Saturday, September 21, 2013

' பார்த்துக் கொண்டே தீர்த்துக் கொண்டே'


செப்டம்பர் மாத புதிய ஆசிரியன் இதழில் வெளிவந்த கட்டுரை

 இன்றைய தினம் (அரசியல்வாதிகள் தான் இப்படி ஆரம்பிக்க வேண்டுமா என்ன?)
இணையத்தில் நாம் என்ன தேடினாலும் கிடைக்கிறது.அடை செய்வதிலிருந்து
அணுகுண்டு செய்வது வரை செயல்முறை விளக்கத்தோடு கிடைக்கிறது. மனித
வெடிகுண்டாகச் செயல்படுவது எப்படி என்ற வீடியோ கூட இருப்பதாகத்
தகவல்.எனக்குத்  தற்சமயம் தேவை இல்லாததால் பார்க்கவில்லை.

How to .....என்று ஆங்கிலத்தில் கூகுளிட்டால் 'குரங்கைக் குளிப்பாட்டுவது
எப்படி?' 'ஈமு முட்டையை உடைப்பது எப்படி?' 'வங்கியில் வாங்கிய கடனைத்
திருப்பிச் செலுத்தாமல் இருப்பது எப்படி?' 'மாமியாரை வீட்டை விட்டு
விரட்டுவது எப்படி?' 'நேர்முகத் தேர்வில் பிட் அடிப்பது எப்படி?' என்று
எத்தனையோ விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.மணிமேகலை பதிப்பகம் வெளியிடும்
புத்தகப் பட்டியலில் உள்ள விஷயங்கள் எல்லாவற்றயும்  தேடிக்கொள்ளலாம்
என்பதால் பழைய பென்சில் தொலைந்து போனால் கூட இணையத்தில்தான் முதலில்
தேடத் தோன்றுகிறது.

நண்பர் ஒருவர் கடை துவங்கினார். அதற்குப் பூஜை போட வந்திருந்த ஒருவர்
செல் போனைப் பார்த்தபடியே மந்திரங்களைச் சொல்லிக்
கொண்டிருந்தார்.என்னவென்று பார்த்தால் 'கணபதி ஹோமம் செய்வது எப்படி ?'
என்று ஒரு வெப்சைட்டைப் பார்த்துக் கொண்டே சொல்லிக்
கொண்டிருந்தார்.ஹோமத்தீயில் போடவும் என்று படித்துவிட்டுத் தவறுதலாகத்
தனது செல்போனையே நெருப்பில் போட்டுவிட்டார்.

அதேபோல் இணையத்தைப் பார்த்தபடியே செல்போனை ஒருவர் ரிப்பேர் செய்தார்.
அதன்பிறகு சென்ட்ரல் ஸ்டேஷனில் எந்த ரயில் எந்த பிளாட்பாரத்தில்
வந்தாலும் இவரது தொலைபேசியில் கனிவான கவனத்திற்கு அறிவிப்பு
வந்துவிடுகிறது.ஒரு சௌகரியம் என்னவென்றால் வெளியூர் சென்ற மனைவி எப்போது
ரயிலில் திரும்பி வருவார் என்று தெரிந்து உஷாராக இருக்கலாம்.

புதிதாகக் கார் வாங்கிய ஒருவர் தன் நண்பனையும் அழைத்துக் கொண்டு காரை
ஓட்டிச் சென்றார்.திடீரென்று காரை ஓட்டியபடியே நண்பரிடம் "உன் செல்போனில்
இண்டர்நெட் பார்க்க முடியுமா?" என்று கேட்டார். ஏன் என்று கேட்ட
நண்பருக்குச் சாவகாசமாகப் பதில் சொன்னார்  " கார் ஓட்டுவது எப்படி என்று
ஒரு இணையதளத்தைப் பார்த்துப் படித்தேன். பிரேக் எப்படிப் பிடிக்க
வேண்டும் என்று பார்க்க வேண்டும்"..


மருத்துவத்திலும் இதுபோல் பலர் இணையத்தைப் பார்த்தபடியே சுயவைத்தியம்
மட்டுமன்றி சுற்றுவட்டாரத்துக்கே வைத்தியம் செய்வதுண்டு.

பெரும்பாலான தகவல்கள் டுபாக்கூரானவை.ஜோதிடத்தில் 'ஆண்மூலம் அரசாளும்'
'பரணி நட்சத்திரம் தரணியாளும்' என்றெல்லாம் வாக்குகள் உண்டு. அவை ஏதோ
எதுகை மோனைக்காக உருவாக்கப் பட்டிருக்கும். உண்மையில் பரணி
நட்சத்திரக்காரர் வீடுவீடாகப் பீட்சா விற்றுக் கொண்டிருப்பார்.அதுபோலவே
மருத்துவத்திலும் இதுபோன்ற இணையதளங்களில் 'காட்டு இலந்தைப் பழம்
சாப்பிட்டால் கணையத்திற்கு நல்லது' என்பது போல் தகவல்களைத்
தெளித்திருப்பார்கள். இதை நம்பி காட்டுக்குள் போய் கரடியிடம் அடிவாங்கி
வருபவர்களும் உண்டு.

மருத்துவர்களும் சில விஷயங்களுக்காக இணையத்தைப் படித்து விஷயங்களைத்
தெரிந்து கொள்வதுண்டு.இணையம் வருவதற்கு முன் படித்த ஒரு நகைச்சுவைத்
துணுக்கு உண்டு.ஒரு டாக்டர் புத்தகத்தைப் படித்துக் கொண்டே ஒரு
நோயாளியின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார்.
புத்தகத்தில் ஒரு இடத்தில் P.T.O என்று போட்டிருந்தது. அவர் நோயாளியைக்
குப்புறப் புரட்டி முதுகில் மீதி ஆபரேஷனை முடித்து விட்டார்.

அதேபோல் இணையத்தைப் பார்த்தபடியே அறுவை சிகிச்சை செய்தார் ஒரு டாக்டர்.
விளக்கம் முடிந்தவும் அந்தப் பக்கத்தை மூடிவதற்காகக் க்ளோஸ் என்று
போட்டிருந்தது. அவரும் க்ளோஸ் செய்துவிட்டார். நோயாளியை!!

No comments:

Post a Comment