Saturday, July 2, 2016

காத்திருப்பான் கமலக் கண்ணன்- ராகமாலிகை ,ராகமாளிகை

பிரபல மனநல மருத்துவர் ருத்ரன் அவர்கள் ஒரு அற்புதமான கண்ணன் படம் வரைந்து முகநூலில் பதிவிட்டிருந்தார். தரையில் அமர்ந்து ராதை உருவம் வரைந்து கொண்டு என்று தலைப்பிட்டிருந்தார் அதற்கு. காத்திருப்பான் கமலக் கண்ணன் என்ற திரைப்படப் பாடல் வரிகள் அவை. அந்த அசையா உயிரோவியம் அந்த அழியாப் பாடலை நினைவு கூர வைத்தது.


ஜி.ராமநாதன் என்னும் இசைமேதை கர்னாடக சங்கீதத்தின் அடிப்படையில் ஏராளமான திரைப்பாடல்களைத் தந்திருக்கிறார். மன்மதலீலையை வென்றார் உண்டோ என்று சாருகேசியில் தொடங்கி கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டியக் கட்டபொம்மன், மதுரை வீரன் என ஏராளமான திரைப்படங்கள்; பாடல்கள்.

உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அவர் அமைத்த பாடல்கள் பிரபலமானவை. யாரடிநீ மோகினி என்று மேற்கத்திய பாணியிலும், முல்லைமலர் மேலே என்று தர்பாரி கானடாவிலும் மிளிர்பவை என்றாலும் மகுடம் வைப்பதுபோல் அமைந்தது ராகங்களின் தோரணமாக வரும் காத்திருப்பான் கமலக் கண்ணன் என்ற பாடல்தான். பி.லீலா என்னும் அசாத்திய திறமை வாய்ந்த பாடகி அநாயசமாகப் பாடிய பாடல்தான் இது. பாடல் கே.டி .சந்தானம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பாடல் மூன்று ராகங்களில் தொடுத்த  மாலையாக அமைந்திருக்கிறது.
பாடல் ஆரம்பிப்பது சாருமதி ராகத்தில். நடபைரவியின் குழந்தையான இந்த ராகத்தில் மோக்ஷமு கலதா என்ற தியாகைய்யரின் கீர்த்தனை மிகப் பிரபலம். எம்,டி .ராமநாதன் பாடிக் கேட்டால் மோட்சமே தான். சாரமதி என்று அழைக்கப்படும் இந்த ராகத்தைச் சர்ச்சையில் இழுத்தவர் இசைஞானி இளையராஜா. மரி மரி நின்னே என்ற தியாகைய்யரின் காம்போதி ராகப் பாடலை சிந்து பைரவி திரைப்படத்தில் சாருமதி ராகத்தில் ஏசுதாஸைப் பாடவைத்துப் பாடறியேன் படிப்பறியேன் என்று சித்ராவை அதே ராகத்தில் பதிலடி கொடுக்க வைத்திருப்பார். இது வித்வான்களிடம் சர்ச்சையைக் கிளப்பினாலும் படைப்பாளியின் சுதந்திரமும் ஞானமும் வெளிப்படும் பாடல். அகலிகை போன்ற புராணக்கதைகளைப் புதுமைப்பித்தன் மறுவாசிப்பு செய்யவில்லையா? அதுபோல்தான்.

காத்திருப்பானுக்கு வருவோம். காத்திருப்பின் தவிப்பைச் சாருமதியில் அழகாத் தொடங்கியிருப்பார். பாடல் தாளம் ஆரம்பித்து ஒரு மூன்று அட்சரங்கள் கழித்தேத் தொடங்கும். முக்கால் இடம் தள்ளி என்று சொல்வார்கள்.  முதல் பீட் தொடங்கி ஒரு சின்ன இடைவெளி. தயக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும். முதல் சரணமும் சாருமதியில் ஆத்தங்கரைதனிலே அந்திப் பொழுதிலே என்று மெதுவாகத் தொடங்கிப் பூத்தமென்மலர் போலே புனிதமான வனிதை ராதை வருகையைக் காண என்று தேடலின் பதைபதைப்பை விறுவிறுப்பாகச் சொல்லும். லேசாக சாரமதியிலிருந்து நெருங்கிய ராகங்களான நடபைரவி, ஜோன்பூரி ஜாடையெல்லாம் தெரியும். பெரும்பாலான திரைப்பாடல்கள் எல்லாம் 22 கேரட்தானே. அதுதானே நகைசெய்ய வசதி.

