Sunday, April 17, 2011

யானே கவிஞன்


நானும் என் நண்பர் எஸ் வி வேணுகோபாலனும் இணைந்து எழுதிய விபரீதக் கட்டுரை
ல்லோரும் இன்னாட்டு மன்னர்களோ இல்லையோ,எல்லோரும் கவிஞர்கள் என்பதில் சந்தேகமில்லை.ஜனத்தொகைக் கனக்கெடுப்பில் கவிஞர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.எனினும் தமிழ்நாட்டின் ஜனத்தொகையில் முக்கால்வாசிக்கும் மேற்பட்டவர்கள் கவிஞர்கள் என்பதில் யாதொரு ஐயமும் இராது.மீதி இருப்பவர்களும் பேனா,பென்சில் பற்றாக்குறையால் கவிஞராவதில்லை என்பது ஒரு பொருளாதார ஆய்வின் முடிவு.

நேரடியாகக் கவிதை எழுதுபவர்கள் ஒருபுறம் இருக்கத் 'தாம் செய்வது இன்னதென்று அறியாமாலேயே'கவிஞர்களாகுபவர்கள் உண்டு.இவர்கள் பெரும்பாலும் இன்னொருவர் எழுதிய பாடலைத் தமது அனுபவம்,மொழி ஆளுமை,கலாச்சாரம்,இசை அறிவு,ஓசைநயம் போன்றவற்றால் தூண்டப்பட்டுத் தமக்கேற்றவாறு பண்படுத்திக்கொள்கின்றனர்(பண்-பாடல்).

சமயத்தில்அப்படியான புதிய வரிகள்மூலப் பாடலை முந்தி நிற்பதாகவும் அமைவதுண்டு. இப்படித்தான் ஓர் அன்பர்,கேள்வியின் நாயகனே என்ற அபூர்வ ராகங்கள் படத்தின் புகழ் பெற்ற பாடலின் முதல் அடியிலேயே தனது கை வரிசையைக் காட்டினார். கேள் விநாயகனே என்று பக்தி பரவசமாக அதை மாற்றியிருந்தார்... இன்னொருவர்அன்னக் கிளி உன்னைத் தேடுதே என்ற இளையராஜாவின் திரை நுழைவு அற்புத உருவாக்கத்திற்குக் கொஞ்சம் மெருகேற்றினார்எந்த உள் நோக்கமும் இல்லாமல்.  ஆவாரம் பூ மேனி வாடுதே என்று வருவதை அந்தச் சிருங்கார சிந்தனையாளர் அவரன்பு மேனி வாடுதே என்று அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார் அந்தக் காதல் குழைவை..

திரைப் பாடல்களைக் கேட்க ரேடியோ ஒன்றே கதி என்ற காலம் ஒன்று இருந்தது. கொஞ்சம் வசதி வைத்தால்ரெகார்ட் ப்ளேயர். திரையரங்குகளில் சினிமா பாட்டு புத்தகம் விற்பனை மசால் வடைசமூசா விற்பனையை மிஞ்சும் அளவு நடப்பதுண்டு.  அப்படியான பாடல் புத்தகங்கள் பலவற்றிலும்பாடல் ஆசிரியர் கண்ணதாசன்வாலிஉடுமலை நாராயண கவி என்று ஒரு மரியாதைக்குப் போட்டுவிட்டுயாரோ ஒரு வரகவி தமது சொந்தப் பாக்களை அருளி இருப்பார் உள்ளே.  சில பாடல்களுக்கு முன் தொகையறா என்று வேறு போட்டு மிரட்டுவார்கள்.  பாட்டுப் புத்தகத்தை வைத்துக் கொண்டு பாடிக் கொண்டே போனால்மேடு பள்ளங்களில் விழுந்து எழுந்து ஒரு இசைப் பயணம் நடத்த வேண்டியிருக்கும்.  அதை அடுத்த முறைவானொலியில் ஒலிப்பதோடு ஒப்பிட்டுக் கேட்டுப் பிழைகளைத் திருத்த உட்கார்ந்தால் புதிய பாடல் உருவாகி முடிந்திருக்கும்...

