Friday, January 13, 2012

காட்டப் படும் மறுகன்னம்

காட்டப்படும் மறு கன்னம் 
(Bank Worker's Unity January இதழில் வந்தது)

கிறிஸ்துமஸுக்கு முந்தினம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழாவில் அவரது எழுத்தில் வெளிவந்த சிறுகதையான ‘ஆம் புருனோ அவர்கள் குற்றவாளிகளே!” என்ற சிறுகதையை ஜெயராம் குழுவினர் அருமையான நாடக வடிவமாக்கி இருந்தனர். மனிதன் தோன்றிய காலம் முதலே அவனது தேடல்கள் துவங்கி விட்டன. புதிதாக ஒன்றைக் கண்டறியும் போது அவனது பழைய நம்பிக்கைகள் மாறுகின்றன. மாற்றங்கள் சிலரது இருப்பை அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
மதநம்பிக்கைகள் இறுக்கமாகி மாற்றங்களுக்கு உடன்படமுடியாத போது எதிர்ப்பவர்களை நம்பிக்கைக்கு எதிரானவனாகக் குற்றம் சாட்டுகின்றன. வானவியல் சம்பந்தமான புதிய உண்மைகளைச் சொன்னதால் புருனோவை மதத்துரோகி என்று தீர்ப்பளித்து அவரை உயிரோடு எரிக்கிறது ரோமன் நியாயசபை.
“தண்டிப்பதற்கான காரணத்தைத் தேடுவது நியாயவாதிகளுக்கு எளிதானது. தண்டனையை முடிவு செய்துவிட்டு அதை நிறைவேற்றுவதுதானே அதிகாரம்”என்று எஸ்.ரா கூறுகிறார். நம்பிக்கை உள்ளவர்களுக்கு எல்லாமே எளிமையானவை.ஆனால் படித்தவன் தன்னை மட்டுமன்றி உலகேயே குழப்புகிறான்”
இது போன்ற அருமையான வரிகளுடன் அமைந்திருக்கிறது இச்சிறுகதை.இது போல் உலக இலக்கியங்களிலும் உண்மையான கிறிஸ்துவைப் பற்றிய விசாரணைகள் பல இடம் பெற்றுள்ளன. உடனடியாக நினைவுக்கு வருவது தாஸ்தாயவஸ்கியின் கரமசாவ் சகோதரர்களில் வரும் ‘The Grand Inquisitor” என்ற அற்புதமான பகுதி.

கிறிஸ்துவின் பிறந்தநாளன்று டால்ஸ்டாயையும் தாஸ்தாயவ்ஸ்கியையும் நினைக்காமல் இருக்கமுடியாது .இருவருமே மதத்தின் தேவைகளையும் போதாமைகளையும் பற்றித் தங்கள் படைப்புகளில் சலிக்காமல் பேசியவர்கள். தாஸ்தாயவஸ்கியின் கிறிஸ்து டால்ஸ்டாயினுடையவரை விட அதிக நெகிழ்ச்சித் தன்மை உடையவர். இறுக்கமான மத நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டவர். குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் நாயகனும் கிறிஸ்துவிடம்தான் சரணடைகிறான்.

அதிலும் கரமசாவ் சகோதரர்களில் வரும்' The Grand Inquisitor' பகுதி மதமும் அதிகாரமும் இணைந்து செயல்படுகின்றன என்பதைப் பற்றிய ஒரு விசாரணையாக இருக்கிறது. மதத்துரோகம் செய்யும் நபர்களை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் நபருக்கு Inquisitor என்று பெயர். நாவலில் இவான் என்ற கதாபாத்திரம் இது பற்றி ஒரு நெடுங்கவிதை எழுதியிருப்பதாகத் தன் சகோதரன் அல்யுஷாவிடம் கூறுவதாக அமைந்திருக்கிறது இப்பகுதி.

கிறிஸ்து தாம் இறந்த 1500 (நாவலின் காலம் 1880) வருடங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர்த்தெழுந்துவருவதாக ஒரு சம்பவத்தைக் கற்பனை செய்கிறார் ஆசிரியர். மதத்தின் பெயரால் மக்களின் மீது தமது அதிகாரத்தை நிறுவியிருப்பவர்கள் கிறிஸ்துவையே மதத்துக்கு எதிரானவர் என்று கூறிச் சிறைப்படுத்துவதாகக் காட்டுகிறது அப்பகுதி. இதே போன்ற ஒரு புனைவை நாம் ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலில் காணலாம்.

முக்கியமாக டால்ஸ்டாய் உலகில் எந்த எழுத்தாளர்களும் செய்யாத வகையில் கசாக் ராணுவத்தால் பாதிக்கப்பட்ட Dukhobars என்ற இனத்துக்காகப் புத்துயிர்ப்பு என்ற நாவலை எழுதி அதில் வந்த வருமானத்தை அவர்களுக்குக் கொடுத்தார். ‘டுகோபார்ஸ்’ இனம் தம்மை ஆன்மீகக் கிறிஸ்துவர்கள் என்று அழைத்தனர். கொல்லாமை , சுய ஒழுக்கம்,தன்னிறைவு அஹிம்சை, ராணுவத்திற்கு எதிர்ப்பு போன்ற பல கொள்கைகளைக் கொண்டிருந்தனர். இக்கொள்கைகளை டால்ஸ்டாயிடமிருந்து அறிந்து கொண்ட காந்தி அவற்றைத் தம்வாழ்விலும் கடைப்பிடிக்க ஆரம்பித்தார். உண்மையிலேயே அவர்கள் தான் மறுகன்னத்தையும் காட்டும் தூய கிறிஸ்துவர்களாக இருந்தனர்.
அதிகாரம், வன்முறை போன்றவற்றுக்கு எதிராகவும் எளியவர்களுக்குப் பரிவாக உள்ள பெருங்கருணையே கிறிஸ்து. அதையே மாபெரும் இலக்கியங்களும் காண்பிக்கின்றன.

உதவிய நூல்
1.எனதருமை டால்ஸ்டாய்- எஸ்.ராமகிருஷ்ணன். உயிர்மை பதிப்பகம்

No comments:

Post a Comment