல் நாம் என்ன சொல்ல முடியும்?


No comments:

Post a Comment