இவ்வாறு கவிதையை உருமாற்றம் செய்பவர்கள் சிறுவயதிலேயே இதற்கான பயிற்சியைப் பெரும்பாலும் தன்னைவிடச் சற்று அதிகம் கெட்டுப் போன நண்பர்களிடம் பெறுவர்.அறிந்த பாடலைச் சந்தம் கெடாமல்அச்சிடமுடியாத வார்த்தைகளால் பாடும் கலையை அறிந்தபின் திரைப்பாடல்களைப் பற்றிய மாயை அகன்றுவிடுகிறது.மீட்டரை மேட்டரால் நிரப்புவதே பாடல் என்று உணர்ந்தபின் அவனுக்கு எந்தப் பாடலைப் பாடவும் வார்த்தைகளை அறிந்திருக்க வேண்டும் என்ற மனத்தடை அகல்கிறது.ஸ்பானிஷ் மொழிப் பாடலாக இருந்தாலும் ஒரு முறை கேட்டாலே மீண்டும் அவனால் பாடமுடிகிறது.

ஒரு காலத்தில் ஏராளமான இந்தித் திரைப்படப் பாடல்களை ஒரு தலைமுறையே இஷ்டத்திற்கு இட்டுக்கட்டிப் பாடிக்கொண்டிருந்தது.'ஒ மாரியா ஒ மாரியா என்ற இந்திப் பாடலை (சாகர்) சோமாரியாசும்மாருய்யா! என்று தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு மொழிமாற்றம் செய்து கொண்டிருந்தனர்.  . 

பிறகு சங்கராபரணம் போன்ற படங்களின் வரவினால் தெலுங்குப் பாடல்களைப் பாடி ஒரு அறிவிக்கப் படாத தமிழிசை இயக்கமே நடத்திவந்தனர்.அந்த மரபின் தொடர்ச்சியாக இப்பொழுதும் தியாகப்பிரம்மத்தின் பாடல்களைப் பாடகர்கள் கேட்பவர்கள் கண்ணீர் மல்குமாறு(உணர்ச்சியால் அல்ல உச்சரிப்பால்) பாடுகிறார்கள்.எந்தரோ மஹானுபாவுலு என்ற பாடலை எந்த ரோ என்று கேட்டாலும் பரவாயில்லை எந்த ரோம   ......ஹானுபாவுலு ...எந்த..ரோம என்று பாடுவர்.ரோமம் என்பது தலைமுடியின் இன்னொரு பெயராய் வேறு இருந்து தொலைக்கிறது 

எண்பதுகளில் தமிழகமெங்கும் புதிய புதிய திரை இசைக் குழுக்கள் பெருமளவு பிரபலம் ஆகி வந்தன.  அவற்றில் சம்பிரதாயமாக முதல் பாடல் கடவுள் மீது தான் இருக்கும்.  இந்துக் கடவுள் தான். பெரும்பாலும்புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே வாக இருக்கும்.  அதில் ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் என்று வரும் இடத்தைப் பல குழுக்களிலும்மதுராவை நமது மதுரையோடு குழப்பிக் கொண்டு பாடலை இப்படி பாடுவதைப் பல மேடைகளில் கேட்டுக் குமைந்திருக்கிறோம்: மீன் கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் என்று எடுத்து விடுவார்கள். 

ஆனால்கானா கலைஞர்கள் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டார்கள்.  மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் என்ற டி எம் எஸ் அவர்களின் கம்பீரமான பாடலைகள் ஆனாலும் பாப்பாரப்பட்டி கள் ஆவேன் என்று தொடங்கி பீடா ஆனாலும் சவுகார்பேட்டை பீடா(வா)வேன்    என்று பல்லவியை அழகாய் அமைத்தனர். நாத்திக பிரியர்கள்திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா என்ற சூலமங்கலம் ராஜலக்ஷ்மி -பி.சுசிலாவின் பாடலைதிருப்பரங்குன்றத்தில் மொட்டை அடித்தால் முருகா,திருத்தணி மலை மீது மயிர் முளைக்கும் என்று வெறுப்பேற்றினார்கள்

திரைப்படப் பாடகர்களும் சளைத்தவர்களல்ல.டி.எம்.எஸ் போன்று சுத்தமான உச்சரிப்புக் கொண்டவர்களின் பாடல் வரிகளையே நாம் கைமா போடுவோம்.மலர்ந்தும் மலராத பாதி மலர் போல பாடலில் வரும் விழி வண்ணமே ,கலை அன்னமே இளந்தென்றலேதமிழ் மன்றமேஎன்ற வார்த்தைகளைக் கட்டவிழ்ந்த சுதந்திரடத்துன் கலப்பு இனப்பெருக்கம் செய்து அறுபதுக்கும் மேற்பட்ட வகைகளில் பாடுவோம்.பாடகர் உச்சரிப்பு சற்றுப் புரியவில்லை என்றால் விடுவோமா?ஜன கன மன புரியவில்லை என்று பாடாமல் இருக்கிறோமா?

