Saturday, May 14, 2016

காலை எழுந்தவுடன் காபி


காபி ராகம் ஒரு அருமையான இனிமையான ராகம். காலை நேரம் கேட்க இனிமையாக இருக்கும். பட்டிணத்தில் பூதம் திரைப்படத்தில் ஒரு ரயில் நிலையத்தில் காலையில் காபி ராகத்தை ஹம்மிங்க் செய்வார் கே ஆர் விஜயா. 'காபி வேண்டுமா என்று கேட்டால் காபி ராகத்தைப் பாடுகிறீர்களே' என்று ஜெய்சங்கர் கேட்பார். அந்தப் படத்தில் ஒரு அருமையான காபி ராகப் பாடல் 'அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி' .இது காமராசருக்காகக் கவியரசு கண்ணதாசன் எழுதிய தூது என்றும் சொல்வார்கள். இசை எம் எஸ் வி அல்ல. கோவர்த்தனம்

காபி ராகத்தில் அமைந்த நிறைய பாடல்கள் பிரபலமானவை. என்ன தவம் செய்தனை, (பாவநாசம் சிவன்) ஜகதோத்தாரனா (எம் எஸ் ஐ நா சபையில் பாடியது) போன்றவை அதில் அடக்கம்.  மாண்டலின் என்ற மொண்ணையான வாத்தியத்தில் காபியின் சங்கதிகளைக் கொண்டுவரும் மாமேதை ஸ்ரீநிவாசின் வாசிப்பைக் கேளுங்கள்.

அது போல் ஜகதோத்தாரண எம் எஸ்சின் மாஸ்டர்பீஸ்


குறையென்றுமில்லை பாடலில் வரும் திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா என்ற பகுதி காபி ராகத்தில் அமைந்தது. 

திரைப்பாடல்களில் பல காபி ராகத்தில் அமைந்தவை
1.செந்தமிழ்தேன்மொழியாள்- மாலையிட்ட மங்கை- விஸ்வநாதன் ராமமூர்த்தி 

2.ஏ பாடல் ஒன்று- ப்ரியா- இளையராஜா (ராஜா டச்) 

3.காதல் ரோஜாவே- ரோஜா- ஏ.ஆர் ரஹ்மான் (ஹிந்துஸ்தானி டச்)

4.ஆலங்குயில்- பார்த்திபன் கனவு- வித்யாசாகர் (அசல் ஃபில்டர் காபி) . கபிலனின் குறுங்கவிதைகளும் ஹரினியின் குரலும் இறுதியில் வரும் ஸ்வரக் கோவைகளும் பிரமாதம்.

5.காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்- பூவெல்லாம் உன் வாசம்- வித்யாசாகர் (வித்யாசமான காபி)


வழக்கம் போல் இளையாராஜா வித்யாசமாக காபி ராகத்தைப் பயன்படுத்தியிருப்பார். படம் ஃப்ளாப். ரஜினிக்கு படு ஃப்ளாப் ஆன சில படங்களில் ஒன்று. ஆனால் அந்த பாடல் வித்யாசமான காபி ராகம். பாடல்-அட மாப்பிளே சும்மா மொறைக்காதே. படம் சிவா.
காபி ராகத்தில் அமைந்த மாஸ்டர் பீஸ் என்றால் தும்பி வா தும்பக் குடத்து என்ற ஓலங்கள் என்கிற மலையாளப் படப் பாடல்தான். ராஜாவின் இசையும் பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவும் ஜானகியின் குரலும் அவ்வளவு இனிமை. கடந்த சில மணி நேரங்களாக இப்பாடல்தான் காதுகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

காபி ராகத்தில் இன்னும் பல திரைப்பாடல்கள் உள்ளன. குச்சி குச்சி ராக்கம்மா கூட கொஞ்சம் லைட்டான காபிதான்.
திருமலைதென்குமரி படத்தில் வரும் மதுரை அரசாளும் மீனாட்சி பாடல் பெரும்பாலும் காபி ராகத்திலேயே அமைந்திருக்கும். இசை- குன்னக்குடி வைத்தியநாதன்
சீர்காழி பாடியிருக்கும் ஸ்வரக் கோர்வைகள் அசல் கும்பகோணம் டிகிரி காபி


ராஜரிஷி என்ற திரைப்படத்தில் அமைந்துள்ள பாடல்கள் எல்லாமே செவ்வியல் அம்சத்துடன் விளங்குபவை. அழகிய திருமகனே- மத்யமாவதி
மான் கண்டேன் மான் கண்டேன்- வசந்தா
சங்கரா சிவ சங்கரா- பந்துவராளி- மலேஷியாவின் மாஸ்டர்பீஸ்
ஆடையில் ஆடும்- மாயாமாளவகௌளை
அந்தப் படத்தில் மாதவம் ஏன் மாதவனே என்ற பாடல் ஜானகியின் குரலில் வரும் ஒரு அசத்தலான காபி ராகம். இசைஞானியின் மேதமைக்கு ஒரு சான்று. பாடலும் அழகான சிலேடைகளால் நிறைந்திருக்கும்
மா துறவை நீ அறிவாய் (பெரும் துறவு)
மாதுறவை ஏன் மறந்தாய்(மாது + உறவு)
அருள்கொடு மா தேவா (பெரும் தேவன்)
அருகினில் மாதே வா (பெண்ணே வா)
அந்திமாகலையில் இந்த மேனகைகள் அசையும் அசைவிலே இசைவிலே இடை ஒடிய ஒடிய நடனம் பயிலும் மயிலிதுதானோ - போன்ற வேகமான வரிகளுடன் அமைந்த பாடல்
வழக்கம்போல் விரகதாபத்தைக் குரலில் அருமையாக வெளிப்படுத்த ஜானகி, பாவனைகளில் லட்சுமி.



No comments:

Post a Comment