அடுத்த சரணம் திலங்கு ராகத்தில் அமைந்திருக்கும். கேலி செய்ய ஏற்ற ராகம். மனதில் உறுதி வேண்டும் என்று சிந்து பைரவியில் ராஜாவாலும் நல்லதோர் வீணை செய்தே என்று வறுமையின் நிறம் சிகப்பில் எம் எஸ் வி யாலும் புகழ்பெற்ற ராகம். கோபியர் கொஞ்சும் சல்லாபன் என்று தொடங்கி வேய்குழலிசை அமுதூட்டி எழிலொடு சுகம் காட்டும் இன்பத்தமிழ் பேசித் தாவிப் பிடிப்பான் என்ற இடத்தில் திலங்கு ராகத்தைத் தாவிப் பிடித்திருப்பார் பி. லீலா. தரையில் அமர்ந்து ராதை உருவம் வரைந்து கொண்டு என்று கையறு நிலையையும் காட்டியிருப்பார் ராமநாதன்.

மோகனம் இல்லா ராகமாலிகையா? வேடிக்கையாய் செய்வான் அலங்காரம் என்று கம்பீரமாக மோகனத்தில் உயர் ஸ்தாயியைத் தொட்டுவிட்டு வீணை இசைக்கச் சொல்லி என்ற இடத்தில் மோகனமான ஒரு வீணை துணுக்கு பாடுவான் என்று ஒரு ஆலாபனை இறுதியில் வேகமாகப் பாதம் நோகுமே என்று பரிவுடன் காதலின்பமே தந்த நாயகன் அங்கு என்று முத்தாய்பபாக முடியும்.

1958 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் . கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாகியும் காதில் ஒலிக்கும் பாடல். ராகப் பூக்களால்.ராமநாதன் தொடுத்த ராகமாலிகையா இல்லை இசை குடியேற அவர் எழுப்பிய ராக மாளிகையா?..இரண்டுமேதான்.

ஓவியத்தைப் பயன்படுத்த அனுமதித்த டாக்டர்  ருத்ரன் அவர்களுக்கு நன்றி.




காத்திருப்பான் கமல கண்ணன் அங்கே காத்திருப்பான் கமல கண்ணன் கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து கண்ணுறங்காமல் ஆத்தங்கரை தனிலே அந்தி பொழுதினிலே பூத்த மென்மலர் போலே புனிதமான வனிதை ராதை வருகை காண

கோபியர் கொஞ்சும் சல்லாபன் வேங்குழலிசை அமுதூட்டும் எழிலொடு சுகம் காட்டும் தாவி பிடிப்பான்... ஆ... ஆ... ஆ... ஆ... வெண்ணை தயிர் குடத்தை தடுப்பான் தாவி பிடிப்பான் வெண்ணை தயிர் குடத்தை தடுப்பான் தரையில் அமர்ந்து ராதை உருவம் வரைந்து கொண்டு அங்கு

வேடிக்கையாய் செய்வான் அலங்காரம் வீணை இசைக்கச் சொல்லி வேண்டுவான் சில நேரம் பாடுவான்... பாடுவான் அதற்க்கவளாடுவாள் பல நேரம் பாடுவான் அதற்க்கவளாடுவாள் மறு நேரம் பாதம் நோகுமே என்று பரிவுடன் காதலின்பமே தந்த நாயகன் வந்து






2 comments:

  1. அய்யா ராகங்கள் பற்றி இவ்வளவு எழுதி உள்ளீர்கள். மிக்க நன்றி.
    தாங்கள் மருத்துவர் என்பதால் ராகங்கள் மருத்துவத்துக்கு ஏதாவது தொடர்பு உள்ளாதா என்று பார்த்து உள்ளீர்களா...

    ReplyDelete