எஸ்பிபியின் குழைவான உச்சரிப்பினால் வார்த்தை சரியாக விளங்காமல் 'வாயிலே தேனிலா என்று வானிலிருந்த நிலவை வாயினருகில் கொணர்ந்தவரும் உண்டு.அதே மாதிரி எஸ் பி பி ஆயிரம் நிலவே வா வில் நல்லிரவு என்று பாடியிருப்பார்.ஆனால் பலருக்கு நள்ளிரவு தான் துணையிருக்கும்.இன்றும் ஆயிரம் மலர்களே மலருங்கள் என்ற நிறம் மாறாதா பூக்கள் படப் பாடலின் சரணத்தை ஜென்சி 'வாயிலே வெண்ணிலாஎன்று பாடுவதுபோல்தான் எனக்குக் கேட்கும்.ஜென்சிக்கு எல்லாமே வல்லினம் தான் .'மலறுங்கள்'.'நெறுங்கிவந்து தான்.ஆனால் யேசுதாஸின் "தெருக்கோவிலே ஓடி வா" வை (நினைவாலே சிலை செய்து-அந்தமான் காதலி) மிஞ்ச எதனாலும் முடியாது.  தெருமுனையில் இருந்த பிள்ளையார் கோவிலின் ஞாபகமே இந்தப் பாடலைக் கேட்கும் போது வரும்.

இவர்களாவது அண்டை மாநிலத்தவர். தமிழுடன் தொப்புள் கொடி உறவாது இருக்கும் .ஆனால் வடக்கிலிருந்து வருபவர்களது உச்சரிப்பைக் கேட்டால் வடக்கிருந்து உயிர் விடலாம் என்று தோன்றும்.ஒரு பாடலில் 'பெரியம்மா பெண்ணைக் கட்டுஎன்று பாடுகிறார் பாடகர். இது ஏதோ முறைதவறிய பாலியல் விவகாரம் என்று தோன்றும்.ஆனால் உண்மையான வரிகள் "பிரியமாப் பெண்ணைக் கட்டு"என்பதேயாகும்.அதே பாடகர் பாடிய ஒரு பாடலில் 'கண்கள் என்ன அனகோண்டா ?" என்று பாடியிருப்பார்.கண்களை மலைப்பாம்பிற்கு ஒப்பிட்ட கவிஞரது சிந்தனையைப் பாராட்டிய பின்புதான்  'கண்கள் என்ன அணுகுண்டா?'  என்பதைத் தான் பாடகர் அவ்வாறு பாடியிருக்கிறார்  என்பது தெரியவரும்.

     செம்மொழியான தமிழ்மொழியையே தும்மலாய்,இருமலாய் வெளியிடுபவர்கள் மலாய் மொழியென்றால் விடுவோமா? ப்ரியா படத்தில் ஹத்தியக்கு சுக்காவா ஸ்லாலுவக்கு ஜிந்த்தாவாஎன்ற தொகையறாவைத் தொகையலாக்கி துவம்சம் செய்து 

விடுவோம். 'பத்தியத்து சுக்காவா?லாலுவுக்கு ஜிந்தாபாத்.சதா பாண்டுரங்கன் தெரியுமா சதா நீ ஹரி ஹரி சொல்லு மக்கா என்றெல்லாம் சின்னா பின்னமாகி மகிழ்வோம்.

          ஒரே பரமாத்மாவின் பல்வேறு வடிவங்களே ஜீவாத்மாக்கள் என்ற விசிஷ்டாத்வைத வேதாந்தத்திற்கு இணங்க ஒரே பாடலைப் பல்வேறு வடிவங்கள் மூலம் பாடிமகிழ்கிறோம்.யானோ பாடகன்?யானே கவிஞன்!!

No comments:

Post a Comment